இளங்கோவன் சார் எங்களின் வகுப்பாசிரியர். 9-ஆம்,
10-ஆம் வகுப்புகள் படிக்கும்போது, புத்தகத்தைப்
பார்க்காமலேயே உலக விஷயங்கள் கலந்து சுவையாக
பாடம் நடத்துவார்.
அப்போது ஒரு நாள் இன்பச் சுற்றுலா சென்றிருந்தோம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் சென்றுவிட்டு, சிவகங்கை
பூங்கா சென்றோம்.
மதிய நேரம். வெயிலில் நடந்து, அலைந்து, களைத்துப்
போய், பசி வயிற்றை உள்ளேயும் வெளியேயும்
கிள்ளியது.
உடனே இனிய நிழல் தரும் மரத்தின்கீழ் அமர்ந்து,
கை கழுவிவிட்டு, லஞ்ச் பாக்ஸைத் திறந்து,
கொண்டு சென்றிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.
எனக்கு பசி மிகுதியாய் இருந்தபடியாலும் சிறிய
பாக்ஸில் குறைவான உணவே இருந்தபடியாலும்
நான் முதலில் சாப்பிட்டு விட்டேன்.
ஆசிரியராய் பணியாற்றிய எங்கள் அண்ணன், இளங்கோவன்
சாருக்கு நண்பர். சாருக்கு என்மீது, தனிப் பிரியம் உண்டு.
நான் சாப்பிட்டுவிட்டதைப் பார்த்த இளங்கோவன் சார்,
என்னிடம், தன்னுடைய மூன்றடுக்கு லஞ்ச் கேரியர்
பாக்ஸில் இருந்த உணவை நீட்டி, "சாப்பாடு வேணுமா
நிஜாம்?" என்று கேட்டார்.
உடனே நான், "பத்தலை சார்" என்றேன்.
"பத்தலைன்னா இந்த சாப்பாடு வேணுங்க்கிறதை
எடுத்துக்கோ" என்றார் சார்.
மீண்டும் உடனே "பத்தலை சார்" என்றேன் நான்.
"அப்படின்னா சாப்பாடு எடுத்துக்கோயேன்" என்றார் சார்.
'சாப்பாடு வேணாம்' என்பதைத்தான் நான் "பத்தலை'
என்று உளறியிருக்கிறேன். சுதாரித்துக் கொண்டேன்.
"இல்லை சார், வயித்திலே இடம் பத்தலை; அதனால்
சாப்பாடு வேணாம்னேன்" என்றேன்.
"ஓ அப்படியா! உளறினாலும் சமாளிச்சிட்டியே, பரவாயில்லை"
என்று சொல்லி சார் சிரிக்கவும் பையன்கள் எல்லோரும்
சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.
-அ .முஹம்மது நிஜாமுத்தீன்.
.