...பல்சுவை பக்கம்!

.

Thursday, June 18, 2020

எங்கள் தந்தை! #146


எங்கள் தந்தை!

என்னையும் என் சகோதரிகளையும் அருகிலிருந்து வளர்த்தவர் எங்கள் அம்மா!

ஆனால், தூர தேசத்தில் இருந்துகொண்டு, எங்களுக்காக உழைத்து, கண்ணும் கருத்துமாய்
ஆர்வமூட்டி கடிதம் மூலம் எங்களை உற்சாகம் தந்து ஆளாக்கியவர்
எங்கள் தந்தை அமரர் *கே.அப்துல் ஹக்கீம்* அவர்கள்!

என்னுடைய மூன்று வயது கால கட்டத்தில் எனது புகைப்படத்தை எடுத்து அனுப்ப எங்கள் அன்னையிடம் கேட்டார்கள்.

ஸ்டுடியோவில் படம் எடுப்பதற்கு வாகாக நான் ஓர் இடத்திலும் உட்காரவோ நிற்கவோ இல்லை(யாம்)!
ஃபோட்டோகிராபர் தன்னிடமிருந்த பேனாவை சற்று தொலைவில் வைத்துவிட்டு, அதை நான் எடுத்துவரும்போது, ஃபோட்டோ எடுத்தார்.

அந்த படத்தைப் பார்த்துவிட்டு, "எதிர்காலத்தில்  எழுத்தாளனாய் வருவான்" என்றார்கள் எங்கள் தந்தை அவர்கள்.



அவ்வாறு அவர்களின் வாக்குப்படியே
பத்திரிகைகளிலும் வலைப்பூவிலும் நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்!

அப்படி சொன்ன எங்கள் தந்தையை நினைத்து,
விய(ந்து பார்)க்கிறேன்!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, June 17, 2020

எனது கேள்வி! எனது பதில்! #145

எனது கேள்வி; எனது பதில்!

'தமிழக எழுத்தாளர்கள் குழுமத்'தின்
'எனது கேள்வி; எனது பதில்' போட்டியில் வென்ற எனது படைப்பு:

கேள்வி:
ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் உங்களுக்குப் பிடித்தது?

பதில்:
எவ்வளவு தூரமாக இருந்தாலும்,
"சென்னைக்கு மிக அருகில்" என்று சொல்லிவிடுவார்கள்! அது தவறுதான்; ஆனால்,
நாம் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது,
'வெற்றிக்கு மிக அருகில்' என்ற எண்ணத்தோடு தொடங்கினால் வெற்றியை அள்ளலாம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...

போட்டியில் பங்குபெற்ற இன்னொரு படைப்பு:

கேள்வி:
வெள்ளம், பூகம்பம், ஆழிப்பேரலை என்ற அழிவுகள் மூலம் நல்லவர்களையும் தீயவர்களையும் இறைவன் அழிக்கிறானே, நியாயமா?

பதில்:
நமது காலில் சில எறும்புகள் ஏறி, அதில் ஓர் எறும்பு நம்மைக் கடித்தால், 10, 15 எறும்புகளை கூட்டமாக அழுத்திக் கொல்கிறோமே, நியாயமா?

இறைவன்
தீயவர்களைக் கொல்வது அவர்களைத் தண்டிக்க!
நல்லவர்களை மரணிக்கச் செய்வது அவர்களை அன்பால் அடைக்கலம் கொடுக்க!

இறைவன் அளவிலா விளையாட்டுடையவன்!
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்

.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, June 11, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 3 #144


உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்! - 3

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்!
வெள்ளை நிறத்தில் தொப்பி, சட்டை, கைலி, மூக்கு கண்ணாடி, கைப்பை மற்றும் ட்ரான்சிஸ்டர் சகிதம் அவர் வந்து என்னிடம்  பேசினார்!

என்னைப்
பற்றி  முன்பே அறிந்து கொண்டிருந்தவர், அவராகவே வந்து  பேசினார்!
நம்ம அலைவரிசையில் பேசி வசீகரித்தார்!

அவரது தம்பியின் திருமணத்திற்கு, என்னையும் ஜாபிர் என்கிற தம்பியையும் கணியூருக்கு அவர் செலவிலேயே அவருடனேயே அழைத்துச் சென்று, திருமணம் முடிந்தபின் எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

கல்லூரி படிப்பு முடித்தபின் சிதம்பரத்தில் அவரது நிறுவனத்திலேயே தற்காலிகப் பணி! பிறகு வெளியேறி பின் மீண்டும் பணி!

புத்தகப் பிரியர்! அனைத்து துறை சார்ந்த நூல்களையும் (காமிக்ஸ் உட்பட) விரும்பி படிப்பார்!

மார்க்க அறிஞர்! நல்ல பேச்சாளர்! சிறந்த எழுத்தாளர்! சில நூல்களும் எழுதியுள்ளார்!

அவரிடமிருந்து பல நன்னெறி,  பொது அறிவு என பல தகவல்கள் பெற வாய்ப்பாய் அமைந்தது அவருடன் எனது பயண (பணி) காலம்.

உடன்பிறவா சகோதரனாய் திகழும்
'சிதம்பரம்- கணியூர் இஸ்மாயில் நாஜி' அவர்கள்,
வாழிய பல்லாண்டு!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Tuesday, June 9, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2 #143




உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2.

மயிலாடுதுறை (மா)வட்டம் குத்தாலத்தில் முதல் சந்திப்பு!
மேலும் மயிலாடுதுறையில் சில சந்திப்புகள்.

பிறகு, மங்கைநல்லூருக்கு அவர் வந்ததன்பின் அவ்வப்போது அவர் வீட்டிற்கு சென்று எழுத்து, பத்திரிகை தொடர்பாக  உரையாடல்.
அவர் 
மயிலாடுதுறை வந்தபின்னே அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதாகவும் பல மணி நேர உரையாடல்களாகவும் வளர்ந்தது! [மேடம் பணி (பள்ளி)க்கு சென்றுவிடுவதால் இடையூறுகளே கிடையா!]

பொழுது போதாமல்
நேரம், காலம் போவது தெரியாமல் பல புதிய, பழைய செய்திகளை சுவாரஸ்யமாகச் சொல்வார்;
நானும் ஆர்வமுடன், ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!

பின்னும்,
தஞ்சை ~ நாகை ~ திருவாரூர் மாவட்ட எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவராக அவர் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

மாதாந்திரக் கூட்டம் கும்பகோணத்தில் தாஜ்மஹால் ஹோட்டலில் மாதத்தின் முதல் ஞாயிறன்று நடக்கும்.

நானும் வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் கலந்து கொள்வதுண்டு!

அன்றிலிருந்து இன்றுவரை என்னிடம் மாறா நட்புடன் என்னை அன்புடன் அரவணைக்கும்,  எமது  பொழுதுபோக்குநர் திலகம்
'சின்னஞ்சிறு கோபு' சார்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, June 7, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் -1 #142


.

*உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்!*

என்னுடன் உடன் பிறப்பு,
சகோதரன் யாரும் இல்லை.
ஆனால், இவரை நான் சந்தித்தது இறைவனின் நாட்டத்தின்படி!

ஊராட்சி மன்ற மூத்த உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகள்.
அரசியல் இயக்க கிளைத் தலைவராக சுமார் 3 ஆண்டுகள். ஊர் நாட்டாண்மை உறுப்பினராக சுமார் 10 ஆண்டுகள்.

சமூகப் பிரச்னைகளினால் பிரிய இருந்த பல குடும்பங்களை சேர்த்து வைத்தவர். ஊரின் நலம்விரும்பி. துக்க காலங்களில் முதல் ஆளாய் உதவிக்கு நிற்பார்.
கருத்துகளை சீர்தூக்கி சொல்வார்.

எனது பல குழப்பமான நேரங்களில் உடனிருந்து ஆறுதல் மொழிகள் தந்து, எனது மூத்த அண்ணனாக, கைகாட்டியாய் வழி காட்டுபவர்.

என்னைக் கவர்ந்த உயர்ந்தவர்
எம்.எஸ்.எம். என்று அழைக்கப்படும் அன்பு
எம்.எஸ்.எம். ஷபீர் அவர்கள்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...