சைக்கிள் ஓட்டலாம், வாங்க!
எனக்கும் எங்கள் தெருவில் இன்னொரு பையனுக்கும் முதன்முதலாக எங்கள் அண்ணன்தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்!
அரை சைக்கிள் என்பார்கள், சின்ன சைக்கிளை!
நமக்கு பெரிய சைக்கிள்தான்! குரங்குப் பெடலும் கிடையாது; பார் கம்பியில் உட்கார்ந்துதான் ஓட்டப் பழகினோம்!
இந்த பக்கத்தில் திண்ணை தாழ்வாரம் இருக்கும். பத்து வீடுகள் தள்ளி அங்கே எலக்ட்ரிக் போஸ்ட்டுக்கு அருகில் ஒரு கருங்கல் கிடக்கும். ஆக, இங்கே புறப்பட்டால் அந்த முனையில் கருங்கல்லில் போய் காலை வைத்துதான் நிறுத்துவோம்! மற்றபடி தரையிலிருந்து ஏறவோ, தரையில் கால் வைத்து நிறுத்தவோ தெரியாது!
இரண்டாவது நாளின் பாதியிலேயே என்னுடன் பழகிய பையன், தரையில் இருந்து உந்தித் தள்ளி சைக்கிள் 'பார் கம்பி'யில் ஏறவும் தரையில் கால் வைத்து நிறுத்தவும் பழகிவிட்டான்!
எனக்கோ நாமும் அவ்வாறு கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் வந்துவிட்டது!
சரி ஏறிடலாம் என்று தரையில் கால் வைத்து உந்தி, உந்தி ஏறுவதற்கு முயற்சிக்கிறேன்; தூக்கி போட கால் எட்டவில்லை.
உந்தி, உந்தியே சென்றதில் மறுமுனையே வந்துவிட்டது! அடடா, இது என்ன வம்பு என்று மனதில் புலம்புகிறேன்!
அங்கிருந்து என் அண்ணனும் அந்த பையனும் உற்றுப் பார்க்கிறார்கள்!
சிறிது நேரம் அமைதியாக யோசித்தேன்!
அதன்படியே, பறப்பட்டேன்! நல்ல வேகமாக தரையில் உந்தி சைக்கிள் வெகு தூரம் செல்லும் வகையில் செய்துகொண்டு, அப்படியே காலை தூக்கி பின்பக்கமாக கொண்டு சென்று அடுத்த பக்கத்தில் போட்டேன்! சீட்டிலும் அமர்ந்துவிட்டேன்!
சைக்கிள் வேகம் குறைந்ததும் 'பாரி'ல் இறங்கி பெடல் செய்து வேகம் எடுத்து, இந்தப் பக்கம் வரும்போது, நிதானமாக பிரேக்கை அழுத்தி காலை ரிவர்ஸ் பாணியில் போட்டு இறங்கினேன்!
ஆக, சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்த எங்கள் அண்ணன் (பெரியம்மா மகன் ஃபாரூக் சார் M.Sc., M.Ed.) அவர்களுக்கு நன்றி!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.