...பல்சுவை பக்கம்!

.

Friday, January 28, 2022

கத்தியின்றி ரத்தமின்றி வித்யா -விமர்சனம்!#162

'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா!' புதின விமர்சனம்.


வீரன்வயல் வி. உதயகுமாரன் எழுதிய 'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா' என்ற புதினத்தின் விமர்சனம் 
.

கதையின் நாயகியாக வரும் வித்யா, மாண்பமை பண்புகளுடன்
சாத்வீக தேவதையாக கதைமுழுவதும் வலம் வருகிறார்.

இங்கே ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். ஆனால் அதை நான் விமர்சனத்தில் கடைசியாக தெரியப்படுத்துகிறேன்.

பொதுவாக பெண்களை 'பலவீனமான பாலினம்' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இக்கதையின் நாயகி வித்யா, தான் போராட வேண்டிய ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து நின்று போராடி அதை வெற்றிகரமாக மாற்றிவிடுகிறார். அதிலும் குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான அணுகு முறைகளாலும் வியக்கத்தக்க அறிவுபூர்வமான செயல்பாடுகளினாலும் அதை சாத்தியப் படுத்துகிறார்.

தெருவில் பாலின சீண்டல்கள் செய்யும் கயவர்களையும் திருத்துகிறார். தொழில் நிறுவன மேலாளரின் கயமைத்தனத்தையும் திருத்துகிறார்.
ஊனமான மணமகனை மறுதலிக்கும் ஒரு பெண்ணையும் அவளது தவறை உணர வைக்கிறார்.

இன்னும் தனது மருமகளையும் அவளது வெறுப்பை மாற்றி தன் மீது பாசம் கொள்ள வைக்கிறார். தனது சம்பந்தியையும் மன்னித்து அவரை மனம் திருந்த வைக்கிறார். 

மேலும் அந்த ஊரின் எம்எல்ஏவையும் கூட அவரது மகனின் உயிரை காப்பாற்றியதன் மூலம் மனம் திருந்த வாய்ப்பு அளிக்கிறார்.

இப்போது நான் சொல்வதாக கூறிய அந்த முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். இப்படியெல்லாம் செய்து மன்னிக்கும் குணம், தயாள குணம் உள்ளவர்களை இந்த உலகம் என்ன சொல்கிறது? 'பிழைக்கத் தெரியாதவன்', 'வெகுளி' என்றெல்லாம் பட்டம்கட்டி பகடி செய்து பேசி, மறைமுகமாக முதுகுக்குப் பின்னால் கிண்டல் செய்கிறது. 

ஆனால் இப்படியான மனிதநேயப் பண்புகள், மாண்புகள் அமையப் பெற்றால் தான் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக, உற்றார் உறவினர்களை அனுசரித்து, நண்பர்களை பேணி வாழ்ந்து கொண்டால்தான், அவர்களின் வாழ்வு என்றும் சிறக்கும்! அவருக்கே இறைவனின் பாதங்களின் கீழ் அடைக்கலம் கிடைக்கும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறார் புதின ஆசிரியர் வீரன்வயல் வீ.உதயகுமாரன் அவர்கள்!

குறிப்பு: நூல் விமர்சனப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இந்த விமர்சனம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


எழுத்தாளர் வீரன்வயல் வீ.உதயகுமாரன்.

நூலினைப் பெற தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 16, 2022

பிக் பாக்கெட் (சிறுகதை) # 161

பிக் பாக்கெட் -சிறுகதை
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


பிக் பாக்கெட் (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன். 

புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன. 

அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன். 

"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய். 

இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான். 

'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
 *


திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
++++++++++++++++++++++++++++++

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...