...பல்சுவை பக்கம்!

.

Monday, September 26, 2022

தாயார் தயாரித்த தம்ரூட்! #173

தாயார் தயாரித்த தம்ரூட்! #173



தாயார் தயாரித்த தம்ரூட்!

காலையில் ரொட்டி (பிரட்) வாங்க அடுமணைக் கடைக்கு (பேக்கரி ஷாப்) சென்றிருந்தேன்.

கடைக்காரர் 'பிரட்'டைக் கொடுக்கும்போதே, "தம்ரூட் இருக்கு வேணுமா? கால் கிலோ 90 ரூபாய்! ஒரு கிலோ 350 ரூபாய்தான்!" என்று ஆசைமூட்டினார். எனக்கு எங்கள் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.

எனது சிறுவயதில் எங்கள் அம்மா 'ரவ்வாடை' எனும் 'தம்ரூட்' செய்வார்கள்.




ர(வ்)வா, முட்டை, பால், ஜீனி, நெய், முந்திரி அனைத்தையும் கலந்து பாத்திரத்தில்  வைத்து அடுப்பில் ஏற்றி தீமூட்டுவார்கள்!

அந்தநேரம் நான் கையை நீட்டி பணியார மாவை கேட்பேன்! மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் ஊற்றுவார்கள்!
அதை நான் (நக்கி) சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்; மறுபடியும் சிறிது ஊற்றுவார்கள்.
"உனக்கு மாவுக்கும் ஆசை; பணியாரத்திற்கும் ஆசை!" என்று செல்லமாக திட்டுவார்கள்!

சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்!
"இனிமேல் தரமாட்டேன்! அப்படி கேட்டால் ரவ்வாடை ஒரு துண்டு மட்டும்தான் தருவேன்!" என்று வி(மி)ரட்டுவார்கள்!

ஆனால், ரவ்வாடை சுட்டு முடித்ததும் என் அக்கா, தங்கை அனைவர்களுக்கும் கொடுக்கும்போது எனக்கு சிறிதளவு கூடுதலாகத் தருவார்கள்!

துண்டுகள் போட்டு எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டுவைத்ததும் ரவ்வாடை தயாரித்த  பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் பணியாரத் துகள்களை கரண்டி எடுத்து சுரண்டி  சாப்பிட, எங்களுக்குள் 'சிறிய' போராட்டமே நடக்கும்! அம்மா, அதைத் தடுத்து சமாதானம் செய்வார்கள்!

அதன்பிறகான ரவ்வாடை சுடும் காலம் எல்லாம் முன்னதாகவே
ஒரு கிண்ணத்தில் எனக்காக தனியே எடுத்து வைத்து என்னிடம் கொடுப்பார்கள்!

எங்களின் பாசத்திற்குரிய அம்மா அவர்கள் கடந்த 02/07/2022 அன்று எங்களிடமிருந்து விடைபெற்று, இறைவனின் அழைப்பை ஏற்று மௌத் (இறப்பு) ஆனார்கள்.




எங்கள் அம்மாவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல் சுவனம் கிடைக்கப் பெற அன்பு நண்பர்கள் அனைவரும் துஆ (பிரார்த்தனை) செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, September 10, 2022

இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172




இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172

அட்டையில் மருதநாயகம் கமல்ஹாசன் புகைப்படம்.

'இனிய உதயம்'
(தீபாவளி சிறப்பிதழ்) 
மாத இதழில் நவம்பர் 1997-ல் முதன்முறையாக எனது புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியான மாதம்.

இதை நகல் எடுத்து எனக்கு பேங்காக்குக்கு அனுப்பியவர் எழுத்தாளர் திரு. 'மின்னொளி சீனிவாசன்' அவர்கள்.

அப்போது அவர் எனக்கு எழுதிய கடிதமும் இத்துடன் இணைத்துள்ளேன்!

நன்றி சீனீவாசன் சார்!
நலமாய் இருக்கிறீர்களா?

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, September 4, 2022

ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா?




ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா!!!? #171

2007-ஆம் காலக் கட்டம்!

மயிலாடுதுறையிலிருந்து
சிதம்பரம் வழியாக லால்பேட்டைக்கு செல்லும்போது அல்லது லால் பேட்டையில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு வரும்போது (லால்பேட்டையில் எங்கள் அக்கா வீடு) சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வழமையாக ஒரு குறிப்பிட்ட கடையில் ஞாயிறன்று தினமலரும் வாரமலரும் வாங்குவது வழக்கம்.

அதில் வந்த சிறுக(எ)தையோ
படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

ஒரு வாரத்திற்கு மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை (08/07/2007)  எனது தங்கையும் தங்கையின் கணவரும் சிதம்பரம் வழியாக நீடூருக்கு வரும்போது தினமலர் +  வாரமலர் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

அப்படியே வாங்கி வந்து கொடுத்தார்கள். பார்த்தால் தினமலர் இருக்கிறது; வாரமலர் அதில் இல்லை.

அடடா, என்ன செய்வது?

அதன்பின்
13/07/2007 வியாழக் கிழமை நான் லால்பேட்டைக்குச் சென்றேன்.

சிதம்பரத்தில் அதே கடைக்குப் போய், "அண்ணே, ஞாயிற்றுக்கிழமை நீங்க தினமலரோடு வாரமலர் கொடுக்கலையே? அந்த வாரமலர் இருக்காண்ணே?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்ததும் 'நம்ம கஸ்டமர்தான்' என நினைத்தாரோ, புன்னகைத்தவாறே, "தேடிப் பார்க்கிறேன் தம்பி!" என சொல்லிவிட்டு தேடினார்; உடனே கிடைத்துவிட்டது. கொடுத்தார். வாங்கிப் பிரித்தேன்!

எனது அர்ச்சனைக்கு 1,000 ரூபாய் பரிசு என்பதைக்கண்டு மகிழ்ச்சி மேலிட, கடைக்காரரிடமே காட்டினேன்!

"அட, நீங்களா தம்பி? நல்லாருக்கு!" என்று அவரும் சந்தோஷப்பட்டார்!

உடனே, வேறு இரு புதினங்கள் அவரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டு 'நன்றி' சொல்லி வந்தேன்!

ஒரு வாரத்திற்குள் பரிசுப் பணம் அஞ்சலாணை மூலமாக வந்து சேர்ந்தது! அஞ்சல்காரருக்கும் அன்பளிப்பு வழங்கி மகிழ்வித்தேன்!


மேலும் ஒரு தகவல்!
அப்போது வாரமலரில் இது உங்கள் இடம் பகுதிக்கு முதல் பரிசு ரூபாய் 1,000, இரண்டாம் பரிசு ரூபாய் 500,
மற்ற கடிதங்களுக்கு ரூபாய் 150 மட்டும் சன்மானமாக வழங்கப்பட்டது!

.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, September 2, 2022

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, வாசகர் சந்திப்பு! #170


பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, வாசகர் சந்திப்பு!

'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக, எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோருடன் சந்திப்பு!

3 மாவட்ட வாசகர்களில் சிலருக்கு
26/02/1989 அன்று திருச்சி அஜந்தா ஹோட்டலில் மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது!

நானும் நண்பன் குணசேகரனும் கலந்துகொண்டோம்!


அழைப்பிதழ்!


கலந்துகொண்ட நண்பர்கள்!



இடமிருந்து வலமாக... நான், நண்பர் அ.சங்கர்லால், நண்பன் குணசேகரன்



'கல்கி'யில் நான் எழுதிய 'ஆஹா ஆல்பம்' பகுதி!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...