திரு.எஸ்.எஸ். பூங்கதிர் உடன் நான்! நினைவுகள்!!
சுமார் 35 ஆண்டுகளாய் எழுத்துத் துறையில் படைப்புகள் தந்தவரும் திரு.மலர்சூர்யா அவர்களின் மூத்த சகோதரரும் பாக்யா இதழின் ஆசிரியர் குழு அங்கத்தினரும் 'கதிர்'ஸ்' மற்றும் 'கவிமாடம்' மின் இதழ்களின் ஆசிரியரும் எனது அன்பு நண்பருமான திரு. எஸ்.எஸ். பூங்கதிர் அவர்கள் இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்.
.
தமிழக எழுத்தாளர்கள் (வாட்ஸ்ஆப்) குழுவில் இணைந்த பின்தான் எஸ். எஸ். பூங்கதிர் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்ஸ் இதழை ஆரம்பித்தார். வெளியான இதழ்களில் காணப்பட்ட பிழைகளை அவருக்குத் தெரிவிக்க ஆரம்பித்தேன்.
பிறகு இதழ் வெளியாகும் முன்னே எனக்கு அனுப்பி, பிழைகளை திருத்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
நானும் திருத்தங்கள் செய்து அனுப்ப ஆரம்பித்தேன்.
ஒரு காலகட்டத்தில் "கதிர்'ஸ் இதழின் ஆசிரியர் பக்கத்தில் உங்கள் பெயரையும் (சேர்த்துப்) போடவா?" என்று கேட்டார். நான் "வேண்டாம் சார்" என்று மறுத்து விட்டேன்.
.
பிறகு நான் நமது குழுவில் ஒரு பக்கக் சிறுகதைப் போட்டி நடத்தும் போது,
பூங்கதிர் அவர்களை நடுவராக இருக்குமாறு கேட்டேன். சம்மதித்தார்.
தேர்வு பெறும் கதைகளில் 20 கதைகளை, கதிர்'ஸ் இதழில் வெளியிடவும் ஒப்புக்கொண்டார்.
அப்போது வாட்ஸப்பில் பேசும்பொழுது "சார், உங்கள் உருவத்திற்கு உங்கள் குரல் மிக இளமையாக உள்ளது" என்று பாராட்டினார். மாஷா அல்லாஹ்.
.
இடையே கதிர்'ஸ் உடன் 'கவிமாடம்' என்ற இதழையும் ஆரம்பித்து நடத்தி வந்தார்.
பிறகு, "ஈரிதழ்களிலும் 'கௌரவ ஒத்துழைப்பு' என்று உங்கள் பெயரைப் போடுகிறேன்! எனக்காக ஒத்துக்கொள்ளுங்கள்" என்று கேட்டபின் ஒத்துக்கொண்டேன்! 20/பிப்ரவரி/2024 இதழிலிலிருந்து ஆசிரியர் குழு பக்கத்தில் எனது பெயரையும் இணைத்து வெளியிட ஆரம்பித்தார்! அப்படி நான் சம்மதித்ததற்கு 'ஐ லவ் யூ சார்!' என்று பதிலளித்தார்.
.
இதழ்கள் வெளியானதும் அதன் இறுதி வடிவம் எனக்கு அனுப்பி, "வெளியிடலாமா சார்?" என்று கேட்டுக் கொள்வார். நானும் "ஓகே சார்" என்று சொன்னதும் வெளியிடுவார். சில நேரங்களில் ஒரே கவிதையை இரு வேறு டிசைன்களில் டைப் செய்து இரண்டையும் எனக்கு அனுப்பி "இதில் எதை தேர்வு செய்யலாம்?" என்றும் கேட்பார்.
.
28/04/2024 அன்று நான் பாண்டிச்சேரி சென்ற போது "சந்திக்க வருகிறேன் சார்" என்று தகவல் கொடுத்தேன்!
ஆனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டதால் அன்று சந்திக்க முடியவில்லை! தனது மகளை வந்து என்னைச் சந்திக்கச் சொல்வதாக கூறினார். "பரவாயில்லை சார். அடுத்த முறை வரும்போது சந்திக்கலாம் சார்" என்று சொல்லிவிட்டேன். சந்திக்க முடியாமலே விடைபெற்றுவிட்டார்!
மனதிற்கு நெருக்கமான ஒரு நண்பரை இழந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறேன்!
ஆழ்ந்த வருத்ததுடன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
25/05/2024.