புத்தாண்டுப் பதிவு!
இக்காலங்களில் நவீன அரிசி ஆலைகளில் இருந்து சாக்கு மற்றும் துணி பைகளில் விற்பனைக்கு வெளிவரும் அரிசி மூட்டையில் மேல் பாகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மட்டும்தான் இருக்கும். முன்பெல்லாம் அரிசியுடனே ஒரு சில நெல்மணிகள், சிறிய கற்கள், சிறு துண்டு களிமண் கட்டிகள், முழுமைபெறாத அரிசி பதர்கள், சில பல வைக்கோல் சக்கைகள் இவற்றோடு கருப்பு நிற அரிசிகளும் இரண்டற கலந்து கட்டி வரும். இந்த கருநிற அரிசி பதர் அல்ல; அரிசியேதான்.
சிறு வயதில் ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதேபோல்தான் சாப்பாட்டில் இருந்த ஒரு கருப்பு சோற்றினை
வெளியில் எடுத்துப் போட எத்தனிக்கும்போது, எங்கள் அம்மா சொன்னார்கள்:
"இந்த கருப்பு சோறு சாப்பிடு; தூக்கி வெளியில் போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் கருப்பு சோறுக்கு ஒரு கதை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு கதையையும் சொன்னார்கள்.
ஒரு நாள் ஒரு கருப்பு அரிசி (சோறு) கடவுளிடம் கேட்டதாம், "கடவுளே, மற்ற அரிசியெல்லாம் வெள்ளையாக இருக்கின்றன. என்னைமட்டும் கன்னங்கரேல் என்று கருப்பாகப் படைத்துவிட்டாயே?" என்று.
"கருப்பரசியே! நீ கருப்பாய் இருப்பதற்காக கவலைப்பட்டு, மனம் ஏங்கவேண்டாம். நீ கருப்பாக இருந்தாலும் உன்னை சமைத்துப் பரிமாறும் தட்டில் கருப்பு சோறாக இருக்கும்போது, உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைத்தான் முதலில் எடுத்துச் சாப்பிடுவார்கள். அதனால் உனக்கு வருத்தத்திற்கு பதில் மகிழ்ச்சிதான் ஏற்படும். சந்தோஷமாகப் போ!" என்று பதில் தந்து அந்த கருப்பு அரிசியை வாழ்த்தி அனுப்பினாராம் கடவுள். அன்றிலிருந்து, சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும்.
இவ்வாறாக எங்கள் அம்மா சொன்னதும் நான் உடனே அந்த கருப்பு அரிசியைக் கீழே போடாமல் உடனே சாப்பிட்டு விட்டேன்.
இதுதான் அம்மா சொன்ன கதை; எங்கள் அம்மா சொன்ன கதை.
அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.