...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 17, 2021

கவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158

கவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள்! #158



நறுக்ஸ்நொறுக்ஸ் கவிதைகள்!



           திரு. ரிஷிவந்தியா அவர்கள்

கவிஞர் ரிஷிவந்தியா அவர்களின் 'நறுக்-நொறுக்ஸ்' பற்றிய விமர்சனம். எழுதுபவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். 

...
 ரிஷிவந்தியா அவர்களின் ஆயிரம் படைப்புகளில் இருந்து குறைந்தபட்சம் 25 படைப்புகளை விமர்சிக்க வேண்டும். 25 படைப்புகளை என்ன, 250 படைப்புகளை கூட விமர்சிக்கலாம். ஏன் ஆயிரம் படைப்புகளை கூட விமர்சிக்கலாம். எதை எடுப்பது எதை விடுப்பது? தயங்கி நிற்கிறேன்! நான் தேனுண்ட வண்டு! மயங்கி நிற்கிறேன்! இருந்தாலும் என் அளவிலே என்னால் முடிந்த அளவிலே சுமார் 26 படைப்புகளை இங்கு விமர்சனம் செய்கிறேன். 



 1. கை கழுவினோம் மரங்களை மூச்சுத்திணறலோ 
மண்ணுக்கு? 

 மனிதன் உயிர் வாழ அவசியம் தேவை உயிர் வாயு என்கிற பிராணவாயு என்கிற ஆக்சிஜன். அந்த ஆக்ஸிஜனை உருவாக்கி தருவன மரங்கள். அந்த மரங்களை மனிதன் வெட்டி தள்ளி அழிக்கிறான். 

 ஆகவே அதன் மூலம் மரங்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. அப்படி மரங்கள் அழிபட்டால் அடுத்ததாக உயிரினங்கள் அழியும். மனிதனும் அழிவான். 

 இதைத்தான் கவிஞர் இங்கே சுருக்கமாக குறிப்பிடுகிறார். 

 2. கூட இருந்தே குழி பறித்தவனை 
கும்பிட்டு குழியில் விழுந்தது 
விதை. 

 மனிதரில் சில வகை உண்டு. நம்மிடமே உறவாடி, நம்மை நயவஞ்சகம் செய்து நம்மைக் கெடுப்பார்கள். குழிபறித்து நம்மை எப்பொழுது தள்ளிவிடலாம், காலை வாரி விடலாம் என்று இருப்பார்கள். 

 ஆனால் விதை விருட்சமாய் வளர, முதலில் குழி வெட்ட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். முதலில் குழி பறித்தவனுக்கு நன்றி சொல்லி அந்த குழிக்குள் விழுகிறதாம் விதை. 

 இது ஒரு 'விதை'யான கவிதை. 

 3. எண்ணிப்பார்த்து வாழ்வோம் 
 நாசிக் கரன்சிகளை அல்ல. 
 நல்லோர் கருத்துக்களை. 

 'சான்றோர் சொல் கேட்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படியே அந்த சொற்களைக் கேட்பதோடு நின்று விடாமல் அதை எண்ணிப் பார்க்கவேண்டும். எண்ணிப் பார்ப்பதுடன் இருந்துவிடாமல் செயலிலும் கொண்டுவரவேண்டும். நல்ல செயல்கள் செய்ய வேண்டும். 

 ஆகவே அதைத்தான் பணத் தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காதே, நல்ல செயல்களையும் சான்றோர் கருத்துக்களையும் வார்த்தைகளையும் எண்ணிக்கொண்டு இருக்கவேண்டும் என்று கவிஞர் சொல்கிறார்.

 4. புன்னகைக்கும் பூக்கள் 
 புரிய வைக்கின்றன, 
அற்ப ஆயுள் என்றாலும் 
ஆனந்தித்திரு. 

 பூக்களை ரசிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? அதை ஆராதிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? பார்த்தாலே மகிழ்ச்சி ஏற்படுமே! புன்னகை ஏற்படுமே! அதன் அழகும் அதன் வாசமும் நம்மைக் கவருகின்றனவே! 

 அதன் ஆயுள் ஒரு நாள், இரு நாள் என்று குறைவாக இருந்தாலும் அவை இதழ் விரித்து புன்னகைக்கின்றனவே?! நாமும் அப்படிப் புன்னகைப்போம். 
 
 பூப்போல சிரித்திடு!! 

 5. எவரும் உருகுவதில்லை 
நமக்காக 
மெழுகுவர்த்திகளைத் தவிர. 

 மெழுகுவர்த்திகள் தம்மையே அழித்துக் கொள்கின்றன. இருளைப் போக்குகின்றன; வெளிச்சம் அளிக்கின்றன. 

 ஆகவே, மனிதர்கள் நா(மு)ம் மெழுகுவர்த்திகளை போலவே மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நலனுக்காக சிறிதேனும் முயற்சிக்க வேண்டும் என்பதையே கவிஞர் உவமையாக சொல்கிறார்.

 6. எலி வேட்டை ஒத்திவைப்பு 
பூனையின் குறுக்கே 
மனிதன். 

 வெளியில் செல்லும்போது 'பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்' என்று திரும்பி விடுகிறான் மனிதன். 

அதேபோல் எலி வேட்டைக்கு பூனை செல்லும்போது மனிதன் குறுக்கே போனால் பூனையும் 'கெட்ட சகுனம்' என்று எண்ணினால் எப்படி இருக்கும் என்று நகைச்சுவையாக சொல்கிறார் கவிஞர். 

 ஆனால் அப்படி பூனைகள் சகுனம் பார்த்தால் அவற்றிற்கு எலி கிடைக்காது. வெறும் பட்டினி தான் கிடைக்கும். 

 7. எத்தனை ஆயிரம் 
புத்துணர்வு முகாம்கள் தேவை 
'மதம்' பிடித்த மாந்தர்க்கு!? 

 உலகில் மதம் பிடித்த உயிரினங்கள் இரண்டு. ஒன்று யானை மற்றொன்று மனிதன்.

 அதேபோல் மதம், மனிதனோடு இருவகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. எப்படி? முதலாவது அவன் மதம் சார்ந்து இருக்கிறான். அடுத்ததாக அவன் மதம்பிடித்தவனாக இருக்கிறான்.

 இதில் மதம் பிடித்தவன் என்பது மதவெறியை குறிக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் உயிரினங்களை அழிக்கிறது; உடமைகளை உடைக்கிறது. அதுவே மனிதனுக்கு மதம் பிடித்தால் அவனே அழிந்து சாகிறான். 

 ஆகவே, மதம் கடப்போம்! மனித நேயம் காப்போம்!!

 8. வாழ்வாங்கு வாழ்கிறார்கள் பலர் 
 'என் கடன் வட்டி கொடுப்பதே' என.

 கடன் வாங்குபவர்களிடம் வட்டி பலவகையில் வசூலிக்கப்படுகிறது. கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பல பெயர்களில். வட்டிக்கு கடன் வாங்குவது என்பது ஒரு கொடிய விஷம். கடன் வாங்குபவனை நிம்மதியாக இருக்க விடாது. இரவு தூக்கத்தையும் கெடுத்துவிடும். 

 வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், வட்டி கட்டியே அவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து விட்டார்கள். ஆனால் கடன் முடிந்தபாடில்லை. பலபேர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலையை நோக்கிச் செல்லும் சோகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . 

 'வட்டி தொழிலாலே வருகின்ற லாபம், ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்; என்று அறியாமலே, உண்மை புரியாமலே, ரத்தக்கறை படிந்து உலகில் நீயும் வாழலாகுமா?' என்று இசை முரசு நாகூர் ஈ. எம். ஹனிபா அவர்கள் பாடிய பாடல் நினைவுக்கு வருகின்றது. 

கடன் கொடுத்து வட்டி வாங்குவதை, தனது தொழிலாக கொள்பவர்கள், சற்றே மன சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். 

 9. அன்பு செலுத்தினால் 
நீராக மண் நோக்கு; 
அடிமைப்படுத்தினால் 
தீயாக விண் நோக்கு.

 'அன்பு செலுத்தினால் அடிமையாக அடங்கு; அடிமைப்படுத்தினால் புரட்சியாக வெடி' என்கிறார் கவிஞர். 

 10. முதுமையால் 
முகச்சுருக்கம் 
முன்கதை சுருக்கம். 

 நமது பெரியவர்கள் என்பவர்கள் அனுபவத்தின் தொகுப்பு ஆகும். அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அல்லது கடைப்பிடிக்கிறோமோ, செயல் படுத்துகிறோமோ இல்லையோ, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். 

சிறு வயது முதலே நம்மை அவர்கள் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டியது அவசியம். 

நமக்கும் அதுபோல முதுமை வரும். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'. மனதில் வைப்போம்! 

 11. வளரும் 
 வரம் 
 மரம்.  

மிக மிக சுருக்கமான நறுக் இது! மரத்தினால் நாம் அடையும் பயன்கள் எண்ணற்றவை; கணக்கிலடங்காதவை. 

ஆகவே தான் அதை 'வரம்' என்கிறார் கவிஞர். நமது முன்னோர்கள் வளர்த்துத் தந்ததை நாம் இப்போது அனுபவிக்கிறோம். ஆகவே நமக்குப் பிறகு வரும் சந்ததிகள் அனுபவிப்பதற்காக நாம் மரங்களை நடவேண்டும். 

காலத்தின் கட்டாயம்! 

 12. எதிர்கால விருட்சத்தை 
விழுங்கியது 
நிகழ் காலப் பறவை. 

 செடிகள், மரங்கள், பூ பூக்க மகரந்தச்சேர்க்கை அவசியம். அது காற்றினால் நிகழ்வது. 

 அது போல ஓர் இடத்தில் வளரும் செடி, கொடி, மர வகைகள் வேறு இடத்தில் வளர்வதற்கு அவசியமாகிறது பறவைகளின் எச்சங்கள். 

அதைத்தான் இதில் கவிஞர் சொல்லி இருக்கிறார். 

 13. மணக்கிறது மண் 
உழவனின் வியர்வை 
நாற்றத்தில். 

 'நாற்றம்' என்ற சொல்லுக்கு தமிழில் வாசம், மணம் என்ற அர்த்தங்கள் உண்டு. விவசாயின் வியர்வையும் அந்த விவசாயியோடு சேர்ந்து, மண்ணில் விழுந்து, புரண்டு உழைக்கிறது.

 தொழில்கள் அனைத்திற்குமே தலையாயது உழவுத் தொழில்தான். 

உழவை மதிப்போம்! உழவனை மதிப்போம்! 

 14. பிளக்காதீர்கள் 
இயற்கையின் இதயத்தை...
 மரம். 

 மனிதனுக்கு இதயம் எவ்வளவு அவசியமோ அதுபோல இயற்கைக்கு மரம் மிக மிக அவசியம். மனிதர்கள் புதிதாக மரங்களை செடிகளை வளர்க்கிறார்களோ இல்லையோ பழைய மரங்களை வெட்டி தள்ளுகிறார்கள். என்று மாறும் இந்த நிலைமை? 

 ஒரு பழைய மரத்தை வெட்டுவதற்கு முன், புதிதாக ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சட்டம் வகுக்க வேண்டும்!

 15. திரவப் புதையல் 
நிலத்தடி நீர்! 

 நிலக்கரியை 'கருப்புத் தங்கம்' என்பார்கள். அதுபோல, நீரின் அவசியத்தை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது இந்த 
கவிதை!

 'நீரின்றி அமையாது உலகு' என்று சொல்லப்பட்டதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். 

 16. வெட்டுபவனின் சொட்டும்
 வியர்வைக்கு வெட்டப்பட்டு 
வீழும்வரை வீசியது சாமரம்... 
மரம். 

 தன்னை குழிப்பறிப்பவனையும் வெட்டுபவனையும் கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது பூமி என்று, பூமியை பொறுமைக்கு உதாரணமாக சொல்வார்கள். 

அது போல தன்னை வெட்டுபவனது வியர்வையையும் காற்று கொண்டு வீசுகிறதாம் மரம்! 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்! 

 17. கையில் செல் 
கடவுச்சொல் 
இதுவும் கடந்து போகும்! 

 இந்தியர்கள் அனைவரையும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கச் சொன்னார்கள்!

 மனிதனோடு ஆதார் கார்டையும் இணைத்துவிட்டார்கள். 

இப்பொழுது மனிதன் தனது கையோடு கைபேசியும் இணைத்தே நடந்து செல்கிறான்; கடந்து செல்கிறான். 

 நடக்கட்டும்! நடக்கட்டும்!! 

 18. மயானங்களில் திரும்பிடும் 
மயான அமைதி 
கொரோனாவுக்கும் கட்டிடுவோம் 
விரைவில் சமாதி! 

 இந்த கொரோனாவை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் சமாதி கட்டலாம் என்று ஆத்திரங்கள் வரு(கிற)து மக்களே! 

 பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தால் மயான பயணத்தை நீண்ட நாட்களுக்குத் தவிர்க்கலாம்!!! 

 19. சாயம் போவதே இல்லை 
வானவில் வண்ணமும் 
மனித நேய எண்ணமும்! 

 மனிதநேயம் எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் வெளிச்சமாக இருப்பார்கள்; வண்ணமயமாக இருப்பார்கள் என்பது இதன் கருத்து. 

 ஆனால் வானவில் வண்ணம் சாயம் போகாது என்கிறார் கவிஞர். வானவில் அதன் வண்ணத்தை சில சில நிமிடங்களில் இழந்துவிடும். 

ஆனால், சாயம் போகாது என்கிறாரே கவிஞர்! எப்படி என்று தெரியவில்லை! 

 20. பிள்ளைகளைக் கரைசேர்க்க 
எந்நாளும் எதிர்நீச்சல் 
 அப்பா! 

 பிள்ளைகளை வளர்ப்பதற்கு எந்நாளும் ஓயாமல் உழைக்கும் அன்பு உள்ளங்கள் அம்மாவும் அப்பாவும்! 

 அதுபோல பிள்ளைகளுக்காக மெழுகுவர்த்தி போல் தியாகமாக தன்னை மாற்றிக்கொண்டு தன் வாழ்நாளை அர்ப்பணிப்பவர் அப்பா!

 அப்பப்பா!!!!! 

 21. நூல் இருக்க  
ஊசிப் போகாது 
வாழ்க்கை! 

 நூலும் ஊசியும் துணி தைக்க மிக அவசியம். அதுபோல நூல், நல்ல புத்தகம் இருப்பது, மனித வாழ்க்கை உயர்வு அடைய, மிக மிக முக்கியம்!

 22. மயில் இறகு போடும் 
 குட்டிகள் தெரியும் 
குழந்தையின் கண்ணுக்கு! 

 குழந்தைப்பருவம் குதூகலமான பருவம்! கவலைகள் இல்லாத பருவம்! புத்தகப் பக்கங்கள் இடையே மயிலிறகை வைத்து, அது குட்டி போடுகிறதா என்று தினம் தினம் எதிர்பார்க்கும் பருவம்! 

 அந்தப் பருவம், இந்தப் பாடலில் தெரிகிறது என் கண்ணுக்குள்ளே! 

 23. விதை நட்டேன் 
சிலிர்த்தது வியர்த்திருந்த 
மேகம்! 

 விதையை நட்டதும் வியர்த்திருந்த, கறுத்திருந்த மேகம் சிலிர்த்துக்கொண்டு மழையை பொழிந்ததாம்! 

 சிலிர்த்த மேகம் மழை பொழிந்தால் விதைக்கு கொண்டாட்டம்தான்!!  

24. ஏணியில் ஏறும் பாம்பு 
 நவீன பரமபதம் 
நடப்பு வாழ்க்கை! 

 என்னதான் ஆத்தாடி என்று கூத்தாடி கரணம் போட்டாலும் பாம்பு வந்து கொத்துவதும் நாம் வாய்விட்டு கத்துவதும் இப்படி ஆகிவிட்டது நடுநிலை மக்களின் வாழ்க்கையும் ஏழை மக்களின் வாழ்க்கையும்! வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு. 

இது ஒரு நாள் மாறும்! வாழ்க்கைத் தரம் முன்னேறும்! 

 25. மன திடம் 
வேண்டினேன் 
மனதிடம்! 

 மனதில் உறுதி வேண்டும்! அது மட்டும் இருந்தால் போதும் எவ்வளவு கவலைகள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் வாழ்க்கையில் ஊதித் தள்ளி போய்க்கொண்டே இருக்கலாம்! 

 அப்புறமென்ன டேக் இட் ஈசி பாலிசி தான்! 

 26. பெற்றோர் தினம் 
கொண்டாடப்படுகிறது  
முதியோர் இல்லத்தில்! 

 பெற்றோர்கள் நமக்காகத் தானே வாழ்ந்தார்கள்? அவர்களின் தள்ளாத வயதில் அவர்களை நாம் முதியோர் இல்லத்தில் தள்ளலாமா? 

 அவர்களின் வயதான காலத்திலும் நாம் நம்முடன் வைத்து பராமரிக்க வேண்டும்! அவர்களை அன்பால் அணைப்போம்!!!

 விமர்சித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குறிப்புகள்:
1. தமிழக எழுத்தாளர் குழுமத்தின் விமர்சனப் போட்டிக்காக எழுதப்பட்டது.

2. இன்ஸ்டாகிராமில், திரு.ரிஷிவந்தியா அவர்களின் நறுக்ஸ்நொறுக்ஸ்-ஐப் படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்:








. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...