...பல்சுவை பக்கம்!

.

Tuesday, August 31, 2010

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!


   அன்பிகினிய அன்பர்கள் அனைவரையும்
மகிழ்வோடு வரவேற்கிறேன்.

   இன்று, இனிய நாள்! அதாவது நமது
'நிஜாம் பக்கம்' இன்று இரண்டாம் ஆண்டில்
உங்கள் உள்ளார்ந்த ஆதரவோடு அடியெடுத்து
வைக்கின்றது.

   சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். இதே
ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்ற ஆண்டில்
'தமிழ்குடும்பம் திரு. தமிழ்நேசன் அவர்களின்
நல்வாழ்த்துக்களோடும் எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா
அவர்களின் உதவியோடும் ஆரம்பமாகியது
நமது வலைப்பூ.

52 வாரங்கள்;
67 இடுகைகள்;
50+ தொடரும் அன்பர்கள்;
பல விருதுகள்;
பற்பல பின்னூட்டங்கள்;
அதிகமான வாக்குகள்
-என்று இந்த ஓர் ஆண்டு மகிழ்வோடு
நிறைவடைந்துள்ளது.
  
   வேலைப் பளு காரணமாக அதிக எண்ணிக்கையில்
பதிவுகள் அளிக்க இயலவில்லை.இருப்பினும்
செப்டம்பர் 2009-ல் அதிகபட்சமாக 25 இடுகைகள்
பதிந்துள்ளேன்.
  
   இந்த ஓராண்டில் என்னிடம் வலைப்பூ ஆரம்பிப்பது
பற்றி சில அன்பர்கள் விவரம் கேட்டார்கள்.
அதில் சிலர் புதிதாய் வலைப்பூவும்
ஆரம்பித்துள்ளார்கள்.

    சமீபத்தில் நண்பர் இளம் தூயவன் பின்னூட்டத்தில்,
"என்ன நகைச்சுவைக்கு மாறிட்டீங்க?" என்று
கேட்டார். அதன் பிறகுதான் நானே கவனித்தேன்,
எனது லேபில்களை. அதில்,
பல்சுவை + கதம்பம் =7
செய்திக்குறிப்புக்கள் =6
கவிதைகள் =6
பாடல்கள் =7
சிந்தனைகள் =9
நகைச்சுவை =33
-என்று பட்டியல் இருக்கக் கண்டேன்.
ஆக, எனது இடுகைகளில் கிட்டத்தட்ட
பாதியளவில் நகைச்சுவை இடம்பெற்றிருக்கிறது
என்பதை காணமுடிந்தது.

   இனிவரும் காலங்களில் அடிக்கடி இடுகைகள்
எழுதிட நினைத்துள்ளேன், இறைவன் நாடினால்.

   இந்த மகிழ்வான தருணத்தில், எனது இடுகைளைப்
படித்து, பின்னூட்டமிட்டவர்கள், கருத்துரை
வழங்கியவர்கள், வாக்குகள் அளித்தவர்கள்,
விருதுகள் வழங்கியவர்கள், பின் தொடர்பவர்கள்,
மெயில்மூலமும் தொலைபேசிமூலமும் தொடர்புகொண்டு
கலந்துரையாடியவர்கள், இடுகைகளிற்கான
இணைப்பாகயிருந்து உதவிய அனைத்து
திரட்டிகள், கூகுள் நிறுவனம், தங்களது
வலைப்பூகளில் எனது வலைப்பூவிற்கு
இணைப்புக் கொடுத்துள்ளவர்கள், எனது
வலைப்பூ படித்து கருத்துரைகள் கூறிடும்
எனது அருமை நண்பர் முஹம்மது ஃபயாஸ்
மற்றும், மற்றும், மற்றும், மற்றும்
இரசித்து மகிழ்ந்த அன்பான உள்ளங்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

   அடுத்து வரும் இடுகைகளில்
நான் பார்த்த(வை), படித்த(வை), கேட்ட(வை)
சில குறிப்புக்களை பதிவிடலாம் என்று
விருப்பம் கொண்டுள்ளேன்.



   இதுவரை தொடர்ந்து வந்ததைப் போன்றே
இனியும் தொடர்ந்துவர இருக்கும் அனைத்து
நல்லிதயங்களுக்கும் எனது மனங்கனிந்த
நன்றிகள்!



அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Sunday, August 1, 2010

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

அன்புத் தம்பி இப்படிக்கு நிஜாம் தன்னுடைய 'தூர்தர்ஷன்
விளம்பரங்கள்' என்ற இடுகையில் வானொலி பற்றிய எனது
அனுபவங்களை எழுதுமாறு ஆலோ(யோ)சனை
கூறியிருந்தார். வாங்க, என்னுடைய அனுபவங்களுக்கு...

அந்த தூர்தர்ஷன் (டி.டி.) காலத்தில் எங்கள் வீட்டில்
தொலைக்காட்சியே கிடையாது. எங்கள் தாத்தா,
பெரியத்தா, பெரியம்மா போன்றோர்களின் கண்டிப்புதான்
காரணம். (இப்பவும் அந்த மாதிரியே இருந்திருக்கலாம்னு
தோணுதே!)

ஆனால், நான் வானொலி தொடர்ந்து கேட்பேன். சென்னை
வானொலி விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டாலும் நாடகங்கள்
விரும்பிக் கேட்பேன். திங்கள் முதல் வியாழன்
வரை தினமும் இரவு 9 - 15 மணி முதல் 9 - 30 மணி வரை
'வண்ணச்சுடர்' என்ற நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் தொடர் நாடகம் ஒலிபரப்பாகும்.

மறு வாரம் திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 -15 முதல் 9 -30 வரை எட்டு பகுதிகள்
மேடை நாடகங்கள் ஒலிபரப்பாகும்.
ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி, டெல்லி கணேஷ்,
ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் மேடை நாடங்கள்
ஞாபகம் இருக்கின்றன. மற்ற மூன்று தினங்களில்
கால் மணி நேர சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 -௦௦ மணிக்கு ஹார்லிக்ஸ்
வழங்கிய'சுசித்ராவின் குடும்பம்' மற்றும் 'கருமமே
கண்ணாயினார்' ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பாயின.

அப்போது விவித் பாரதியில் வரும் ஒரு விளம்பரம்:
"ஹேய் லல்லி, ஆளே கலர் மாறிட்டியே, எப்படி?"
"ஓ அதுவா, FAIR அண்ட் லவ்லிதான் காரணம். நீயும் தடவு!"
"அப்படியா? பேர் என்ன லல்லி?"
" ம்ஹும், FAIR அண்ட் லவ்லி!"
இந்த விளம்பரத்தையும் நாடகம்போலவே இரசிப்பேன்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவற்றில் நாடகம்
ரொம்பப்பிடிக்கும். தமிழ்ச் சேவை ஒன்றில் தினமும்
இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்
வாரம் ஒரு முறை மட்டும் அரை மணி நேர நாடகம்
நடைபெறும்.

மற்றம் தமிழ்ச் சேவை இரண்டில் ஞாயிற்றுக் கிழமைகளில்
மதியம் 2 மணிக்கு 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' வழங்கிய
கதை, கவிதை, சிறுகதை போன்றவற்றின் தொகுப்பான
பல்சுவை நிகழ்ச்சியை பி. ஹெச். அப்துல் ஹமீது
வழங்குவதைக் கேட்பது உண்டு.

அதே தமிழ்ச்சேவை இரண்டில் ஞாயிறு மாலை 4 - 30
மணிக்கு 'மக்கள் வங்கி' வழங்கிய தொடர் நாடகத்தில்
நிறைய பாடல்களும் வரும்.

இலங்கை வானொலியில் கேட்ட அருமையான
பாடலை நீங்கள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.


நாடகங்கள் நான் கேட்பது போலவே போட்டிகளில்
பங்கு பெற்று சரியான விடை எழுதி பரிசுகளும்
வாங்குவதுண்டு. தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத்
தொடர்ந்து 'சர்வதேச ஒலிபரப்பு' சேவை ஆரம்பமானது.
அதில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை
9-15க்கு 'வீரா ஹெர்பல் சிகைக்காய் வழங்கும்
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி' என்று ஒரு நிகழ்ச்சி.
இதை அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது அவர்கள்
தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியை சென்னையிலுள்ள
நிறுவனம் வழங்கியதால் அதில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கான விடைகளை சென்னை முகவரிக்கு
உள்நாட்டுக் கடிதத்திலேயே அனுப்ப வேண்டும்.

அவ்வாறே ஒரு தடவை நானும் பதில்களை
அனுப்பிவிட்டு அடுத்த வாரம் பரிசு பெற்றவர்களில்
எனது பெயரும் வருகிறதா என்று ஆவலோடு
காத்திருந்தேன்.

அடுத்த ஞாயிறும் வந்தது. 9 - 15 க்கு நிகழ்ச்சியும்
ஆரம்பமானது. நிகழ்ச்சி முடிவில் "சென்ற வாரம்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை
எழுதியவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட
10 நேயர்கள்" என்று சொன்ன அறிவிப்பாளர், அதில்
என் பெயரையும் பரிசு பெற்ற நேயராக அறிவித்தார்.


[குமுதம் குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு!]

"இவர்களுக்கான பரிசுப் பொட்டலம் நேரடியாக
அவர்களின் இல்லங்களுக்கு விரைவில் அனுப்பி
வைக்கப்படும்" என்றும் அறிவித்தார்.

'அப்படியெனில் நமக்கும் பரிசு வந்துவிடும்' என்ற
எண்ணத்தோடு காத்திருக்க ஆரம்பித்தேன்.
இவ்வாறு நான்கைந்து தினங்கள் சென்ற
நிலையில், அப்படிக்கா மயிலாடுதுறைக்கு
போய்விட்டு இப்படிக்கா வீட்டிற்கு வந்தேன்.


எங்கள் அம்மா ஒரு பார்சலை என்னிடம் நீட்டி,
"கூரியர்லருந்து வந்து கொடுத்திட்டுப் போனாங்க"
என்றார்கள்.

ஆர்வமோடு பிரித்துப் பார்த்தேன். சுமார்
ஐந்து அங்குல உயரத்தில், சுமார் நான்கு
அங்குல விட்டத்துடன் கூடிய அழகான
இரு பிளாஸ்டிக் டப்பாக்கள். அதன்மேலே
ஒரு டப்பாவில் 'வீரா ஹெர்பல் சிகைகாய்த்
தூள் ஃபார் ஆர்டினரி ஹேர்' என்றும்
மற்றொரு டப்பாவில் 'வீரா ஹெர்பல்
சிகைக்காய்த் தூள் ஃபார் ட்ரை ஹேர்'
என்றும் பல வண்ண பிளாஸ்டிக் தாள்
ஒட்டியிருந்தது.

இப்பவும் ஆசையோடு ஒரு டப்பாவைப் பரித்துப்
பார்த்தேன். உள்ளே அழகிய பிளாஸ்டிக் கிண்ணமும்
பிளாஸ்டிக் கரண்டியும் இருக்க, அதை எடுத்துவிட்டுப்
பார்த்தேன். உள்ளே சிகைக்காய்த் தூள் இருந்தது.
மற்றொரு டப்பாவிலும் அதேதான். ஆனால்,
சிகைக்காய்த் தூள் கலர் மட்டும் சற்று மாறி
இருந்தது.


பிளாஸ்டிக் தாளில் படித்துப் பார்த்தேன்.
300 கிராம் சிகைக்காய்த்தூள் + கிண்ணம்
மற்றும் ஸ்பூன் ஃப்ரீ என்று இருந்தது.
இரண்டு டப்பாவிலும் விலை 8 ரூபாய் என்று
போட்டிருந்தது.

"இதுதான் பரிசுப் பாக்கெட்டா? சரி பரவாயில்லை,
ஃப்ரீயாத்தானே வந்தது?" என்றேன்.

அதற்கு, "அது எப்படி ஃப்ரீயாகும்? கூரியர் ஆள்
சர்விஸ் சார்ஜ் என்று 12 ரூபாயும் காஃப்பிக்கு
டிப்ஸ் என்று 3 ரூபாயும் வாங்கிட்டுப் போனானே!"
என்றார்கள் எங்கள் அம்மா. (இந்த சம்பவம்
நடந்த காலத்தில், அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்கு
முன் நகர எல்லையைத் தாண்டி இருக்கும் ஊர்களுக்கு
கூடுதலாக பஸ் சார்ஜ் வசூலிப்பார்கள். சில
நேரங்களில் அனுப்புவரிடமிருந்தும் அல்லது சில
நேரங்களில் பெறுநரிடமிருந்தும் இதை வசூல்
செய்து கொள்வார்கள்.)

அதோடு விட்டார்களா? 'இதுதான் சுண்டைக்காய்
கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்'
என்பார்கள். நீயும் உன் பரிசும். 16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். அதுக்கு
நம்ம கடைத் தெருவிலயே அந்தக் காசுக்கு
நாமே வாங்கிக்கலாமே, அது எதுக்கு பரிசுன்னு
ஒரு பேரு? இதெல்லாம் நீ பண்ற கூத்து" என்று
சப்தம் போட்டுக் கொண்டே (அதாவது திட்டிக்
கொண்டே) சமையலறைக்குப் போய் விட்டார்கள்.

நானோ நொந்து போனேன். நல்ல வேளை- அந்த
பார்சலை அனுப்புவதற்கு கூரியர் கம்பெனிக்கு
அந்த வீரா சிகைக்காய் நிறுவனம் பணம் செலுத்தி
இருக்குமே, அந்த சேதியும் எங்கள் அம்மாவிற்குத்
தெரிந்திருந்தால், திட்டு இல்லை; எனக்கு
மண்டையில் குட்டுதான்! நல்ல வேளை தப்பிச்சேம்ப்பா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!
Related Posts Plugin for WordPress, Blogger...