...பல்சுவை பக்கம்!

.

Tuesday, September 29, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 3

என்னை யாரென்று...?
=====================
மாணவன்: "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"

ஆசிரியர் : "டேய் யார்ரா அவன் கிளாசிலே பாட்டு பாடுறது?"

மாணவன்: "இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்?"

**********************************************************


டீ.வி.யை திட்டுவது என்?
=========================

பேரன் : "ட்டீ.வி! நீ நாசமாப்போக! நீ கட்டையிலப்போக! நீ பாழாப்போக!"

பாட்டி : "டேய் சீனு! ஏண்டா ட்டீ.வி.யை திட்டிக்கிட்டு இருக்கே?"

பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன்.


**********************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, September 24, 2009

ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)


ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி
ஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,
திரு. எஸ்.வி.சேகர் கதாநாயகனாக
நடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்
பாடல். திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்
மற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.
ஷைலஜா(?)] பாடியது.

என்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்
பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,
பாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்
தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம்
இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து (பாடல்):

ஆண்:
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்

பெண்:
இந்திரப் பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...

பெண்:
காலக் கதவினை மெல்லத் திறந்து
பப்பா... பப்பா... பப்பா...
கடந்த பாதையை மறந்து...
காலக் கதவினை மெல்லத் திறந்து
கடந்த பாதையை மறந்து
இந்த கணக்கில் நாம் பிறந்து
... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்


பாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.
சில வார்த்தைகள் மட்டும் பிழையாக
இருக்கலாம்.

[கேட்டவை]

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, September 23, 2009

பயணங்கள் முடிவதில்லை...





பயணங்கள் முடிவதில்லை!



பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.

நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.

அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.

அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.

ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.

கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.

ஒருநாள்.

பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.

கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.

டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.

அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.

அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.

பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.

குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, September 21, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 2

நகைச்சுவை; இரசித்தவை - 2


மறுபடியும் மறுபடியும் தோசையா...?

சாப்பிட வந்தவர்: "என்னப்பா சர்வர், நான் 'தோசை கொண்டுவா'ன்னுதானே சொன்னேன்? ஆனால் நீ தோசை, மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோசைனு கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறாயே?"

சர்வர்: "நீங்கதானே சார் 'சுட, சுட தோசை கொண்டுவா'ன்னீங்க? அதனால்தான் சரக்கு மாஸ்டர் தோசையை சுட, சுட, நான் கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறேன்."

சாப்பிட வந்தவர்: "!?!?!?"

**********************************************************



கால் வலி

நோயாளி: "டாக்டர், வலது கால் இரண்டு நாளாக வலிக்கிறது டாக்டர்"

டாக்டர்: "வயசாயிடுச்சில்லையா? அப்படித்தான் வலிக்கும்!"

நோயாளி: "இடது காலுக்கும் அதே வயசுதானே டாக்டர் ஆகுது? ஆனால் இடது கால் வலிக்கலையே டாக்டர்?"

டாக்டர்: "!? !? !?"
=============================================
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
************************************************************

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்=========>>
வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 19, 2009

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 14, 2009

குடை வள்ளல் யார்?




சேகர்: "ராஜு, நீ என்னிடம் இரவல்
வாங்கிப் போனாயே, அந்தக் குடையை
திருப்பிக் கொடுப்பா."

ராஜு: "அந்தக் குடையை நம்ம தாஸுவிடம்
இரவல் கொடுத்தேன். ஏன், உடனே வேண்டுமா?"

சேகர்: "ஆமாம்ப்பா. என்னிடம் இரவல் கொடுத்த
மோகன் உடனே திருப்பிக் கேட்கிறார்!!!"

-இதில் யார் குடை வள்ளல்?

[பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜோக்!]

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Sunday, September 13, 2009

கப்பலுக்குப் போன மச்சான்!



'கப்பலுக்குப் போன மச்சான்!'
சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடெங்கும் பிரபலமான
பாடல்.மேலும் அரபு நாடுகளில் வாழ்ந்த
தமிழர்களிடையவும் மனங்கவர்ந்த
பாடல்.

தொலைபேசி பிரபலமாகாத, அலைபேசி
அறிமுகமாகாத அக்காலத்தில் இப்பாடலில்
வரும் ஆண் குரலிலும் பெண் குரலிலும்
தங்களையே கண்டனர் பல இளம்தம்பதிகள்.

(இப்பாடலைப் பாடிய காயல் ஏ.ஆர்.ஷேக்
முஹம்மது அவர்கள் கடந்த ஜூன் 9ஆம்
நாளன்று காலமானார்.)

இப்பாடலின் வரி வடிவம் இதோ:

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & ஜெயபாரதி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

இந்தப் பாடலை யூடியூபில் கேட்க:
https://www.youtube.com/watch?v=7vTI_YyRjHc

இந்தப் பாடலை யூடியூபில் பார்க்க:
https://www.youtube.com/watch?v=_aqcRXO-FXE

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Saturday, September 12, 2009

கொக்குக்கு எத்தனை கால்கள்?

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவருக்குத்
துணையாக ஒரு சமையல் காரரும் இருந்தனர்.

ஒரு நாள் வீட்டுக்காரர் பஜாரிலிருந்து
வரும்போது கொக்கு ஒன்றை
வாங்கிவந்து, சமையல்காரரிடம் கொடுத்து,
"கொக்கு குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு
வருகிறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.
சமையல்காரர் குழம்பு சமைத்து வைத்துவிட்டு,
குழம்பையும் சிறு அளவு கறியையும் டேஸ்ட்
பார்க்கலாம் என்று டெஸ்ட் பண்ணியவர் கொக்கு
கறி ருசியாய் இருக்கவே, கால் துண்டு ஒன்றை
முழுவதும் சாப்பிட்டுவிட்டார்.

குளித்து வந்ததும் சாப்பிட அமர்ந்தார் வீட்டுக்காரர்.
சோறு பரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.
முதலில் சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த
கொக்கின் கால் ஒரு துண்டை எடுத்துவைத்தார்.

"இன்னொரு கால் துண்டையும் வையப்பா" என்றார் முதலாளி.

"கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி" என்றார் சமையல்காரர்.

"என்னது? கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே?" என்றார் முதலாளி.

"இல்லீங்க ஒரு கால்தானுங்க" என்றார் சமையல்காரர்.

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்
சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை
வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார்.
வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக் கொண்டு
ஒற்றைக் காலுடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த
சமையல்காரர், "பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக்
கால்தான்" என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும்
தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு
தனது இரு காலகளையும் மடக்கி கொண்டு பறக்க
ஆரம்பித்தது. "பார், கொக்கிற்கு இரு கால்கள்"
என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி.

"நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட
ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால்
கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே"
என்றாராம் சமையல்காரர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்களின் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

அரிய நீல நிற வைரம்!



அரிய நீலநிற வைரம்

உறுதிக்கு வைரத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.
'வைர நெஞ்சம்',
'வைரம் பாஞ்ச கட்டை'
என்றெல்லாம் சொல்வார்கள்.
'வைரத்தை
வைரத்தால்தான் அறுக்க வேண்டும்' என்றொரு சொலவடையும் உண்டு.

வைரம் கருப்பு, மஞ்சள், வெள்ளை என
பல நிறங்களில் கிடைத்தாலும்
சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பது
மிக அரிது. அப்படி இந்த இரு நிறங்களில்
கிடைக்கும் வைரங்கள் மிக, மிக விலை
மதிப்பு மிக்கவை.

கடந்த 12.05.2009 அன்று ஜெனீவாவில் தொலைபேசிவழி நடந்த ஒரு ஏல
நிகழ்ச்சியில் நீல நிற வைரம் ஒன்று விற்பனையாகியது. இது 7.03 கேரட் எடை கொண்ட சதுர வடிவிலானதாகும். இந்த வைரம் 9.49 மில்லியன் அமெரிக்கன் டாலர்
தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. (இந்திய ரூபாய் மதிப்பு ரூபாய் 46 கோடியே 50 லட்சம்.) ஒரு கேரட் விலையாக அதிகபட்சத் தொகைக்கு விற்கப்பட்டது என்று
இது புதிய உலக சாதனையாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வைரத்தை ஏலம் மூலமாக விற்றுக்
கொடுத்த ஏல நிறுவனம்
இதன்மூலம் தங்களுக்குக் கிடைத்த
தரகுத் தொகை (கமிஷன்) எவ்வளவு
என்பதையும் வாங்கியவர் பெயரையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர் 6.04 கேரட் எடை கொண்ட
வைரம் அக்டோபர் 2007-ல்
ஹாங்காங்கில் 7.9 மில்லியன் அமெரிக்கன்
டாலருக்கு அதிகபட்சமாக
விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைரம் மற்றும் நவமணிகளை கேரட் என்ற
அளவால் குறிப்பிடுவர். 5 கேரட் கொண்டது
ஒரு கிராம் ஆகும். அதாவது
0.20 கிராம் என்பது ஒரு கேரட் எடையாகும்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 11, 2009

கீழேயா? மேலேயா?

தெருவில் சைக்கிளில் ஒரு வியாபாரி
பெரிய வெங்காயம் விற்றுக் கொண்டு
போய்க்கொண்டிருந்தபோது எங்கள்
பக்கத்து வீட்டருகில் மணலில்
சைக்கிள் சக்கரம் சிக்கி கீழே விழுந்து
விட்டார். பெரிய வெங்காயம் எல்லாம்
மணலில் கொட்டி விட்டது.

இதைப் பார்த்த நானும் பாபுவும்
அவற்றைப் பொறுக்கி எடுத்து
மணலைத் தட்டி விட்டு மீண்டும்
சாக்குப் பையில் போட அவருக்கு
உதவிக் கொண்டிருந்தோம்.

அப்போது தெருவாசலுக்கு வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி, பாபுவிடம்,
"ஏண்டா பாபு வெங்காயமெல்லாம்
கீழே கொட்டிடுச்சா?" என்று கரிசனமாகக்
கேட்டார்கள்.

"கொட்டினது கீழே இல்ல பாட்டி;
தரை மேலே" என்று பாட்டியிடம்
பதில் சொன்னான், பாபு.

"இந்த எடக்கு மடக்குக்கு ஒன்னும்
கொறச்சல் இல்ல. நீயும் உன்
வாயும்" என்று பாபுவைத் திட்டி
விட்டு திரும்பவும் வீட்டுக்குள்ளே
போய்விட்டார்கள் அந்தப் பாட்டி.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்
அதே புன்சிரிப்புடன் அந்த வியாபாரிக்கு
உதவிக் கொண்டிருக்கிறான் பாபு!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

நல்லா ஒழுகுமா?

மயிலாடுதுறை காந்திஜி சாலையில்
(இரண்டாம் இலக்கச் சாலை என்றும்
மற்றொரு பெயர் உண்டு.) வடநாட்டு
சேட்டுகள் நிறைய கடை வைத்துள்ளார்கள்.

அந்தக் கடைகளில் கடை முதலாளி
சேட்டுகள் தனது ஊரிலிருந்து சிறு வயது
பையன்களை வரவழைத்து சேல்ஸ்மேனாக
வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தப்
பையன்கள் தமிழை புதுமாதிரியாகப்
பேசி, வியாபாரம் செய்வார்கள்.

"இந்தப் பிஸ்கட் நல்லாயிருக்குமா"
என்று கேட்டால் "நல்லாயிருக்கும்"
என்பார்கள்.

"இந்த வாஷிங் பவுடர் நல்லா வெளுக்குமா"
என்று கேட்டால் "நல்லா வெளுக்கும்"
என்பார்கள்.

அதில் ஒரு பொது வணிகக் கடையில்
(ஜெனரல் ஷாப்) நான் அடிக்கடி பொருள்கள்
வாங்குவதுண்டு.

அப்படி ஒரு நாள் நான் பொருள் வாங்கிக்
கொண்டிருக்கும்போது, பக்கத்தில் மற்றொரு
வயதான பெரியம்மா 5 லிட்டர் கொள்ளளவு
கொண்ட வாட்டர் கேன்(அல்லது ஆயில் கேன்)
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிளாஸ்டிக்காலான அந்தக் கேனை கையில்
வைத்து, அடிப்புறம் பார்த்துக் கொண்டே,
"இந்தக் கேன் ஒழுகுமா?" என்று அந்தக்
கடைப் பையனைக் கேட்டார்கள்.

உடனே அந்தப் பையனும் "நல்லா ஒழுகும்"
என்றான்.

அந்தப் பெரியம்மா சேட்டிடம், "என்னா சேட்டு,
'ஒழுகுமா'ன்னுக் கேட்டா 'நல்லா
ஒழுகும்'ங்குறான்?" என்று கேட்டார்கள்.

சேட்டும் அந்தப் பையனை ஹிந்தியில்
திட்டிவிட்டு, "இல்ல பெரியம்மா,
நல்லா ஒழுகும்னு அவன் சொல்லல.
'நல்லா ஒழைக்கும்'ங்குறான்" என்று
திருத்தம் சொன்னார் பெரியம்மாவிடம்.

"சேட்டு நல்லா சமாளிக்கிற சேட்டு!
பொழச்சிக்குவே!!"என்று பெரியம்மா
சேட்டைப் பாராட்டி விட்டு சிரித்தவாறு
பணத்தைக் கொடுத்து கேனை வாங்கிச்
சென்றார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Thursday, September 10, 2009

அன்பாக... ஆதரவாக...

அன்பாக... ஆதரவாக...

அன்பருக்கு நலமில்லை ஆஸ்பத்திரிக்குப் போனார்.
டாக்டர் பார்த்தார் செக் பண்ணார்.

இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை,
ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி எடுத்தார்.

"ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்குங்கள்,
மாத்திரை, மருந்துகள் சாப்பிடுங்கள்"

சொன்ன மருத்துவர் கொழிக்கின்றார்;
நோயாளி பணத்தை செலவழிக்கின்றார்.

"இந்த சாப்பாடாடெல்லாம் மருந்துங்க;
மத்த எல்லாத்தையும் மறந்துடுங்க;

தினமும் கொஞ்ச தூரம் நடந்திடுங்க;
உடல் பழையநிலை அடைந்திடுங்க"

சொன்னார் டாக்டரும் நன்றே!
அன்பரும் தங்கினார் அன்றே!

நண்பர்கள், உறவினர்கள் வந்தனரே!
நன்றாய் அறிவுரை தந்தனரே!

'மதுவும் சிகரெட்டும் வேண்டாமே!
மாதுவால் எய்ட்ஸ் வந்திடுமே!'

வந்தவர்கள் சும்மாவா இருந்தார்கள்?
சூழ்நிலை தன்னை மறந்தார்கள்.

"மனோகர் அப்படித்தான் நலமில்லை;
மறுநாள் அந்த ஆளே இல்லை"

"பொன்னுசாமி மாமாவுக்கு வயித்துப்போக்கு;
போயிட்டாரு மறுநாளு சுடுகாட்டுக்கு"

"ஆறுமுகம் அத்தானுக்கு ஹார்ட் அட்டாக்கு;
அய்யய்யோ அப்பவே அங்கேயே போயிட்டாரு"

மற்றும் பற்பல உரைத்தார்கள்.
வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

நோயாளிக்கு கிலியைக் கிண்டலாமா?
இருக்கின்ற பயத்தைத் தூண்டலாமா?

யாருக்குமே உள்ளபடி சாதகமா?
நோயாளிக்குமே உள்ளத்திற்கு பாதகமே!

நல்லதை ஆறுதல் சொல்லலாமே?
உள்ளத்தை தேறுதல் செய்யலாமே?

நோயாளிக்கு ஊட்டணும் தெம்பு!
நமக்கேனுங்க ஊர்வழக்கு வம்பு?

வந்தாலும் வாய்ப்பேச்சு, வெட்டிப்பேச்சு.
வராங்காட்டி ரொம்பவே நல்லதாச்சு.

உறவையும் நட்பையும் மறந்திடுங்கள்.
ஊட்டுக்குள்ளே கம்முனு இருந்திடுங்க.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

இந்த நாள் இனிய நாள்!

இன்று (07.08.2009) இனிய நாளாய் அமைந்திடும்
அனைவருக்கும்.


அதோடு இன்றைய நாளில் ஒரு சுவாரஸ்யமான
நேரமும் உண்டு. பிற்பகல் 12 மணி 34 நொடி
56 வினாடிதான் அது. இதன்படி நேரத்தையும்
தேதியையும் வரிசையாக எழுதினால்
பின்வருமாறு எழுதலாம்:

12:34:56 - 7/8/9.


எல்லா இலக்கங்களும் வரிசையாக அமைந்துள்ளன,
0-ஐத் தவிர.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

[பின் குறிப்பு: இந்தக் குறிப்பு 2009 ஆகஸ்ட்
7-ஆம் நாளன்று எழுதப்பட்டது.]

Wednesday, September 9, 2009

பஸ்ஸை ஓட்டிப் பார்க்கலாமா?

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர்
சீனு எனக்கு நண்பர். நான் எங்களூரில்
எப்போதாவது பஜாரில் நண்பர்களோடு
நின்று பேசிக் கொண்டிருந்தால், என்னை
பார்த்து கையாட்டிவிட்டுச் செல்வார்.

அதுபோல் ஒரு நாள் காலையில் சீனு
பஸ்ஸை ஓட்டிக் கொண்டே என்னைக்
கடைத்தெருவில் பார்த்து கையாட்டிவிட்டுச்
சென்றார்.

பஸ்ஸுக்கள் மதியம் சுமார் 12-லிருந்து
1 மணிக்குள் பணிமனை சென்று டூட்டி
மாற்றி வருவார்கள்.

ஆனால், அன்று மாலையே நான் மயிலாடுதுறை
செல்ல வேண்டியிருந்ததால், கடைத்தெருவில்
பஸ்ஸுக்காகக் காத்திருந்தால், வந்த பஸ்ஸை
காலையில் ஓட்டிய ஓட்டுனர் சீனுவே ஓட்டிக்
கொண்டிருந்தார்.

பஸ்ஸில் ஏறியதும் நான் அவர் அருகில் சென்று,
"என்ன சீனு, காலையிலும் ஓட்டினீங்க; இப்பவும்
ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே,ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு, "அதுவா நிஜாம்? ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கேன்" என்றார் சீனு.

நான் பதறிப் போய், "என்ன ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கீங்களா? லைசென்ஸ் எப்ப எடுப்பீங்க? நாங்க
50, 60 பேர் உங்களை நம்பி, உங்கப் பின்னால
இருக்கோம்,நீங்கதான் பொறுப்பு" என்றேன்.

"அட நீ வேற பீதியக் கிளப்பாதப்பா. நான் சொன்னது
'ஓட்டி' இல்ல! அதாவது 'ஓ.ட்டீ'. ஓவர் டைம்
டூட்டி பார்க்கிறேன்னு சொன்னேன்" என்று நண்பர்
சீனு சொன்னதும் பஸ்ஸில் அருகிலிருந்த
சக பயணிகளிடையே கல... கல... கல...

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Tuesday, September 8, 2009

அ(ங்கே) ஆ(ரம்பித்து) இ(ங்கே)...

அன்பு : அம்மா + அப்பா

ஆர்வம் : நூல்கள் படிப்பதில்

இன்பம் : இறைவனது அற்புதங்களை இரசிப்பதில்

ஈகை : தேவையுடையோருக்குத் தகுந்த
சமயத்தில் உதவுதல்

உயர்வு : முயற்சியுள்ளவரையில் உயர்வு உண்டு

ஊக்கம் : அரிய செயல்களைப் புரிய
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது

எண்ணம் : அனைவரும் இன்புற வேண்டும்

ஏன் இந்தப்
பதிவு? : சுட்டீஸ் லாஃபிரா அழைத்ததால்

ஐயம் : நம்பியபின் ஐயம் ஏன்?

ஒற்றுமை : சண்டைகள், பிரிவுகள், வேறுபாடுகள்
களைந்தால் வருவது

ஓட்டம் : எதிலும் 'ஓட்டம்' நன்றாயிருந்தால்
எதுவும் நன்றாய் 'நடக்கும்'

ஔடதம் : மனதார சிரித்து மகிழ்வது

அஃது : என் பேனா: நண்பன்

இதில் கை கோர்க்க அழைக்கிறேன்; அபி அப்பா, கிருஷ்ணா.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 7, 2009

கலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி!

நானும் நண்பன் பாலாஜியும் பஸ்ஸில்
காலேஜுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
காலேஜ், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
தூரத்தில், பூம்புகாருக்கு 3 கி.மீ. முன்பாக
உள்ள மேலையூரில் அமைந்துள்ள
'பூம்புகார் பேரவைக் கல்லூரி'. சுருக்கமாக ப்பீ.ப்பீ.கே.
(இப்போது அதன் பெயர் 'இந்து சமய அறநிலை ஆட்சித்
துறையின் பூம்புகார் கல்லூரி')

அன்று திங்கள் காலை நேரம்.

பஸ்ஸில் நிறைவான கூட்டம். மாணவர்கள் அனைவரும்
அரட்டைப் பேச்சுடன் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் உட்கார இருக்கைகள் கிடைத்து விட்டன.

நான் பேசிக் கொண்டேயிருக்க, 'உம்' போட்டு, கேட்டு
வந்த பாலாஜி இடையிடையே கண் சொக்கி தூங்க ஆரம்பித்தான்.

நான் அவனிடம், "என்னப்பா தூங்கி விழறயே, ஏன்?" என்று
கேட்டேன்.

"சென்னை போய்விட்டு நேற்று நைட்தான் பஸ்ஸில ஊர் வந்தேன்"
என்றான் பாலாஜி.

"அட அப்படின்னா வீட்டிலயே தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?"
என்று நான் கேட்டேன்.

"அதுக்குத்தானே காலேஜுக்கு வரேன்" என்று பட்டென்று பதில் சொன்னான் பாலாஜி.

'தூங்கினாலும் காலேஜ் போகணும் என்று காலேஜ் வருகிறானே என்று
பாராட்டுவதா; காலேஜுக்கு வந்தும் தூங்கப் போறானே என்று
திட்டுவதா' என்று நான் திகைத்து விட்டேன்.

வேடிக்கையை வாடிக்கையாய் கொண்ட கலகல நண்பன் பாலாஜி
இப்போது நம்மிடையே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக
நோய் தாக்கி அகால மரணமடைந்தா(ன்)ர்.

அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Sunday, September 6, 2009

பேய்க்கு பயப்படலாமா?

'இல்லறம் சிறக்க பெரிதும் பங்காற்றுவது கணவனா?
மனைவியா?' என்ற தலைப்பில் பட்டிமனறம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. இரு அணியினரும் நகைச்சுவையுடனும்
கருத்துக்களுடனும் தங்கள் வாதங்களை முழங்கிக்
கொண்டிருந்தனர்.அப்பொழுது நேரம் சுமார் 9.30 மணி இருக்கலாம்.

ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.. "ஒரு நண்பரிடத்தில்
'நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா?' என்று கேட்டேன்.
'அதுகூடத்தானே 15 வருஷமாய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்'
என்று வேதனையோடு நொந்துபோய் பதில் சொன்னார் நண்பர்.
அவருடைய அனுபவம் அப்படி.

ஓர் ஆள் மனைவியைப் பார்க்க மாமியாருடைய ஊருக்குப் போறாரு.
போற வழி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுபோன்ற பாதை. இரவு நேரம்
ஆகிடுது. இருட்டுப் பாதையில் பயந்துகொண்டே, பாட்டு பாடிக்கொண்டு
போறாரு. அப்போ வேற ஒரு நபர் குறுக்குப் பாதையிலருந்து வந்து
இவர் கூடவே சேர்ந்து நடக்கிறாரு.

நம்ம ஆளு 'துணைக்கு ஆளு வந்துடுச்சி' என்று தெம்போட,
வந்த நபர்கிட்டே பேச்சு கொடுத்துக்கொண்டே, 'இந்த பாதையில
பேய் நடமாட்டம் இருக்குன்றாங்களே, நிஜமா?'னு கேட்குறாரு.
அதுக்கு அந்த நபர், 'எனக்குத் தெரியாது; நான் செத்துப்போய்
மூணு வருஷம் ஆகிடுச்சி. வேற யாராவது உயிரோட
இருக்கிறவங்களாப் பார்த்துக் கேளுங்க'னு சொன்னாரு பாருங்க,
நம்ம ஆளு எடுத்த ஓட்டம், மாமியார் வீட்டுலபோய்த்தான்
நின்னாரு"

இப்படி பேச்சாளர் பேசிக்கொண்டு இருக்கும்போதே,
நடு(வில் குறுக்கிடுப)வர் இடைமறித்து, "அட நீங்களும் இந்த
இரவு நேரத்தில பொண்டாட்டி, பேய்னு கதைசொல்லி
எல்லோரையும் பயமுறுத்தறீஙகளே, நியாயமா?
நான் மற்றவங்களைச் சொன்னேன். எனக்கு இந்த பிசாசு,
பேய் எதுவும் பயம் கிடையாது......" என்று நிறுத்தி,
நிதானமாய், இழுத்துச் சொன்னவர் தொடர்ச்சியாய்,
"அதாவது பகலில்" என்று சொன்னதும் சிரிப்பொலியும்
கரவொலியும் அடங்க சில நிமிடங்களாயின.

கண்டு இரசித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Saturday, September 5, 2009

இன்பமான நேரம்

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது
என்னவென்றால்!

இந்த ஆண்டு (கி.பி.2009) செப்டம்பர் மாதம்
9-ஆம் நாள் அன்று காலை சுமார் 9 மணியளவில்
அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில்
அமைந்துள்ள ஓர் அம்சம் உள்ளது.

அன்றைய தினத்தின் காலை 9 மணி 9 நிமிடம்
9 வினாடி என்பது விந்தையான வேளை ஆகும்.

அந்த நேரத்தில் நாம் நினைத்துக் கொள்வோம்,
பின் வரும் கால குறியீட்டை.

அதை இப்படி குறிக்கலாம்:
09/09/09 - 09:09:09


இதே மாதிரி இன்னும் 13 மாதங்களில் வரும்
சிறப்பான நேரம்:- 10/10/10 - 10:10:10

அவ்வளவுதான் மேட்டர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Friday, September 4, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 1

அம்மா பேய் : "நம்ம பையனுக்கு மனுஷன் கதை சொல்லாதீங்கன்னேன், கேட்டீங்களா?"

அப்பா பேய் : "ஏன் நம்ம பையனுக்கு என்ன ஆச்சு?"

அம்மா பேய் : " பயந்துபோய் அழறான்"

******************************************************

நோயாளியின் நண்பர்: "டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணுன ராமு இப்ப எங்க இருக்காரு?"

டாக்டர் : "அவரு எங்க இருக்காரு?!?!?"

******************************************************
ரயில் இருப்புப்பாதையில் நடந்துகொண்டே.....

ஒரு பைத்தியம்: "முட்டாளுங்க, மாடிப்படியை எவ்வளவு தள்ளித் தள்ளி வச்சிருக்கானுங்க!!!"

மறு பைத்தியம்: "அதாவது பரவாயில்லை. மாடிப்படிக்கு, கைப்பிடியை எவ்வளவு கீழே கொண்டுபோய் வச்சிருக்கானுங்க!!!"

*******************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Thursday, September 3, 2009

சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?



சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?

ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்கள் நண்பர்களாய் இருந்தார்கள்.
எப்போதும் எங்கே போனாலும் வந்தாலும் ஒன்றாகவே போவார்கள்,
ஒன்றாகவே வருவார்கள்.

ஒரு நாள். மூவரும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, முதல்
நண்பன், "நம்ம ராஜன் தோட்டம் மைதானத்துல மெஜினி சர்க்கஸ்
வந்துருக்கு. அதுக்குப் போவோமாடா?" என்று கேட்டான்.

அதற்கு இரண்டாம் நண்பன், "நம்ம வானதி தியேட்டர்ல கூர்யா
நடிச்ச படம் வந்திருக்கு. அதுக்குப் போவோம்டா" என்று சொன்னான்.

முன்றாவது நண்பன், "மெஜினி சர்க்கஸும் வேணாம், கூர்யா
படமும் வேண்டாம். நம்ம ஸ்கூலிலேயே அடுத்த மாதம் எக்ஸாம்
வருதுடா. அதனால கிளாஸுக்கே போலாம்டா" என்றான்.

அப்பொழுது முதல் நண்பன், "ஒரு ஐடியா. ஒரு ரூபா காயின்
எடுத்து பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால்,
மெஜினி சர்க்கஸ் போவோம்; தலை விழுந்தால், கூர்யா
படத்துக்குப் போவோம்" என்று யோசனை கொடுத்தான்.

கிளாஸுக்குப் போகவேண்டுமென்று சொன்ன அந்த மூன்றாவது
நண்பன், "என்னங்கடா, காயின்ல ரெண்டு சைடுதானடா
இருக்கு? நான் கிளாஸுக்குப் போகணுமின்னு சொல்றேனே,
அதுக்கு எப்படிடா சாய்ஸ் பார்க்குறது?" என்று கேட்டான்,
பரிதாபமாக.

உடனே, "சுண்டி போடுற காயின் நட்டுக் குத்தலா
நின்னுச்சுன்னால், நிச்சயமா ஸ்கூலுக்குப் போகலாம்டா"
என்றான் இரண்டாவது நண்பன், கூலாக.

ஆகவே,
நல்லவர் எனில் பழகு;
இல்லை எனில் விலகு.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

Wednesday, September 2, 2009

என்ன வரம் வேண்டும்?



'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.

ஒரு நாள்.

ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக்
கொண்டே, "பாட்டிலில் சிரின்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல்
மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக
இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி.
படக் என்று சத்தம்.
பளிச் என்று வெளிச்சம்.
கடவுளே அந்த நபரின்முன்னே தோன்றிவிட்டார்.

"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து
கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன்.  இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றார் கடவுள்.

"கடவுளே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும்
காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர்.
திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.

"ஓ சூப்பர் தலைவா, சூப்பர், சூப்பர்" என்று கடவுளைப் பாராட்டிவிட்டு,
'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த
அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும்
இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று.

கடவுள் அப்ப ஷாக்க்க்க்கானவர்தான், இன்னமும் அங்கேயேதான்
அசந்துபோயி நிக்கிறாராம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Tuesday, September 1, 2009

கற்றுத் தராதது!

கற்றுத்தராதது!

*எழுதியவர்: ப.ரியாஜ் அஹமது, லால்பேட்டை.

*மொழிகள் பயில
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்
முன்னோர்களே!

*வாழ்வதற்கும்
இலக்கணம்
வகுத்துத் தந்தீர்கள்
மூதோர்களே!

*நல்வழியில்
நடக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்!

*காதலிக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்.
ஆனால்,
காதலில் வெற்றிபெற
இலக்கணம்
கற்றுத்தராமல்
சென்றுவிட்டீர்களே!

*வெளியீடு: தினமலர் வாரமலர் 13/09/1998.
அனுப்பித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...