...பல்சுவை பக்கம்!

.

Wednesday, December 26, 2012

போதும்... ஆனா... போதாது! #108


இளங்கோவன் சார் எங்களின் வகுப்பாசிரியர். 9-ஆம்,
10-ஆம் வகுப்புகள் படிக்கும்போது, புத்தகத்தைப்
பார்க்காமலேயே உலக விஷயங்கள் கலந்து சுவையாக
பாடம் நடத்துவார்.

அப்போது ஒரு நாள் இன்பச் சுற்றுலா சென்றிருந்தோம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் சென்றுவிட்டு, சிவகங்கை
பூங்கா சென்றோம்.

மதிய நேரம். வெயிலில் நடந்து, அலைந்து, களைத்துப்
போய், பசி வயிற்றை உள்ளேயும் வெளியேயும்
கிள்ளியது.

உடனே இனிய நிழல் தரும் மரத்தின்கீழ் அமர்ந்து,
கை கழுவிவிட்டு,  லஞ்ச் பாக்ஸைத் திறந்து,
கொண்டு சென்றிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.

 எனக்கு பசி மிகுதியாய் இருந்தபடியாலும் சிறிய
பாக்ஸில் குறைவான உணவே இருந்தபடியாலும்
நான் முதலில் சாப்பிட்டு விட்டேன்.

ஆசிரியராய் பணியாற்றிய எங்கள் அண்ணன், இளங்கோவன்
சாருக்கு நண்பர். சாருக்கு என்மீது, தனிப் பிரியம் உண்டு.

நான் சாப்பிட்டுவிட்டதைப் பார்த்த இளங்கோவன் சார்,
என்னிடம், தன்னுடைய மூன்றடுக்கு லஞ்ச் கேரியர்
பாக்ஸில் இருந்த உணவை நீட்டி, "சாப்பாடு வேணுமா
நிஜாம்?" என்று கேட்டார்.

உடனே நான், "பத்தலை சார்" என்றேன்.

"பத்தலைன்னா இந்த சாப்பாடு வேணுங்க்கிறதை
எடுத்துக்கோ" என்றார் சார்.

மீண்டும் உடனே "பத்தலை சார்" என்றேன் நான்.

"அப்படின்னா சாப்பாடு எடுத்துக்கோயேன்" என்றார் சார்.

'சாப்பாடு வேணாம்' என்பதைத்தான் நான் "பத்தலை'
என்று உளறியிருக்கிறேன். சுதாரித்துக் கொண்டேன்.

"இல்லை சார், வயித்திலே இடம் பத்தலை; அதனால்
சாப்பாடு வேணாம்னேன்" என்றேன்.

"ஓ  அப்படியா! உளறினாலும் சமாளிச்சிட்டியே, பரவாயில்லை"
என்று சொல்லி சார் சிரிக்கவும் பையன்கள் எல்லோரும்
சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.

-அ .முஹம்மது நிஜாமுத்தீன்.  
  
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, December 23, 2012

குண்டப்பா - மண்டப்பா 8 #107

குண்டப்பா - மண்டப்பா 8 #107

மண்டப்பாவைப் பார்க்க, அவரது வீட்டிற்குச் சென்றார்
குண்டப்பா. அப்போது மண்டப்பா குளித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் குண்டப்பாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

குண்டப்பா கேட்டார்: "மண்டப்பா, என்ன செய்துட்டிருக்கே?"

மண்டப்பா சொன்னார்: குண்டப்பா, நான் குளிச்சிட்டிருக்கேன்!"

குண்டப்பா கேட்டார்: "ஏன் மண்டப்பா சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறே?"

மண்டப்பா சொன்னார்: "ஒரே குளிரா இருக்கில்லையா? சட்டை
போட்டுக்கிட்டு குளிச்சால், குளிராதுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறேன்"

குண்டப்பா பாவம் மண்டை காய்ந்து போனார்.



. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, November 8, 2012

செல்போன் சிந்தனை!!! #106

செல்போன் சிந்தனை!!!

இரவு சுமார் 9 மணி இருக்கும். சிதம்பரத்திலிருந்து
மயிலாடுதுறைக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். பஸ்
புறப்பட்டு 5 நிமிடங்கள்கூட ஆகவில்லை.
செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து
(எஸ்.ப்பீ. கோயில் தெரு) சீர்காழி ரோடில் பஸ்
திரும்பியது.

எனதருகில் அமர்ந்திருந்தவரின் (சுமார் 40 வயதிருக்கலாம்)
செல்போன் இனிய ரிங்டோன் தந்தது. எடுத்து டிஸ்பிளேயில்
அழைப்பவர் பெயர் பார்த்தவர் இடது கையால் செல்லை
காதில் வைத்து, வலது கையை வாயின்மேல் வைத்து
பொத்திக் கொண்டு பயபக்தியுடன் பேச ஆரம்பித்தார்.

"இதோ வந்திட்டிருக்கேன்மா... இன்னும் 15 நிமிஷத்திலே
வந்திருவேன்மா... ஆமாம்மா... இல்லம்மா...
வைத்தீஸ்வரன்கோவில் வந்திட்டேன்மா... 15 நிமிஷத்திலே
வந்திடுவேன்மா... நீ சாப்பிட்டுட்டு தூங்குமா... நான்
வந்திடுறேன், வச்சிறவா?" என்று பேசிவிட்டு செல்லில்
அழைப்பை துண்டித்துவிட்டு என்னைப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் 'வெற்றிகரமாக மனைவியிடம்
பேசிவிட்ட பெருமிதமா? அல்லது சிதம்பரத்தையே பஸ்
விட்டு முழுமையாக விலகாத நிலையில்,
வைத்தீஸ்வரன்கோவில் வந்துவிட்டதாய் சொன்னோமே
அதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தினால் தோன்றிய
கலவரமா? அல்லது இரண்டும் கலந்த கலவையா?'
எது என்றே   புரிந்து கொள்ள இயலாத உணர்வைக் கண்டேன்.

ஏன் இப்படி உண்மையை மறைத்து கோக்குமாக்காக
உளறவேண்டும் என்கிற கேள்வி நீண்ட நேரம் என்னைக்
குடைந்து கொண்டிருந்தது.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.   

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, August 31, 2012

எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)


எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)

இது நிஜாம் பக்கம் 4-ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதல் பதிவு
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"எங்க ஊரு தேவதை - கதை!"

எங்க ஊருல ஒரு தேவதை இருந்துச்சு. (பேரு தேவையில்லை.)
அது கொஞ்சம் வித்தையாசமான தேவதை. அது எங்க
ஊருடைய எல்லையில ஒரு தென்னை மரத்தில
இருந்துச்சு. (ஆமாங்க... தென்னை மரம்தான்...)

அது அந்த வழியாகப் போகிறவங்க, வருகிறவங்ககிட்ட
ஏதாவது வம்பு பண்ணும். ஆனாலும் நல்ல தேவதை.
ஒரு நாள் அந்த வழியாக ஒரு வர்ணம் தீட்டுகிறவர்
போனார்.

அப்ப அந்த தேவதை அவரைக் கூப்பிட்டது. "எங்கே
போறீங்க?"ன்னு கேட்டுச்சு.

"கண்ணம்மா வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப்
போறேன்"னாரு அந்த பெயிண்டரு.

"இந்தப் பையில 100 தங்கக் காசு இருக்கு. நீ வெச்சிக்க"
அப்படின்னு சொல்லி ஒரு பைய பெயிண்டருக்கிட்ட
கொடுத்திச்சி அந்த தேவதை.

ஜாலியா வாங்கிகிட்டாரு அந்த பெயிண்டரு.
அப்ப அந்த தேவதை, அந்த பெயிண்டருக்கிட்ட
"அந்தப் பையிலருந்து எனக்கும் பங்கு
கொடு"ன்னுச்சு.

அந்தப் பெயிண்டருக்கு கொடுக்க மனசே வரலை.
இருந்தாலும் கேட்டுடுச்சேன்னு 3 தங்கக் காசை மட்டும்
எடுத்து தரையில் வீசிட்டுப் போனாரு அவரு.

ஊருக்குள்ளே போனதும் கண்ணம்மா வீட்டுல
பெயிண்ட் அடிக்க ஆரம்பிக்குமுன்னே அந்தப்
பையை வீட்டு உச்சியில கண் பார்வை படுறாப்பல
மாட்டி வச்சிட்டு வேலை செஞ்சாரு பெயிண்டரு.

பெயிண்டரு அந்தப் பையைப் பார்த்துக்கிட்டே வேலை
செய்யுறாரேன்னு டவுட்டு வந்திடுச்சி அந்த
வீட்டுக்காரம்மா கண்ணம்மாவுக்கு.
பெயிண்டருக்கிட்ட கேட்டேபுட்டாங்க.

"அதுல புளியம் விதை வாங்கி வச்சிருக்கேன்"னு
பொய் சொல்லிட்டாரு, பெயிண்டரு.

அப்புறம் அவரு சிறு நீர் கழிக்கப் போகும்போது
கண்ணம்மா அந்தப் பையைத் திறந்து பார்த்தாங்க.
உள்ளே அம்புட்டும் தங்கக் காசு!

உடனே அந்தப் பையிலருந்த தங்கக் காசையெல்லாம்
எடுத்து வச்சிக்கிட்டு, அதுல, புளியம் விதையைக்
கொட்டி வெச்சிட்டாங்க.

வேலையை முடிச்சிட்டு, பையை எடுத்துப் பார்க்கிறாரு
பெயிண்டரு. உள்ளே புளியம் விதைதான் இருக்கு.
வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டா "நீ புளியம் விதைன்னுதானே
சொன்னே?" அப்படின்னு சண்டைக்கு வருது அந்தம்மா.

பாவம், பெயிண்டரு திரும்ப அந்த தேவதை இருக்கிற
மரத்தடிக்கு வந்திட்டாரு. தேவதையைக் கூப்பிட்டு
புகார் கொடுத்தாரு, வீட்டுக்கார கண்ணம்மா பேருல.

அதுக்கு அந்த தேவதை, "அந்த தங்கக்காசுலாம்
கண்ணம்மாக்குத்தான் நான் வெச்சிருந்தேன்.
நீ வரவும் உன்மூலமா அவங்ககிட்ட
சேர்ப்பிச்சிட்டேன். நீ கவலைப் படாதே"ன்னுச்சாம்.

"அப்படின்னா எனக்கு எதாவது தங்கக்காசு
அன்பளிப்பு கொடு"ன்னு அழுதுகிட்டே கேட்டாரு
பெயிண்டரு.

"அதோ, நீ காலையில தூக்கி வீசிட்டுப் போனியே
அதே 3 தங்கக் காசு அங்கேயேதான் கிடக்கு.
அதை எடுத்துட்டுப் போ"ன்னு சொல்லிட்டு
தன் தென்னை மர வீட்டுக்குபோயிடுச்சி அந்த
தேவதை.

"அடடா, முதல்லியே 20, 30 காசையாவது
தேவைதைகிட்ட போடாம போய்ட்டேனே!"
அப்படின்னு வருத்தப் பட்டுக்கிட்டே தேவதை
காட்டிய 3 தங்கக் காசை மட்டும்
எடுத்துக்கிட்டு தன் வீட்டுக்குப் போய்
சேர்ந்தாரு அந்த பெயிண்டரு.


பின் குறிப்பு 1: இந்தக் கதையின் நீதி என்ன?

பின் குறிப்பு 2: வேணும்ங்கிறவங்க "எங்க ஊரு தேவதை"ங்கிற
தலைப்பை 'ஓர் ஊரில் ஒரு தேவதை' அப்படின்னு
மாத்திப் படிச்சிக்கலாம். 'எங்க ஊருல' என்பதை
'ஓர் ஊருல' எனவும் மாத்திக்கவும்.

பின் குறிப்பு 3: 'எங்க ஊரு தேவதை'ங்கிற தலைப்புல
குடந்தையூர் ஆர்.வி.சரவணன் தன்னுடைய
படைப்பை வழங்குமாறு அழைக்கிறேன்.


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, August 14, 2012

மார்க்கச் சுடரொளி ஜாமிஆ (வாழ்த்துப்பா) #104

மார்க்கச் சுடரொளி ஜாமி! (வாழ்த்துப்பா)

எங்களூரின் 100 ஆண்டுகள் கண்டு வீறுநடை போடும்
ஜாமி மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி,
கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய
தேதிகளில் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக்
கொண்டாடியது.

ப்போது வெளியிடப்பட்ட ஜாமி நூற்றாண்டுப்
பெருவிழா வரலாற்று மலரில் வெளிவந்த எனது
வாழ்த்துப்பாவை இங்கே வழங்குகிறேன்.




பல்கலைக் கழகம் ஜாமி
பார்புகழ் நிறுவனம் ஜாமி
நூறாண்டு சேவை செய்துமே
தொடரும் சாதனை ஜாமி!

நூறாண்டு முன்னே நிறுவனர்
அல்லாமா அப்துல்கரீம் துவக்கினரே
அடுத்தடுத்து அறிஞர் பெருமக்கள்
தலைமை ஏற்று நடத்தினரே!

ஹாபிழ், ஆலிம், கணினியும்
முழுதும் கற்ற மாணாக்கர்
அறிஞர் என்றே உயர்ந்தார்கள்
அகிலம் முழுதும் சிறந்தார்கள்!

எழுத்து, பேச்சு, போதனை
எதிலும் சிறந்து விளங்குகிறார்
மார்க்க சேவை புரிகின்றார்
மாநிலம் போற்ற உயர்கின்றார்!

நூறாண்டு காலத்து வரலாறு
எழுதிட பக்கம் போதாது
மார்க்கச் சுடரொளி ஜாமி
மனத்தால் மகிழ்ந்து வாழ்த்துவோம்!

-.முஹம்மது நிஜாமுத்தீன்.










.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, June 19, 2012

விகடனில் நிஜாம் பக்கம்! #103

விகடனில் நிஜாம் பக்கம்!

எனது முதல் கவிதை "ரத்னபாலா" பாலர் வண்ண மாத
மலரில்
வெளிவந்தது. அப்போதிலிருந்தே
நான் பல
பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். இருப்பினும்
'
நிஜாம் பக்கம்' வலைப்பூவை நான் ஆரம்பித்தது
கடந்த
2009-ஆம் ஆண்டில்தான்.

அப்போதிலிருந்து தொடர்ச்சியாய் இல்லாமல், விட்டுவிட்டு எழுதி 100 பதிவுகளைக் கடந்து விட்டேன். சக பதிவர்கள் படித்து, பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாரம் வெளியான 'ஆனந்த விகடன்' இதழுடன் சோழ மண்டலத்திற்கான 'என் விகடன்' இதழில் (2o.06.2012) 'வலையோசை' பகுதியில் எனது "நிஜாம் பக்கம்" பற்றிய அறிமுகம் வெளியாகி உள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.



நண்பர்கள் வலைப்பூவிலும் டிவிட்டரிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தொலைபேசியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் இனிய நன்றிகள்.

அழகாய் வெளியிட்டு அறிமுகம் செய்த ஆனந்த விகடன் குழுவினருக்கும் எனது அன்பான நன்றிகள்!  

-.முஹம்மது நிஜாமுத்தீன்.

குஷ்பு பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

காந்திஜி பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

http://www.vikatan.com/anandavikatan/En-Vikatan---Trichy-Edition/20452-trichy-nizampakkam-blog.html
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, June 8, 2012

தினத்தந்திக்கு ஒரு கடிதம்! #102

தினத்தந்திக்கு ஒரு கடிதம்!

வழமை போலவே இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில்
முதல் இடம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும்
தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கும்
தினத்தந்தி சார்பாக பரிசுகள் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டக்கூடிய செய்தி.

இதன்படி முதலிடம்:
தஞ்சாவூர் ஸ்ரீநாத். (497 மதிப்பெண்கள்)

இரண்டாமிடம் பெற்றுள்ளவர்கள் 6 மாணவர்கள்
(496 மதிப்பெண்கள்):
1.நாகர்கோவில் எஸ்.ஜென்கின்ஸ் காட்பிரே,
2.பாளையங்கோட்டை இ.எம்.நந்தினி,
3.திருநெல்வேலி கே.என்.மகாலட்சுமி,
4.திண்டல் சுவாதி சென்னியப்பன்,
5.கரூர் டி.கவின்,
6.புழுதிவாக்கம் என்.அகிலா.

இதில் விநோதமான ஒரு விதிமுறை கடைப்பிடிக்கப்
படுகிறது. முதல் பரிசு (ரூ. 10,000) பெற்றவர்
மாணவனாக இருப்பின் இரண்டாம் பரிசு
(
ரூ. 5,000) மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதனால், மாணவன்கள் ஜென்கின்ஸ் காட்பிரே
மற்றும் கவின் இருவர் தவிர்த்து, மாணவிகளான
மற்ற நால்வருக்கு மட்டும் பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்துள்ளீர்கள்.

ஒரே அளவு மதிப்பெண்களும் ஒரே ரேங்க்கும்
பெற்றவர்களில் 4 பேர்களுக்கு பரிசு உண்டு;
2 பேர்களுக்கு பரிசு கிடையாது என்பது
என்ன மாதிரியான சட்ட திட்ட விதிமுறை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை!
இதில் மாண'வி' என்பதனால் பரிசு என்றும்
மாண'வன்' என்பதனால் பரிசு கிடையாது
என்பதும் என்ன அளவுகோல்? இதன்
காரணமாக அந்த இரு மாணவர்களும்
'மன சலிப்பி'ற்கு உள்ளாவார்கள் என்பது
நிச்சயம்.

ஓர் உதாரணத்திற்கு இவ்வாறு எடுத்துக் கொள்வோம்.
முதல் ரேங்க் 497 ஒரு மாணவன் எடுக்கின்றான்.
இரண்டாம் ரேங்க் 496 வேறொரு மாணவன்
எடுக்கின்றான். மூன்றாம் ரேங்க் 495 ஒரு
மாணவி எடுக்கின்றாள். இப்போது முதல்
ரேங்க் எடுத்த மாணவனுக்கும் மூன்றாம்
ரேங்க் எடுத்த மாணவிக்கும் பரிசு கொடுத்துவிட்டு
இரண்டாம் ரேங்க் எடுத்தவனுக்கு பரிசில்லை
என்பது வேடிக்கையாக உள்ளது. இது
'ஒரு போட்டியில் கலந்து இரண்டாமிடம் பெற்ற
ஒருவருக்கு பரிசு கிடையாது; முதல் இடம்,
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்குத்தான் பரிசு'
என்பதைப் போல் உள்ளது.

எனவே, இதில் இரண்டாம் இடம் பெற்ற இரு
மாணவன்களுக்கும் பரிசுத் தொகை அளித்திட
ஆவன செய்து, விதிமுறைத் திருத்தம்
கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, May 27, 2012

குண்டப்பா: மண்டப்பா - 7#101

குண்டப்பா: மண்டப்பா - 7

குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.

"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.

"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.

http://i1.kym-cdn.com/entries/icons/original/000/007/263/photo_cat2.jpg

குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.

தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.

"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.

"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!

குண்டப்பா திகைத்துவிட்டார்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படியுங்களேன்:

குண்டப்பா; மண்டப்பா 6

சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, May 19, 2012

சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு!

சுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு!

எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்
அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.

இது எனது 1oo- ஆவது பதிவு.

குங்குமம் 09.08.2007
படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

சிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'
நாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக
காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்
படம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்
சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது
பின் நின்றுவிட்டது.


குங்குமம் 13.09.2007


குங்குமம் 08.11.2007

குங்குமம் 06.12.2007

குங்குமம் 13.12.2007

குங்குமம் 24.01.2008

நன்றி சுஜாதா சார்!


. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Wednesday, March 28, 2012

சில சிந்தனைகள் (பகுதி 12)

சில சிந்தனைகள் (பகுதி 12)

1.உபதேசம் கேட்க 6 மைல் செல்வது பெரிய காரியமல்ல. வீடு திரும்பிய பின் அதைப்பற்றி சிந்திக்க 15 நிமிடம் செலவழிப்பதே பெரிய காரியம் -பிலிப் ஹென்றி

2.
நன்றியை எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இருக்காது.

3.நடத்தை எனும் நிலைக் கண்ணாடியில் ஒவ்வொருவருடைய உருவமும் தெரிகின்றது -ராபர்ட் கதே


4.காற்றும் அலைகளும் திறமையான மாலுமிகளுக்கு அனுகூலம்தான். -கிப்பன்


5.விழிப்புடன் செயல்படும் எந்த சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கி விட முடியாது - லாலா லஜபதிராய்


6.வெற்றி, பல நண்பர்களைக் கொடுக்கும். அவர்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை.


7.நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. அறிஞர் அண்ணா


8.உன் உயர்வை உன்னைவிட உயர்ந்தவர்களோடு ஒப்பிட்டுப் பார் -மகாத்மா காந்தி


9.செல்வநிலை எப்படியிருந்தாலும் திருப்தி மனம் கொண்டால், அது ஆறுதலைத் தருவதோடு பாலைவனத்தில்கூட பசுந்தோட்டத்தை அமைத்து விடும் -ஒயிட்


10.உழைக்காமல் உண்பவனும் திருடன்தான்
.

11.ஒரு நல்ல சிந்தனை, பல நல்ல செயல்களாக மாறும்.

12.திறமைதான் ஏழையின் செல்வம்

13.அதிக ஓய்வு வேதனை தரும்


14.பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கின்றது


15.விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.


16.மனசாட்சி நீதிபதியைப் போன்றது.

17.மற்றவரை மகிழ வைப்பதே நம் மகிழ்ச்சிக்கு வழி.

18.பாவத்திற்கு பயப்படு; நற்பண்புகளை நாடு.

19.உண்மை ஒன்றே அசையாத அஸ்திவாரம் .


20.மனமுருகி அழத் தெரியாதவனுக்கு மனம்விட்டு சிரிக்கவும் தெரியாது. - யாரோ


21.தன்னம்பிக்கையே நிகரில்லாத செல்வம்


22.கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்கலாம்; பாரமாக அல்ல.


23.இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இன்பம் மட்டுமே இருந்தால் சலித்துவிடும். துன்பத்தை நேசியுங்கள். மகிழ்ச்சியடைவீர்கள்.


24.சந்தர்ப்பத்தை உருவாக்குபவனே வெற்றி பெறுகிறான்.


25.அன்பைக் கெடுக்கும் சுயநலம்; அதை விட்டு விலகுதல் வெகுநலம்.



.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, February 16, 2012

(வி)வேகம் தேவை!


(வி)வேகம் தேவை!
=====================


எங்கள் உறவினர் பெண்மணி ஒருவருக்கு
காய்ச்சல். 104 டிகிரியிலிருந்து எந்த மருந்து சாப்பிட்டும்
காய்ச்சல் குறையவேயில்லை . பக்கத்து நகர
மருத்துவமனையில் காட்டி, மாவட்டத்
தலைநக(ர் கடலூ)ரில் உள்ள மருத்துவமனையில்
உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சையை ஒரு வாரம்
தொடர்ந்தும் காய்ச்சல் மட்டும் குறையவேயில்லை.

பற்பல சிகிச்சைகள், மருத்துவங்கள், செலவினங்களுக்குப்
பிறகும் முன்னேற்றமில்லாததால் பெண்மணியின்
சகோதரர் உறுதியாய் ஒரு முடிவெடுத்தார்.

அதன்படி சென்னை போரூரில் உள்ள நவீன
வசதிகளுடைய தனியார் மருத்துவமனையில்
சேர்த்து, அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு
மற்றும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில்
அனுமதித்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
அதனால் காய்ச்சல் படிப்படியாய் குறைந்தது.

தொடர்ந்து திட உணவுகள் கொடுக்கப்பட்டு,
நலம் பெற்று வீடு திரும்பினார் அவர்.
தற்போது மருந்துகள் உட்கொண்டு
வருகின்றார்.

போரூர் மருத்துவமனையில் கண்டறியப்பட்ட
நோய்க் காரணி என்ன? எலி கடித்து அலட்சியமாய்
விட்டதால், ரத்தத்தில் விஷம் கலந்து,
நுரையீரல் வரை சென்று விட்டது என்பதே
காரணம்.

ஆகவே, இலட்சக் கணக்கில் பணம் செலவு
செய்வதைத் தவிர்க்கவும் நோய் தீவிரமாகி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேதனையுறுவதைத்
தடுக்கவும், எலி கடித்ததாய் சந்தேகம்
வந்தால் தாமதிக்காமல் விரைந்து சென்று,
நோய் எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்
கொள்ளுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, February 3, 2012

சில சிந்தனைகள் (பகுதி 11)


சில சிந்தனைகள் (பகுதி 10)
========================

1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்
மனதை வலிமையாக்கும் -செனகா.

2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து
முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே

8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9.
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

10.
கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்

12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்

13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்


17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்

18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, January 24, 2012

சில சிந்தனைகள் (பகுதி 10)

சில சிந்தனைகள் (பகுதி 10)

1.நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.

2.நாம் வாழும் வீடு மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழும் உறவுகளுக்குள் கூட விரிசல் விழக்கூடாது .

3.சேமிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, வளமையை கொண்டுவர முடியாது.

4.செய்யும் செயலை உறுதியுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.

5.நோயைக் கண்டுபிடித்தலே, ஆரோக்கியத்தின் ஆரம்பம்.

6.முக்கிய பிரச்சினையில் முடிவு எடுக்குமபோது உணர்ச்சிவசப்பட்டால் புதிதாய் ஒரு பிரச்சினை உருவாகிவிடும்.

7.வர்த்தகத்தில் கால்பதித்து பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அன்னிய ஆளுமைகள் இந்தியாவிற்கு புதிதல்ல.

8.பயத்தைத் தவிர்த்து துன்பத்தை எதிர்கொள்வது மனதை வலுவாக்கும்.

9. கனவில் காணும் உணவு, பசியை போக்காது. உழைத்தால் மட்டுமே உணவு.

10.கொடுக்கிற சம்பளத்திறகு குறையில்லாமல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பாணம் காஃபிதான்.

11.வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.

12.பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.

13.மௌனம், வியக்கத்தக்க பல அரிய செயல்களை சுலபமாக செய்திடும். பேச்சுக்கலால், சிக்கல் அதிகமாகும்.

14.துயரம் எந்த கடனையும் தீர்த்து வைக்காது. கடன் வரும்முன் சேமிப்போம்.

15.செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனே அறிவாளி!

16.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.

17.எந்தச் சொத்தை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; நம்பிக்கையே பெரிய சொத்து.

18.உழைப்பதே உடலின் பயனாகும் -ஜான்சன்

19.இனபத்தின் ரகசியம் உழைப்பேயாகும் -பரோஸ்

20.உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, January 10, 2012

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
நண்பர் என்னிடம் சொன்னார்: " எப்பொழுதும் என் சட்டைப்
பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில்
வந்திட்டாலும் திரும்ப போய் எடுத்திட்டுத்தான் வருவேன்"

நான் கேட்டேன்: "இப்பவும் பாக்கெட்ல இருக்கா?
காட்ட முடியுமா?"

நண்பர் சொன்னார் : "காட்டுவேன்; ஆனால் கையில
தர மாட்டேன்"

நான் சொன்னேன்: "காட்டுங்க"

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை.
அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.
******************************************************

நண்பர் நிலக் கடலை அடிக்கடி சாப்பிடுவார்.
"காந்திஜிக்கு நிலக்கடலைப் பிடிக்கும்" என்பார்.
ஐந்து ரூபாய்க்கு அல்லது பத்து ரூபாய்க்கு
நிலக்கடலைப் பொட்டலம் சாப்பிட வாங்கினால்
முதலில் பெரிதாக, நல்ல நிலக்கடலை மூன்று,
நான்கினை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்.
காரணம் கேட்டேன்.

நண்பர் சொன்னார் : "சாப்பிட்டு முடிக்கும்போது
கடைசி கடலை துவர்ப்பு உள்ள வீணாப் போன
கடலைதான் வாயில வருது. அதனால சாப்பிட்டு
முடித்ததும் இந்த நல்ல கடலையை, கடைசியாய்
சாப்பிடுவேன்"
***************************************************

காந்தி படம் பார்த்துவிட்டு வந்து சொன்னார்:
"காந்தி படம் எவ்வளவு அருமை தெரியுமா?
ரிச்சர்ட் அட்டன்பரோ சூப்பரா டைரக்ட்
பண்ணிருக்காரு. பெண் கிங்க்ஸ்லி
தத்ரூபமா நடிச்சிருக்காரு." என்று சொன்னார்.
'நான் மகான் அல்ல' படமும் பார்த்தார். (பழசு)
நான் மகான் அல்ல (புதுசு), மகான் கணக்கு
இவைகள் பார்த்தாரா என்று கேட்கவில்லை நான்.
*****************************************************

"நிலக்கடலையும் ஆட்டுப் பாலும் காந்திக்குப்
பிடிக்கும்" என்றார்.

"ஆட்டுப் பால் நீங்க குடிப்பீங்களா?" என்று நான்
கேட்டேன்.

"ஆட்டுப் பால் என்பதை நான் இரண்டாகப்
பிரித்து கொள்வேன்" என்றார்.

"எப்படி?" நான் கேட்டேன்.

"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.
*****************************************************

வித்தியாசமான பழக்கம் நண்பரிடத்தில்.
ஒரு கிலோ நிலக்கடலை, ஒரு கிலோ பட்டாணி,
ஒரு கிலோ உப்புக் கடலை வாங்கி, ஒரு பெரிய
பெட் ஜாரில் ஒன்றாகக் கொட்டி, கலந்து
சாப்பிடுவார். நண்பர்கள் நாங்கள் அவர்
வீட்டிற்கு சென்றால் அந்த டப்பாவை எடுத்து
வந்து விடுவார். நாங்கள் மூன்று கடலையையும்
சேர்த்து சாப்பிடுவோம். சுவையாகவே இருக்கும்.

ஆனால் அவர் மட்டும் நிலக் கடலையை மட்டும்
தேர்ந்து எடுத்து சாப்பிடுவார். நாங்கள் காரணம்
கேட்டோம்.

"காந்திஜிக்குத் தான் முதல் மரியாதை" என்றார்.
***************************************************

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிக்கு வாக்களித்தார். அதை எங்களிடம் சொன்னார்.

நாங்கள் காரணம் கேட்கும்போது, "அது (சோனியா)
காந்தியோட கட்சி" என்று சொல்லுவாரோ என்பதால்
நாங்கள் கேட்கவேயில்லை.
*******************************************************
(பி.கு.: ஜனவரி 30. நாதுராம் கோட்சேவினால்,
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Wednesday, January 4, 2012

நகைச்சுவை; இரசித்தவை 18

நகைச்சுவை; இரசித்தவை 18
========================

வாங்க சிரிக்கலாம்...


1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"

"எங்க வீட்டு டிவி ரிப்பேர், துதான்!"
==========================================

2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?"

"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
==========================================

3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"
=========================================

4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"

"பாய் வியாபாரம்!"
=========================================

5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க பீசை குறைக்கணும்"
===========================================

6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?"

மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
==========================================

7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?"

திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"
==========================================

8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"
==========================================

9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
==============================================

10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"

"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
===============================================

11. "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"
அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"
===============================================

12. தொண்டர் 1: "தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?"

தொண்டர் 2: "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"
==============================================

13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."

"என்ன செய்தே?"

" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்" =============================================

14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"

மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
=============================================

15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"

" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார் சார்"
=============================================

16. "இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?"

"இது விவாக மேடை இல்லை தலைவரே; 'விவாத மேடை' !
=============================================
.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...