புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179
மயிலாடுதுறை க.ராஜசேகரன் அவர்கள் எழுதிய 'தாய்ப்பால் உறவு' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து சிறுகதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமானவை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவை.
இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளுமே வேறு வேறு கதைக்களங்களில் பயணப்பட்டாலும் அடிப்படையாக 'விவசாயம்' என்ற ஒற்றைக் கோட்டில் செல்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஆரம்பம் முதல் அதன் இறுதிவரை அல்லது அதன் தீர்வு வரை செல்லும் வழியில் பயணப்படும் பாதை முழுவதும் காணப்படும் வர்ணனை நடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொய்வின்றி செல்வதால் விறுவிறுப்பை அதிகம் கூட்டுகிறது.
உதாரணமாக 'எல்லாமே இலவசம்' என்கிற கதையில் புத்தம் புதிதாக 'நேர வங்கி' என்ற ஓர் அழகிய கான்செப்ட் கையாளப்பட்டிருக்கிறது. இது பல வெளிநாடுகளில் நடைமுறைகளில் இருந்து வந்தாலும் இந்தியாவுக்கு இது புதிய விஷயம். இதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நிறைய பேர் வரவேற்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தன் வீட்டிலேயே இதற்கு எதிர்ப்பு இருக்கும்பொழுது தனது மனைவி சாவித்திரியையே அதை சுப்ரமணியன் உணர வைப்பதாக கதை முடிவது அழகிய ஒரு நிறைவைத் தருகிறது.
அதேபோல் குட்ட குட்ட குனியும் ஒரு விவசாயி அவன் முட்டு சந்தில் முட்டும் போது எப்படி உயிர் கொண்டு எழுவான், எப்படி தனி மனிதனாவான், எப்படி தனி ஒரு முதலாளியாக மாறுவான்,
தானே தன் பொருளுக்கு விலை வைப்பான் என்பதை 'வெவசாயி' கதை மூலமாக
அழகான ஐடியா உடன் முடிவை தந்த விதம் விதம்
பாராட்டிற்குரியது.
வெயிலில் வியர்வை வழிய கஷ்டப்பட்டு, பாடுபட்டு, பொருள்களை விற்கும் சிறு வியாபாரிகளிடம் அடாவடியாக அடிமாட்டு விலைக்கு பொருள்களை விலை கேட்கும் அடாவடி அமுதா போன்றவர்களுக்கு ஓர் அழகிய அறிவுரையாகவும் எந்த நேரத்திலும் திடீரென்று ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்துகளை எப்படி சாதுரியமாக சமாளிப்பது என்ற கருத்தையும் இணைத்து அழகான கதையாக தந்திருந்தார் கதாசிரியர் தனது 'கத்தி' என்ற கதையின் மூலம்.
இந்த சிறுகதை 'தினமலர் வாரமலர்' இதழில் 2019 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதை என்பது சிறப்பு!
வங்கி ஊழியரின் தரக்குறைவான பேச்சினால் ஒருவர் எப்படி வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்கிறார் என்கிற சம்பவத்தைக் கூறும், மூன்று பக்கக் கதையாக சாவி வார இதழில் வெளிவந்த 'அந்த வார்த்தைகளுக்கு நன்றி' என்கிற கதை இப்பொழுது வந்தால் ஒரு பக்கக் கதையாக பிரசுரம் ஆகிட வாய்ப்புள்ள கதை.
நீங்களும் இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் அல்லவா? ஆகவே இதன் சிறப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நூல் பெயர்: தாய்ப்பால் உறவு
ஆசிரியர்: மயிலாடுதுறை க.ராஜசேகரன்
பதிப்பு:
சந்தியா பதிப்பகம்
தொலைபேசி:
044-2489-6979
பக்கங்கள்: 162
விலை: ரூபாய் 160
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
nidurnizam.mn@gmail.com