...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label காந்திஜி. Show all posts
Showing posts with label காந்திஜி. Show all posts

Sunday, October 3, 2021

முற்பகல் செய்யின் (சிறுகதை) #159

முற்பகல் செய்யின்! (சிறுகதை)
 -அ. முஹம்மது நிஜாமுத்தீன். 

 குமணன், அந்தப் பெட்டிக் கடையின் வாசலில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக அகிலன் நடந்து வருவதை பார்த்ததும், அவசர அவசரமாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு திடீரென்று அந்த வாழைப்பழ தோலை தெருவில் போட்டான். 

 எதிர்பாராத விதமாக தன் முன்னே வந்து விழுந்த வாழைப்பழத்தை பார்த்து சுதாரிப்பதற்குள் அதன் மேல் காலை வைத்துவிட்ட அகிலன் வழுக்கி தடுமாறி கீழே விழுந்தான். 

 அவன் கீழே விழுந்ததை பார்த்த குமணன், நக்கலாக பெருங்குரலெடுத்து சிரிக்கவும் அவன் பக்கத்தில் இருந்த அவனது நண்பர்களும் இணைந்து சிரித்தார்கள். 

 சுதாரித்து எழுந்த அகிலன் அவர்களைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் தன் உடை மேலும் உடல் மேலும் பட்டிருந்த மண்துகள்களை தட்டி விட்டுக் கொண்டு அமைதியாக சென்று விட்டான். 
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மற்றொரு நாள் அகிலன் சைக்கிளில் சந்தைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தனக்கு முன்னே சென்றுகொண்டிருந்த குமணன் கல் தடுக்கி கீழே விழுந்ததை பார்த்தான். 

 ஓடோடி சென்று அவனை தூக்கி அவன் முகத்தில் அடிபட்டு இருந்த காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு பக்கத்து தெருவில் இருந்த கிளினிக் சென்று டாக்டரிடம் காட்டினான். 

 ஊசி போட்டு பின் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டதும் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு புறப்பட்டான். 

 அகிலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு குமணன் அழுது மன்னிப்பு கேட்டான்.

 "அன்னைக்கு நான் வாழைப்பழத் தோலை போட்டு உன்னை தடுமாறி விழ வைத்தேன். அதை மனசுல வச்சுக்காமல் என்னை உடனடியாக அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி, வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு போறியேப்பா! உன் நல்ல மனச புரிஞ்சுக்காம உன்னை காயப்படுத்திட்டேன் நான்! மன்னிச்சுக்கோ அகிலா!" என்றான். 

 "குமணா! அன்னைக்கு நீ இல்லாம வேற யாரும் விழுந்திருந்தாலும் நான் இப்படித்தான் செய்யவேன். நீ விழுந்தாலும் இப்படித்தான் செய்வேன். ஏன்னா நாம வாழப்போவது கொஞ்ச(ம்) காலம்! 

 "உனக்கும் எனக்கும் என்ன பகை? இந்தப் பகை நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க பிள்ளைகளுக்கும் பரம்பரையா தொடரணுமா?

 "குர்ஆன்-ல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம் 'ஒற்றுமை என்னும் கயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்'னு வருது! 

 "நம்ம காந்தியடிகளும் 'அகிம்சை கொள்ளுங்கள்; அன்பு செய்யுங்கள்' என்று தானே சொன்னாரு? 

 "வீடு, மனை இதெல்லாம் என்னப்பா சொத்து? அன்புதானப்பா நமக்கு ஒரு சொத்து! விலை மதிக்க முடியாத சொத்து!" என்று கூறிய அகிலனை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான் குமணன்.

 (சுபம்.)

நேற்று: அக்டோபர் 2.
காந்தி ஜெயந்தி.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, July 23, 2016

மறக்க முடியுமா? #128

மறக்க முடியுமா?

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்,




இறைவனுக்கு நன்றி!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!



நாதுராம் கோட்சே 
கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!


கொல்வது எப்படி?
சொல்லித் தந்தாய்!


மார்பில் குத்துவது எப்படி?
அல்ல, அல்ல,
நெஞ்சில் சுடுவது எப்படி?
சொல்லித்  தந்தாய்! 


கும்பிடுவதுபோல் நம்பவைத்து
கொல்வது எப்படி?
நயவஞ்சகம் என்பது என்ன?
சொல்லித் தந்தாய்!


ஒரு தேசத்தின் ஜீவனாய் 
இருந்தவரை எப்படி கொன்றாய்?
சொல்லித் தந்தாய்!


'பாவம் ஓரிடம்;
பழி ஓரிடம்'
என்பார்கள். 
அதை எளிதாய்
புரிய வைத்தாய்!


அதை, ஆர்.எஸ்.எஸ்.காரனாய் 
நீ கொலை செய்து,
இஸ்லாமியர்மேல் 
பழி போடுவது எப்படி? 
சொல்லித் தந்தாய்!


"மாபாதகன்" என்பதன் 
பொருள் என்ன?
சொல்லித் தந்தாய்!


இவற்றிற்கெல்லாம் ஒரு
சரித்திர சான்று
நீ சுட்டுக் கொன்ற
எங்கள் காந்தித் தாத்தா!
தேசத்தின் பிதா!


கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!
மறக்க முடியுமா?


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Tuesday, January 10, 2012

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
நண்பர் என்னிடம் சொன்னார்: " எப்பொழுதும் என் சட்டைப்
பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில்
வந்திட்டாலும் திரும்ப போய் எடுத்திட்டுத்தான் வருவேன்"

நான் கேட்டேன்: "இப்பவும் பாக்கெட்ல இருக்கா?
காட்ட முடியுமா?"

நண்பர் சொன்னார் : "காட்டுவேன்; ஆனால் கையில
தர மாட்டேன்"

நான் சொன்னேன்: "காட்டுங்க"

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை.
அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.
******************************************************

நண்பர் நிலக் கடலை அடிக்கடி சாப்பிடுவார்.
"காந்திஜிக்கு நிலக்கடலைப் பிடிக்கும்" என்பார்.
ஐந்து ரூபாய்க்கு அல்லது பத்து ரூபாய்க்கு
நிலக்கடலைப் பொட்டலம் சாப்பிட வாங்கினால்
முதலில் பெரிதாக, நல்ல நிலக்கடலை மூன்று,
நான்கினை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்.
காரணம் கேட்டேன்.

நண்பர் சொன்னார் : "சாப்பிட்டு முடிக்கும்போது
கடைசி கடலை துவர்ப்பு உள்ள வீணாப் போன
கடலைதான் வாயில வருது. அதனால சாப்பிட்டு
முடித்ததும் இந்த நல்ல கடலையை, கடைசியாய்
சாப்பிடுவேன்"
***************************************************

காந்தி படம் பார்த்துவிட்டு வந்து சொன்னார்:
"காந்தி படம் எவ்வளவு அருமை தெரியுமா?
ரிச்சர்ட் அட்டன்பரோ சூப்பரா டைரக்ட்
பண்ணிருக்காரு. பெண் கிங்க்ஸ்லி
தத்ரூபமா நடிச்சிருக்காரு." என்று சொன்னார்.
'நான் மகான் அல்ல' படமும் பார்த்தார். (பழசு)
நான் மகான் அல்ல (புதுசு), மகான் கணக்கு
இவைகள் பார்த்தாரா என்று கேட்கவில்லை நான்.
*****************************************************

"நிலக்கடலையும் ஆட்டுப் பாலும் காந்திக்குப்
பிடிக்கும்" என்றார்.

"ஆட்டுப் பால் நீங்க குடிப்பீங்களா?" என்று நான்
கேட்டேன்.

"ஆட்டுப் பால் என்பதை நான் இரண்டாகப்
பிரித்து கொள்வேன்" என்றார்.

"எப்படி?" நான் கேட்டேன்.

"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.
*****************************************************

வித்தியாசமான பழக்கம் நண்பரிடத்தில்.
ஒரு கிலோ நிலக்கடலை, ஒரு கிலோ பட்டாணி,
ஒரு கிலோ உப்புக் கடலை வாங்கி, ஒரு பெரிய
பெட் ஜாரில் ஒன்றாகக் கொட்டி, கலந்து
சாப்பிடுவார். நண்பர்கள் நாங்கள் அவர்
வீட்டிற்கு சென்றால் அந்த டப்பாவை எடுத்து
வந்து விடுவார். நாங்கள் மூன்று கடலையையும்
சேர்த்து சாப்பிடுவோம். சுவையாகவே இருக்கும்.

ஆனால் அவர் மட்டும் நிலக் கடலையை மட்டும்
தேர்ந்து எடுத்து சாப்பிடுவார். நாங்கள் காரணம்
கேட்டோம்.

"காந்திஜிக்குத் தான் முதல் மரியாதை" என்றார்.
***************************************************

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிக்கு வாக்களித்தார். அதை எங்களிடம் சொன்னார்.

நாங்கள் காரணம் கேட்கும்போது, "அது (சோனியா)
காந்தியோட கட்சி" என்று சொல்லுவாரோ என்பதால்
நாங்கள் கேட்கவேயில்லை.
*******************************************************
(பி.கு.: ஜனவரி 30. நாதுராம் கோட்சேவினால்,
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...