ரயில் வரும் நேரமாச்சு!
பயணம் செய்வதற்கு எனக்கு மிகவும் படித்த வாகனம்
எதுவென்றால், அது ரயில்தான். இதை புகைவண்டி,
தொடர்வண்டி என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள்.
நான் 1990-களின் ஆரம்பத்தில் சிதம்பரத்தில் உள்ள
தி புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் சுமார் ஆறு மாத
காலம் பணியாற்றினேன். அது கூரியர் சர்வீஸ்களின்
ஆரம்பக் காலம்.
அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்தும்,
வெளிமாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின்
எந்த ஊரிலிருந்தும் வரும் கடிதம் மற்றும்
டாக்குமெண்ட்கள் போன்றவை சென்னைக்குச்
சென்று, பிறகுதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.
அதாவது, மயிலாடுதுறையிலிருந்து ஒரு சகோதரர்
இரவு சுமார் 8 மணியளவில் ரயிலில் புறப்பட்டு
திருச்சிக்குச் நள்ளிரவு 12 மணியளவில் சென்றடைவார்.
சிலமணி நேரம் காத்திருந்ததும் அதிகாலையில்
சென்னையிலிருந்து வரும் ரயிலில் வந்தவரிடமிருந்து
கூரியர்களைப் பெற்றுக் கொண்டு, அதிகாலை 6 மணி
அளவில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு
சுமார் 10 மணி அல்லது 10.15 மணிக்கு மயிலாடுதுறை
ஜங்ஷனில் இறங்கும்போது சிதம்பரத்திற்கு வந்துள்ள
கடித பார்சலை என்னிடம் கொடுத்து, அவரிடம் உள்ள
நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அவர்
மயிலாடுதுறை கூரியர் அலுவலகத்திற்குச் சென்று
விடுவார்.
இடையிலிருக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற
மற்ற ஊர்களுக்குரிய பார்சல்களை, அந்தந்த ஊர்
ஊழியர்களே திருச்சிக்குச் சென்று வாங்கி வந்து
விடுவார்கள்.
இப்படியாக மயிலாடுதுறை ஜங்ஷனில் கூரியர்
பார்சலைப் பெற்றுக் கொண்ட நான் அதே சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை சுமார் 11.15 அளவில்
சிதம்பரம் சென்று, அலுவலகத்தில் பதிவு (?) போட்டு,
உரியவர்களுக்கு அந்த கூரியர்களைக் கொண்டு
சேர்ப்பேன்.
மீண்டும் அலுவலகத்திலிருந்து பார்சலுடன்
புறப்பட்டு, சுமார் 7 மணிக்கு சிதம்பரத்திலிருந்து
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டு 8 மணிக்கு
மயிலாடுதுறை ஜங்ஷனில் இறங்கும்போது,
அங்கிருந்து புறப்படும் மயிலாடுதுறை அலுவலக
சகோதரரிடம் என்னிடமிருக்கும் பார்சலைக் கொடுத்து
என்னிடமிருக்கும் நோட்டில் கையெழுத்துப்
பெற்றுக் கொள்வேன். அந்தப் பார்சல் இவ்வாறாக,
திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.
சரக்கு வேன் போன்ற வாகன வசதிகள் அதிகம்
பயன்படுத்தப்பட ஆரம்பிக்காத காலக் கட்டம் அது.
அப்போதெல்லாம், பெரிய பார்சல்கள் கூரியரில்
எப்போதாவதுதான் அனுப்பப்பட்ட காலம்.
இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து
மற்ற ஆறு தினங்கள் தினசரி நான் காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும்
ரயில் பயணங்களில்தான் இருப்பேன்.
அந்த நேரங்களில் வார இதழ்கள் வாசிப்பது,
வாசகர் கடிதம் எழுதுவது, பேனா நண்பர்களுக்குக்
கடிதம் எழுதுவது, ரயிலின் ஜன்னல் ஊடே பசுமையான
வயல், மரம், செடிகள் கண்டு களிப்புறுவது,
சக பயணிகளோடு உரையாடுவது, பயணிகளின்
சிறு குழந்தைகளோடு உரையாடி மகிழ்வது,
ரயில் வியாபாரிகளிடம் மாங்காய்,
வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி வாங்கிச்
சாப்பிடுவது, சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது,
அந்த வியாபாரிகள் ஒரு பெட்டியிலிருந்து
மற்றொரு பெட்டிக்கு கையில் கூடையோடு
தாவி செல்லும் ஆபத்தான செயலை
அனாயாசமாகச் செய்வதை ஆச்சரியமாகப்
பார்ப்பது, இருபுற கம்பங்களில்
எண்களை பார்த்துக் கொண்டே வருவது,
முதல் நாள் ஒரு பெரிய ஆல மரத்தைக்
குறிப்பு வைத்துக் கொண்டு மறுநாள் அந்த இடம்
வரும்போது சரியாகக் கண்டு கொள்வது,
புத்தகத்தில் ஜோக் படித்துவிட்டு எதிராளிகள்
பயந்து விடக்கூடாதென்று படார் என்று சிரிக்காமல்
மொக்கையாய் சிரிப்பது என்றெல்லாம்
அந்த ரயில் பயணங்கள் தந்த மகிழ்வினை
என்றென்றும் மறக்க முடியாது.
மற்றும் அந்தப் பணியில்தான் கூரியரின் உரிமையாளர்
அன்பு அண்ணன் மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி
நீடூரி அவர்களிடமிருந்து பல அறிவுச் செறிவான பொது
அறிவு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதனை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.
சமீப காலமாக (அதாவது கடந்த நான்காண்டுகளுக்கு
மேலாக) மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய
ஊர்களுக்கிடையே மீட்டர் கேஜ் இருப்புப் பாதையை
அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாத காலத்தில்
அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதையில் பலமுறைகள்
சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களில் செய்யப்பட்டன.
இருப்பினும் டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்ஃபார்ம்,
பயணியர் தங்குமிடம், நீர் வசதி, கழிவறைகள் போன்ற
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தபின்னும்,
"ஓடும்... ஓடும்..." என்று பலமுறை சொல்லியும்
சொல்லப்பட்ட மாதங்கள்தான் ஓடினவேயன்றி
ரயில் போக்குவரத்து ஆரம்பித்தபாடில்லை.
சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், தினசரி
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும்
நோயாளிகளுக்கு ஏற்றது ரயில் பயணமே!
தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அரசு பேருந்தில் செல்லலாமே... அரசு
பேருந்துகளின் தரம் சொல்லவோ, எழுதவோ,
கேட்கவோ, படிக்கவோ தேவையில்லை.
கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வுப்பணி மேற்கொண்ட
தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன்
அவர்கள் "வருகிற ஏப்ரல் 15 அன்று ரயில் சேவை
தொடங்கப்படும்" என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம்
தெரிவித்துள்ளார். நம்பலாமா?
சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்?
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.