தினத்தந்திக்கு ஒரு கடிதம்!வழமை போலவே இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில்
முதல் இடம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும்
தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கும்
தினத்தந்தி சார்பாக பரிசுகள் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டக்கூடிய செய்தி.
இதன்படி முதலிடம்:
தஞ்சாவூர் ஸ்ரீநாத். (497 மதிப்பெண்கள்)
இரண்டாமிடம் பெற்றுள்ளவர்கள் 6 மாணவர்கள்
(496 மதிப்பெண்கள்):
1.நாகர்கோவில் எஸ்.ஜென்கின்ஸ் காட்பிரே,
2.பாளையங்கோட்டை இ.எம்.நந்தினி,
3.திருநெல்வேலி கே.என்.மகாலட்சுமி,
4.திண்டல் சுவாதி சென்னியப்பன்,
5.கரூர் டி.கவின்,
6.புழுதிவாக்கம் என்.அகிலா.
இதில் விநோதமான ஒரு விதிமுறை கடைப்பிடிக்கப்
படுகிறது. முதல் பரிசு (ரூ. 10,000) பெற்றவர்
மாணவனாக இருப்பின் இரண்டாம் பரிசு
(ரூ. 5,000) மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.
அதனால், மாணவன்கள் ஜென்கின்ஸ் காட்பிரே
மற்றும் கவின் இருவர் தவிர்த்து, மாணவிகளான
மற்ற நால்வருக்கு மட்டும் பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்துள்ளீர்கள்.
ஒரே அளவு மதிப்பெண்களும் ஒரே ரேங்க்கும்
பெற்றவர்களில் 4 பேர்களுக்கு பரிசு உண்டு;
2 பேர்களுக்கு பரிசு கிடையாது என்பது
என்ன மாதிரியான சட்ட திட்ட விதிமுறை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை!
இதில் மாண'வி' என்பதனால் பரிசு என்றும்
மாண'வன்' என்பதனால் பரிசு கிடையாது
என்பதும் என்ன அளவுகோல்? இதன்
காரணமாக அந்த இரு மாணவர்களும்
'மன சலிப்பி'ற்கு உள்ளாவார்கள் என்பது
நிச்சயம்.
ஓர் உதாரணத்திற்கு இவ்வாறு எடுத்துக் கொள்வோம்.
முதல் ரேங்க் 497 ஒரு மாணவன் எடுக்கின்றான்.
இரண்டாம் ரேங்க் 496 வேறொரு மாணவன்
எடுக்கின்றான். மூன்றாம் ரேங்க் 495 ஒரு
மாணவி எடுக்கின்றாள். இப்போது முதல்
ரேங்க் எடுத்த மாணவனுக்கும் மூன்றாம்
ரேங்க் எடுத்த மாணவிக்கும் பரிசு கொடுத்துவிட்டு
இரண்டாம் ரேங்க் எடுத்தவனுக்கு பரிசில்லை
என்பது வேடிக்கையாக உள்ளது. இது
'ஒரு போட்டியில் கலந்து இரண்டாமிடம் பெற்ற
ஒருவருக்கு பரிசு கிடையாது; முதல் இடம்,
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்குத்தான் பரிசு'
என்பதைப் போல் உள்ளது.
எனவே, இதில் இரண்டாம் இடம் பெற்ற இரு
மாணவன்களுக்கும் பரிசுத் தொகை அளித்திட
ஆவன செய்து, விதிமுறைத் திருத்தம்
கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.