...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label தமிழ் நெஞ்சம் - ஃப்ரான்ஸ். Show all posts
Showing posts with label தமிழ் நெஞ்சம் - ஃப்ரான்ஸ். Show all posts

Saturday, February 5, 2022

உறவுகள் தொடரும் -சிறுகதை #163



ஃபிரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்' பிப்ரவரி 2022 மின்னிதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*
உறவுகள் தொடரும்! (சிறுகதை) 
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

உறவுகள் தொடரும்!
(சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.

'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை. 

அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது? கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.

மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.

பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.

"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல? 
தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று
உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்!
*

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, December 31, 2021

அவரவர்க்கு உரியது - சிறுகதை #160


ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ் நெஞ்சம்' ஜனவரி 2022 இதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*

அவரவர்க்கு உரியது  (சிறுகதை)
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
------------ --------

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சிராஜுத்தீன் வெளியில் வந்தபோது நேரம் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகக் கட்டடத்தின் வாயிலருகிலேயே இருந்த ப‌ஸ் ஸ்டாண்டுக்கு வ‌ந்து பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
ப‌ஸ் வரக்காணோம்.

அப்பொழுது தரையில் கிடந்த கலர் பேப்பரை எடுத்துப்பார்த்தான். அட! ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருந்த 500 ரூபாய் தாள்!

சிராஜுத்தீனுடைய டூ வீலர் பழுதாகி, உதிரி பாகங்கள் மாற்ற 450 ரூபாய் ஆகும் என்று பழுது நீக்குநர் சொன்னதால் அவன் இன்று பஸ்ஸில் அலுவலகத்திற்கு வந்திருந்தான். 

கைவசம் இருப்பதோ 500 ரூபாய் மட்டிலுமே. இன்னும் இந்த மாதத்தின் ஐந்து நாட்களை ஓட்டவேண்டும். இந்த நிலையில்தான் அந்த பஸ் ஸ்டாண்டில் 500 ரூபாய் கிடக்கிறது.

சிராஜுத்தீன் சுற்றும் முற்றும் பார்த்தான். இது யாருடைய பணம்? இதை எப்படி உரியவரிடம் சேர்ப்பது? காவல் நிலையத்தில் கொடுத்தாலும் அது எங்கு போய் சேரும் என்பதை யோசித்தான்.

'சரி, இந்த பணத்தை பள்ளிவாசலின் உண்டியலில் சேர்த்துவிடுவோம்' என்ற முடிவுடன், வந்த பஸ்ஸில் ஏறினான்.

கடைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து வயது மகள் ஜன்னத்திற்கு மிகவும் பிடித்த மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

"அத்தா" என்று மகிழ்வோடு ஓடிவந்தவளை தூக்கி கன்னத்தில்
முத்தமிட்டு, கீழே இறக்கியபோது, "அத்தா, அத்தா, ஒரு காரு
வேகமா என்மேலே மோதவந்துச்சித்தா..." என்றாள் ஜன்னத்.

"பஸ்ஸிலே வந்து ரொம்ப களைப்பா இருக்கீங்க, இந்த டீயைக்
குடிங்க" என்று சொல்லி டீயைக் கொடுத்த அவன் மனைவி ஆபிதா,
"நம்ம ஜன்னத் சாயங்காலம் தெருவிலே விளையாடிக்கிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தன், என்னத்தைக் குடிச்சிருந்தான்போல... தாறுமாறாக் காரை வளைச்சி, வளைச்சி ஓட்டிட்டு வந்திருக்கான். அப்போ எதிர்வீட்டுக்கு வந்து வெயிட்டிங்ல இருந்த ஆட்டோ
டிரைவர் அபுல்ஹஸன் பாய்ஞ்சி புள்ளையைத் தூக்கிக்கிட்டு
உருண்டு சின்ன காயம்கூட படாம புள்ளயக் காப்பாத்திட்டான். ஆனால் அவனுக்குத்தான் கை, காலெல்லாம் அடி. அப்படியும் அவன் உடனே சவாரிக்குப் போயிட்டான்" என்று விளக்கமாகச்
சொல்லி முடித்தாள்.

ஆட்டோ டிரைவர் அபுல்ஹஸன் நாணயமானவன். சரியான
கட்டணம்தான் வாங்குவான். இருப்பினும் கஷ்டப்படும்
குடும்பம்தான்.

"அல்ஹம்துலில்லாஹ்!" (அல்லாஹ்வுக்கு நன்றி!) என்று கூறி எழுந்தவன், "இதோ அஞ்சி நிமிஷத்துலே வந்திடுறேன்,
ஆபிதா" என்றவண்ணம் செருப்பினுள் காலை நுழைத்தான்.

அந்த ஐனூறு ரூபாயை எங்கே, யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை அவன் முடிவு செய்துவிட்டான். 'சம்பளம் வந்ததும் பள்ளிவாசல் பைத்துல்மால் உண்டியலில் முன்பு நினைத்த
ஐனூறு ரூபாயைப் போடணும்' என்று
நிய்யத் (நேர்ச்சை) செய்துகொண்டான்.
*

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...