...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, July 23, 2016

செட்டி சாலி கடை! #129

செட்டி சாலி கடை!


செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.

கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.

கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.

"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.

"எப்படி?" என்று நான் கேட்டேன்.

"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.

"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.  படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, December 31, 2015

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு #126

2015 நிறைவுப் பதிவு!

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126


எனக்குத் தெரிந்த ஒரு  நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை. 


இந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை. 
இந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே "அடுத்த மாதம் தருகிறேன்" பதிலைத்தான் சொன்னார்.


இந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, "இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை" என்று கத்திவிட்டார். 


வாடிக்கையாளரோ, "அண்ணே, சுடுங்க! நல்லா சுடுங்க!! ஆனால், நெஞ்சில சுடுங்க! அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும்! ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது! அதனால, நெஞ்சில சுடுங்க!" என்று கூலாக பதில் சொன்னாராம். 
இந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார். 


மீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்!)
குறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை!
'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.  

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 1, 2014

அம்மா சொன்ன கதை! #122

புத்தாண்டுப் பதிவு!

ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சோற்றில் கருப்பு நிற அரிசி ஒன்று இருந்தது. அதைக் கையில் எடுத்து சாப்பிடுமுன் சில சிந்தனைகள் தோன்றின.


இக்காலங்களில் நவீன அரிசி ஆலைகளில் இருந்து சாக்கு மற்றும் துணி பைகளில் விற்பனைக்கு வெளிவரும் அரிசி மூட்டையில் மேல் பாகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மட்டும்தான் இருக்கும். முன்பெல்லாம் அரிசியுடனே ஒரு சில நெல்மணிகள், சிறிய கற்கள், சிறு துண்டு களிமண் கட்டிகள், முழுமைபெறாத அரிசி பதர்கள், சில பல வைக்கோல் சக்கைகள் இவற்றோடு கருப்பு நிற அரிசிகளும் இரண்டற கலந்து கட்டி வரும். இந்த கருநிற அரிசி பதர் அல்ல; அரிசியேதான்.

சிறு வயதில் ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதேபோல்தான் சாப்பாட்டில் இருந்த ஒரு கருப்பு சோற்றினை
வெளியில் எடுத்துப் போட எத்தனிக்கும்போது, எங்கள் அம்மா சொன்னார்கள்:

"இந்த கருப்பு சோறு சாப்பிடு; தூக்கி வெளியில் போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் கருப்பு சோறுக்கு ஒரு கதை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு கதையையும் சொன்னார்கள்.


ஒரு நாள் ஒரு கருப்பு அரிசி (சோறு) கடவுளிடம் கேட்டதாம், "கடவுளே, மற்ற அரிசியெல்லாம் வெள்ளையாக இருக்கின்றன. என்னைமட்டும் கன்னங்கரேல் என்று கருப்பாகப் படைத்துவிட்டாயே?" என்று.

"கருப்பரசியே! நீ கருப்பாய் இருப்பதற்காக கவலைப்பட்டு, மனம் ஏங்கவேண்டாம். நீ கருப்பாக இருந்தாலும் உன்னை சமைத்துப் பரிமாறும் தட்டில் கருப்பு சோறாக இருக்கும்போது, உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைத்தான் முதலில் எடுத்துச் சாப்பிடுவார்கள். அதனால் உனக்கு வருத்தத்திற்கு பதில் மகிழ்ச்சிதான் ஏற்படும். சந்தோஷமாகப் போ!" என்று பதில் தந்து அந்த கருப்பு அரிசியை வாழ்த்தி அனுப்பினாராம் கடவுள். அன்றிலிருந்து, சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும்.

இவ்வாறாக எங்கள் அம்மா சொன்னதும் நான் உடனே அந்த கருப்பு அரிசியைக் கீழே போடாமல் உடனே சாப்பிட்டு விட்டேன்.

இதுதான் அம்மா சொன்ன கதை; எங்கள் அம்மா சொன்ன கதை.



அன்பன்,

அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, March 17, 2013

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117



ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப எங்கே இருக்கிறது?

**********************************************************************

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார்: "அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்? "

நான், "அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

"அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!


*********************************************************************

ஒரே கால கட்டத்தில் 2, 3 பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது (10.40PMயிலல்ல; இக்காலத்தில்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

********************************************************************

"எங்கும் எதிலும் கலப்படம் - அதை

எடுத்துச் சொன்னால்தான் புலப்படும்"


********************************************************************

" தயிர் எடுங்க மோர, பால உண்ணுங்க...  - மேனி

தங்கமா வளரும் இத செய்து பாருங்க...! "

********************************************************************

நெஸ்கஃபேயின் "சன் ரைஸ்", தி.மு.க.வின் மற்றுமொரு தயாரிப்பா? #நான் ரொம்ப வெகுளி
**********************************************************************
ஆதி இறையின் தூதர் நபி நாயகம் - அருள்

நீதி நிறைந்த மக்கா அவரின் தாயகம்.

-'பொதிகை'யில் இஸ்லாமியப் பாடல்கள் 

********************************************************************

ஊருக்கு ஊர் "ஆரிய"பவன் இருக்கு. ஒரே ஒரு "திராவிட"பவன் கூட இல்லையே? #திராவிட கட்சிகளே, உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி! #கிளப்பிவுடுடோய்...
*******************************************************************

"ரயில் கட்டண உயர்வு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது" -ஜெயலலிதா. #பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் எல்லாத்தையும் உயர்த்தி நான்தான் வெந்த புண்ணை ஏற்படுத்திட்டேனே, அதிலே மேலும் வேல் பாய்ச்சலாமா? -ஜெ. மனதில் நினைத்தல்.
*********************************************************************

"இந்(த புத்)தாண்டிலிருந்து சிகரெட் பிடிப்பதையும் பொய் சொல்றதையும் நீ விட்டிறணும்" என்றேன் நண்பனிடம்.

"சிகரெட் பிடிக்கிறதை இந்த ஆண்டே விட்டிர்றேன். பொய் சொல்றதை அடுத்த ஆண்டு விட்டிர்றேன்" என்கிறான் நண்பன்!
#தெளிவாத்தான் இருக்கான்.

**********************************************************************

எங்கள் அக்காளின் 2 வயது பேரன் தனது சின்ன அண்ணனை 'அண்ணன்' என்கிறான். பெரிய அண்ணனை 'அண்ணண்ணன்' (அண்ணனின் அண்ணன்) என்று கூப்பிடுகிறான்.
********************************************************************** 
இன்றைய (அ)லட்சியம் - நாளைய ஏ(மா)ற்றம்
**********************************************************************
இன்றைய (அ)லட்சியம் - நாளைய (ஏ)மாற்றம்

**********************************************************************
வீட்டிலிருந்து வெளியேறும் பெரியவர் முதுகில் 2012. வீட்டில் நுழையும் சிறுவன் முதுகில் 2013. 'இன்று புத்தாண்டு பிறந்தது'. தந்தி கார்ட்டூன்
**********************************************************************
கம்னாட்டி சில்கஸ், நொன்னை சில்க்ஸ் அப்டின்னு பஸ்ஸு சைடு கண்ணாடி முழுசும் விளம்பர போஸ்டர ஒட்டிர்றானுங்க.
பஸ்ல ஸடாண்டிங்ல வரும்போது நாம இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் பார்க்க முடியாம தடுமாற வேண்டியிருக்கு.
எவன் கொ(கெ)டுத்த ஐடியாடா இது?

***********************************************************************

கொஞ்சூண்டு ஜலதோஷம் எனக்கு. #இன்று 'சளி'க்கிழமை!
***********************************************************************

இந்துக்கள் கொண்டாடும் துளசியும் இஸ்லாம் வலியுறுத்தும் கருஞ்சீரகமும் புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை -Prof.பரத் அகர்வால்.
***********************************************************************


இந்தியர்கள்மட்டும் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்படாததற்கு உணவில் இந்தியர்கள் சேர்க்கும் மஞ்சளின் மகிமையே காரணம் -Dr. கு.சிவராமன்.

***********************************************************************
திரு.நாராயணசாமி-யாருக்கு ஒரு கேள்வி: 'ஒரு 15 நாள்' என்பது குத்துமதிப்பாக எத்தனை நாட்கள்னு சொல்லமுடியுமா?

***********************************************************************
அம்மாவுக்கு ஒரு கேள்வி: மலிவு விலை உணவகங்களுக்கு என்ன பெயர் வைக்கிறீங்க? 'மிஸ் அம்மா மெஸ்'?

***********************************************************************

கலைஞரய்யாவுக்கு ஒரு கேள்வி: '2ஆம் செம்மொழி மாநாடு' இனி எப்ப(டி) நடத்துவீங்க?
**********************************************************************

மாதம்தோறும் டீசல் விலை 50பை. உயரும் -பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி # இனி வீ.மொய்லியை FB, ட்வீட்டரில் மாதம்தோறும் கலாய்க்கலாம்
**********************************************************************

 கயவன், கொலைஞன் கோட்சேவால், காந்திஜி கொல்லப்பட்ட கரு(ப்பு)நாள் 30.01.1948
**********************************************************************

ஏமாத்துறவன் 10% நல்லவனா நடிச்சா, நீங்க மேலும் 90% நல்லவனா அவனை நம்புறீங்க #ஏமாறாதீங்க #நீயா, நானா.?
**********************************************************************
சரித்திரம் படைக்கும் மனிதனுக்கு அ(ந்த சரித்திரத்)தை எழுத நேரமி(ருப்பதி)ல்லை. #ப(பி)டித்தது

***********************************************************************
சின்ன ஊர்லருந்து பெரிய ஊருக்குப் போற சாலை, பெரிய ஊர்லருந்து சின்ன ஊருக்கும் வரும்ல? -விளம்பரத்தில் பிடித்த வாசகம்
***********************************************************************
1.12.2012 சனி. "ஸ்கூல் போகலயா"ன்னேன் அக்கா பேரனிடம். "செகண்ட் சார்ட்டர்டே, ஸ்கூல் லீவு"ன்றான் கூலாக. 1ந் தேதியே 2ஆவது சனி! புதுசாயிருக்கே!
***********************************************************************
நான்: "என்ன படிச்சே?"
அவன்: "+2 படிச்சேன்."
"முடிச்சியா?"
"முடிச்சேன்."
"மேலே படிக்கலையா?"
"படிக்கலை."
"ஏன்?"
"பிடிக்கலை."

***********************************************************************

'ரோஸ் மில்க்' என்பதற்கு "ரோஜா பால்" என்றுதான் நான் சொல்றது வழக்கம்.
***********************************************************************

எங்கள் தாத்தா, "அன்புக்கு'க்கு'றிய" என்று கடிதத்தை ஆரம்பிப்பார். கேட்டால் சொல்வார்: 'மிகுந்த அன்புக்குரிய' என்று அர்த்தமாம்.

***********************************************************************
சென்ற ஆண்டு ரயில் தண்டவாளத்தை கடந்தபோது 2637 பேர் சாவு -செய்தி # தண்டவாளத்துல க(ந)டக்காதீங்கப்பா

***********************************************************************

பழைய உலகம் அழிந்தது. "புதியதோர் உலகம் செய்வோம்!" இன்று வெற்றிகரமான 2ஆம் நாள். (22/12/2012)

***********************************************************************

ஒருவன்: "என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தி."
மற்றவன்: "அதனாலதான் நான் ஜாதகத்தையே நம்பறதில்லை."

***********************************************************************

 காற்று வாங்கப் போனேன்; காற்று வாங்கி வந்தேன் #கவிதைன்னு நினைக்கிறேன்.

***********************************************************************
கையில் டிக்கெட் கட்டுகளோடு "டிக்கெட், டிக்கெட்" என்று கூவிக் கொண்டே வருகிறார் கண்டக்டர்.
ஒரு குட்டிப் பாப்பா அம்மாவிடம் சொல்லுது: "இங்கே பாரும்மா அவர. கையில இவ்வளவு டிக்கெட் வச்சிக்கிட்டு நம்மகிட்ட  டிக்கெட் கேட்குறாரு"

***********************************************************************

"வெஜிடேரியன் சாப்பிடுவேன் நான். நீங்க வெஜிடேரியனா, நான் -வெஜிடேரியனா" கேட்டார் நண்பர். "நான் ரெண்டுமே சாப்பிடுவேன்" என்றேன் #உண்மை
***********************************************************************

எனது முகநூல் சுவரிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்துளித்தேன். நன்றி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். ***************************************
.படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, March 10, 2013

விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]


விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]

பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை!

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு அரசு
விரைவுப்  பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். நடுவில் 
பாதையை ஒட்டிய இருக்கையில் இடதுபுறமாக நான் 
அமர்ந்திருந்தேன். அதே பாதையை ஒட்டிய வலதுபுறமாக
ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

அவருக்கு மேலே சாமான்கள் வைக்கும் லக்கேஜ் கேரியரில்
சற்றே பெரியதொரு பேக் இருந்தது. நான் பார்க்கும்போது
அந்த பேக்கின் பாதிக்கும் அதிகமாக அந்த கேரியரிலிருந்து
வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

நான் உடனே அந்த பெரியவரிடம், "சார் அந்த பேக்
விழுந்திடுறமாதிரி இருக்கு சார்" என்றேன். 


அதற்கு அவர், "அந்த பேக் என்னுடையதில்லை" என்று
விரைப்பாகச் சொன்னார்.

"பேக் உங்களுடைதில்லைன்னே வச்சுக்குவோம்;
தலை உங்களுதுதானே? விழுந்தா உங்க தலையிலதான்
விழும். டேமேஜ் அந்த பேக்குக்கு இல்ல; உங்களுக்குத்தான்
பார்த்துக்குங்க" என்று நான் சொன்னேன்.

கடுப்போடு அவர் அண்ணாந்து பார்க்கும்போது சரியாக
அந்த பேக் அவர் மேல் விழுந்தது.
அவர் பார்த்துக் கொண்டே இருந்ததால், தலையில்
விழாமல் கையால் பிடித்துக் கொண்டார்.
பிறகு சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்:
"தேங்க்ஸ் சார்" என்று.

எனக்கு ஓர் உதவி புரிந்த நிம்மதி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். 

(நன்றி : பாக்யா)

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 6, 2013

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

முன் குறிப்பு: கல்கி இதழில் 'ட்டீ.வி., வீடியோ பக்கங்கள்' என்ற போட்டியில் எனது கட்டுரை வெளியானது. அந்த கல்கி 09.07.1989 இதழ் உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நானும் எங்கள் சித்தப்பாவும் பாட்டியும் ஆக 3 பேர்கள், திருவண்ணாமலையிலிருந்து, மயிலாடுதுறைக்கு 'பட்டுக்கோட்டை அழகிரி'
பேருந்தில் வந்தோம். பேருந்து பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 15. மூவருக்கும் டிக்கெட் வாங்கியபோது எங்களிடமிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கொண்ட மூட்டைக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறினார் கண்டக்டர்.  

நாங்கள் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது, எங்கள் மூவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு லக்கேஜுக்கான டிக்கெட் கொடுக்காமல் சென்றுவிட்டார். மீதம் அப்புறம் தருவதாகக் கூறினார். 

பிறகு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தபோதும் கேட்டதற்கு, டிக்கெட் தர்றேன் என்று கூறி சென்று விட்டார். 

கடைசியாக, மயிலாடுதுறைக்கு வந்து இறங்கும்போது, மீதி பணம் 40 ரூபாயைத் தந்துவிட்டு, விரைவாக டைம்கீப்பர் அலுவலகம் நோக்கி சென்று விட்டார்; டிக்கெட் தரவேயில்லை. 

அப்போது கல்கியில் வெளியாகி வந்து கொண்டிருந்த  'வாசகர் குமுறல்' பகுதிக்கு இதை எழுதி அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் பெரிய எழுத்துக்களில், 'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?' என்ற தலைப்புடன் பத்திரிகையில் வெளிவந்தது. 

அதைப் பார்த்ததும் மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது.  இரு தினங்களில், கல்கி இலவசப் பிரதி, தபாலில் வந்தது. 

சுமார் 3 வாரங்கள் சென்றபின், எனது கடிதத்தைப் பிரசுரித்தமைக்கான சன்மானமும் எம்.ஓ. மூலம் வந்தடைந்தது. ஆக, கண்டக்டரிடம் விட்ட பணம் ரூபாய் 15-ஐப் பற்றி மனதினுள் இருந்து வந்த மனக் குமுறல் கல்கியின் வழியாக, அழிந்து மனம் அமைதியானது.

நன்றி கல்கி!

இதோ அந்தக் கடிதம்:

படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...

பழக்க தோஷத்தில் டைப்பி விட்டேன். அடுத்த ஜிகினா கூடிய விரைவில் வரும்.

இறைவன் நாடினால்... அடுத்தது... 'குண்டப்பா; மண்டப்பா!'

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, January 28, 2013

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

முதலில் விகடனில் வந்த என் கேள்வியையும் ஹாய் மதனின் பதிலையும் பார்த்து விடுவோம்:

 கேள்வி: 101 மாடி, 105 மாடி என்று கட்டடங்களின் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அந்தக் கட்டடத்தின் பாதுகாப்புத் தன்மை குறையும் அல்லவா?

 படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

பதில்: கட்டடக் கலை அட்டகாசமாக முன்னேறிவிட்டது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அலுவலகக் கட்டடத்தின் உயரம் 1500 அடிகள். மிக மிக உயரமான கட்டடம்  (காற்றின் அழுத்ததைச் சமாளிக்க) இலேசாக அசையும்படியாகக்கூட இப்போது கட்டுகிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் பின்லேடன்கள் இருக்கும்வரையில் ஆபத்துதான்.

அடுத்து...
விகடனின் பெரிய மாற்றம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், என் கேள்வி வெளியான 23.07.2008 இதழில் இருந்துதான் ஆனந்த விகடன் ரூபாய் 17 விலையில் பெரிய அளவு இதழாக மாற்றப்பட்டது. ஹி... ஹி...

அடுத்த ஜிகினாவில்...
"பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

இதையும் படிக்கலாம்:

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 23, 2013

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு கேள்வி எழுதி அனுப்பியிருந்தேன். இரு வாரங்களில் அந்தக் கேள்வி குமுதத்தில் பிரசுரம் ஆனது. இதுதான் அந்தக் கேள்வி:

 தான் சொல்ல வந்த செய்தியை, விஷயத்தை, தகவலை, 
நேரடியாக, சுற்றி வளைக்காமல், தேவையற்ற 
வார்த்தைகளைச் சேர்க்காமல் சொல்வதை, கூறுவதை, 
உரைப்பதை விட்டுவிட்டு, ஒரே பொருளை, ஒரே 
அர்த்தத்தைத் தரும் பல்வேறு சொற்களை, மிகவும் 
கஷ்டத்துடன் சேகரித்து, கடினப்படுத்திக் கோர்த்து 
வார்த்தைப் பின்னல் போடும், வாய்ச் சவடால் இடும் 
ஒரு சிலரைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்ன எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் தந்தார் அரசு தெரியுமா? பதில் இதோ:

தெ. நி. வை. சு. வே.

இந்தப் பதிலைப் படித்து மண்டை காய்ந்து போனேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படியுங்கள்.





அடுத்த ஜிகினாவில்...
'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

இதையும் படிக்கலாம்:

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 20, 2013

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

தினமணி வெளீயீடாக,  "கதைக்கதிர்" என்கிற புதின (Novel) மாத இதழ் வெளிவந்தது. அவ்வப்போது படித்து நானும் சில விமர்சனங்கள், கேள்விகள் எழுதி அனுப்பி பிரசுரமும் ஆகின.  

ஒரு தடவை ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய "இவர்கள்" என்கிற நவீனம் படித்துவிட்டு, விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த மாத கதைக்கதிரில், அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய விமர்சனம் முதல் பரிசு பெற்றதென்றும் பரசலூர் ஆர்.நாகராஜன் எழுதிய விமர்சனம் இரண்டாம் பரிசு பெற்றதேன்றும் நான் எழுதியிருந்த விமர்சனம் மூன்றாம் பரிசு பெற்றதென்றும் குறிப்புடன் எனது விமர்சனம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.  

அந்த விமர்சனம்  இதோ: [படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்]






இதழ் வெளிவந்து சுமார் 20 தினங்கள் சென்றபின் எம்.ஓ. மூலமாக பரிசுத்தொகை எனக்கு வந்து சேர்ந்தது. 

அந்த மாத ஆரம்பத்திலேயே அந்த மாதம்  வெளிவந்த கதைக்கு நான் விமர்சனம் அனுப்பியிருந்தேன். பரிசுப் பணம் வந்ததும் நன்றி தெரிவித்து கதைக்கதிர் முகவரிக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன்.  

அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து கதைக்கதிர் வெளிவருகிறதா என ஆவலுடன் எதிர்பார்த்தேன். 

ஆனால்      பரிதாபம்...    அதன்  பிறகு  அந்தக்    கதைக்கதிர்   மாத   இதழ்  வெளிவரவேயில்லை.


கதைக்கதிரில் வெளிவந்த மணிவண்ணன் பதில்கள் பகுதியிலிருந்து என் கேள்விகள்:

கேள்வி 1:


கேள்வி 2:


கேள்வி 3:


ஒரு விமர்சனக் கடிதம்:


மணிவண்ணன் என்கிற பெயரில் பதில்கள் தந்தவர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்!

அடுத்த ஜிகினாவில்...

"சங்கேத பாஷையில் "குமுதம் அரசு பதில்கள்!"

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...