...பல்சுவை பக்கம்!

.

Saturday, August 29, 2020

மிஸ்டர் தாம்பு (சிறுகதை) #149



செப்டம்பர் 2020 மாதத்தின் 'தேன் சிட்டு' மின்னிதழில் வெளியான நான் எழுதிய சிறுகதை!
* * *

ஓடி ஓடி வேலை செய்யோணும்!

(நகைச்சுவை சிறுகதை)

-நீடூர்
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

சிற்றுந்து வந்து நின்றதும்
தாம்பு ஏறி காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

ஓட்டுனர் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! கையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார். கண்டக்டர் வந்ததும் டிக்கெட் வாங்கினான்.

ஸ்பீக்கரில் எம்.எஸ்.வி. 'பயணம் பயணம் பயணம்' என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார். 'அட இப்ப மினி பஸ்ல
இந்தப் பாட்டெல்லாம் போடுறாங்களா?' என நினைத்துக் கொண்டே
இருக்கைக்கு மேலே பார்த்தான், 'பூவையர்' என்று எழுதியிருந்தது!
' பூவை ஏன் வையணும்?' என்று சந்தேகம் வந்தது. 'அடடா, இது பெண்கள் உட்கார்ர சீட்டுடோய்' என்பது மூளையில் உறைக்க, மாறி உட்காரலாம் என எழுந்தான்.

அப்போது இடம் தேடி வந்த ஒரு நடுத்தர வயது ஆசாமி, இவனருகே வந்ததும், இவன் தோளை அழுத்தி, 'பரவாயில்லை உட்காருங்க சார்!' என்றான்.
'அடடே, துணைக்கு ஆள் வந்திடுச்சி' என்று நிம்மதி அடைந்தான் தாம்பு.

அப்போது முன் சீட்டின் பின் பக்கத்தில் இவனுக்கு முன்பாக  சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஒரு சீட்டைப் பார்த்தான் தாம்பு. அதை எடுத்து பி(வி)ரித்துப் படித்தான். அது ஒரு விளம்பர பிட் நோட்டீஸ்.
'பூ, மலர் அலங்காரத் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்' என்று போட்டு முகவரி, தொலைபேசி எண்கள் அனைத்தும் அதில் குறிக்கப் பட்டிருந்தன.

அதைப் படித்து குழம்பிப் போய் பக்கத்து இருக்கை ஆசாமியைப் பார்த்தான்.

நோட்டீஸைப் பார்த்துவிட்டு அந்த ஆசாமி, "சார், அலங்காரம் ஆர்டர் பண்ணனுமா? என் ஃபோன்ல கால் பண்ணவா?" என்று செல்ஃபோனை எடுத்தான். 'விட்டால், கால் டாக்சியில் அந்த அட்ரஸுக்கே கொண்டுபோய் விட்ருவான் போல' என பயந்த தாம்பு, "இல்லை, இதிலே 'பூ மலர்
அலங்காரம்'னு போட்ருக்கே, பூ-ன்னா என்ன?
மலர்-னா என்ன?"
என்று கேட்டான்.

அந்த ஆசாமி பலமாக சிரித்துக் கொண்டே,
"இது தெரியாதா?
பூக்குறது 'பூ'.
மலர்-ரது 'மலர்'. அவ்வளவுதான்!" என்று விளக்கம் கொடுத்தான்.

நம்ம தாம்பு அரண்டுபோய் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே, 'என்னென்ன பொருட்கள் வாங்கணும்' என்று லிஸ்ட் மனனம் செய்ததை திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'காய்கறிலாம் வாங்கணும்.
கடைசியா தக்காளி வாங்கி அ(இ)டி படாமல் மேலே வச்சிக்கணும்.
ஜீனி , பால், காப்பித் தூள்,
மிளகாய்த் தூள்
எல்லாம் வாங்கணும்.
எல்லாத்தையும் டெ(டே)ஸ்ட் பண்ணி வாங்கச் சொன்னாளே?' என்று மனைவியை நினைத்துக் கொண்டான்.

'ஜீனி பால் காஃபித் தூள் எல்லாத்தையும் வாங்கி எப்படி டெஸ்ட் பண்றது? மூனையும் சேர்த்து காஃபி போட்டு குடிச்சிப் பார்த்து வாங்கணுமோ?
மளிகைக் கடைக்காரர் மூஞ்சிலயே தண்ணிய ஊத்திடுவாரே!' என்று குழம்பி-னான்.

'மிளகாய் பொடி எப்படி டெஸ்ட் பண்றது? உறைக்குமே?' என்ற உண்மை உறைத்தது.

நடத்துனர் பிகில் ஊதியதும் சிற்றுந்து நின்றது.
"சார், நீங்க எங்கே இறங்கணும்?" என்று சந்தேகத்துடன் இவனைப் பார்த்து கேட்டார் அவர்.

ஜன்னல் வழியே பார்த்தான் தாம்பு. 'தமிழ் பூக்கடை' என்ற கடை போர்ட் தெரிந்தது.
அடித்துப் பிடித்து இறங்கினான்.

அடடா, இவன் இறங்க வேண்டிய இடம்
'பூக்கடை நிறுத்தம்' அல்லவோ?
ஆனால், பூக்கடையைப் பார்த்தும் இறங்கி விட்டான்.

ஆக, 'மனைவியின் இன்றைய ஆராதனை ஆரம்பம் நிச்சயம்' என்று முடிவு செய்து கொண்டவன்,
அடுத்த மூன்று நிறுத்தம் தாண்டியுள்ள இடத்திற்குப் போவதற்கு பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அடுத்த பேருந்திலும்
காய்கறி மளிகைக் கடையிலும்
இதேபோல ஏதாவது ஒரு வம்பு வரும்
என்று பயந்து போய் நிற்கிறான்
மிஸ்டர் வம்பு,
இல்லை இல்லை
மிஸ்டர் தாம்பு
என்கிற மிஸ்டர் தாமோதரன்!

******


இந்த இதழில் வெளியான எனது விமர்சனக் கடிதம்!



'தேன்சிட்டு' மின்னிதழ் ஆசிரியர் அவர்களுக்கு,

ஆகஸ்ட் 2020 மாதத்தின் இதழ் படித்தேன்!
'நகைச்சுவை சிறப்பிதழ்' என்பது பக்கத்துக்குப் பக்கம் நிரூபித்துக் கொண்டிருந்தது. தனி ஒருவனாய் தங்கள் உழைப்பில் மலர்ந்து சிரிப்பு பரப்பிய சிறப்பான மலர்!

'மாபெரும் நகைச்சுவை சிறுகதைப் போட்டி'யின் பரிசுக் கதைகளும் சிரி(ற)ப்பாய இருந்தன.

ஒருவரே அனைத்தும் தயாரிப்பு என்பதால் நிறைய பிழைகள் காண முடிந்தன.

காசிநாதன் சார் எழுதிய கட்டுரையில் பாடலாசிரியர் தஞ்சை ராமைய்யா தாஸ் பெயரையே காணவில்லை.

மலர்மதி சாரின் கதையின் இடையிடையே,
1, 2, 3 என எண்கள் வருகின்றன.
அத்தியாய எண்களா என பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. வேர்ட் ஃபைலாக அனுப்பும்போது குறிக்கப்பட்ட பக்க எண்களும்  கதையில் இடையிடையே வந்துவிட்டன.

கிரேசி மோகன் பற்றிய கட்டுரையில் வார்த்தைகள் பல இடம் மாறி, வாக்கிய அமைப்பை படிக்க சிரமம் தந்தன.

ஹரிகோபி சார் பற்றிய அறிமுகத்தில் கடைசி வரியில் வார்த்தை குழப்பம்.

படித்து சிரிக்க, இரசிக்க நல்லதொரு மலர்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்.


எனது சிறுகதையையும் குறைகளைச் சுட்டிக்
காட்டியபோதிலும் பரந்த மனதுடன் விமர்சனக் கடிதத்தையும் வெளியிட்ட தேன்சிட்டு ஆசிரியர்
எஸ். சுரேஷ் பாபு அவர்களுக்கு நன்றிகள்!


தேன்சிட்டு இணையதள முகவரி:

https//:thenchittu.com


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

5 comments:

KILLERGEE Devakottai said...

கதை சிற(ரி)ப்பாக இருக்கிறது வாழ்த்துகள் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பாராட்டுகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@KILLERGEE Devakottai...

சிரித்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திண்டுக்கல் தனபாலன்...

அருமையாகப் பாராட்டினீர்கள் சார்! நன்றி!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பாராட்டுகள்.

நண்பர் சுரேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...