#189. எழுத்தாளர் மலர்மதியின் 'முத்தம் கேட்கும் நேரம்' புதினம் விமர்சனம்!
நண்பர் எழுத்தாளர் திரு. மலர்மதி அவர்கள் எழுதிய பரபரப்பு, விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்த குடும்ப நவீனம், 29/07/2026 தேதியிட்ட தேவியின் கண்மணி வார இதழில், 'முத்தம் கேட்கும் நேரம்!' என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் படித்து விட்டு இந்தியா திரும்புகிறான் தொழிலதிபர் மணிவாசகத்தின் மகன் ராஜா என்கிற இளைஞன்! அவன் தனது நண்பனைப் பார்க்க கிராமத்துக்குச் செல்லும் போது அங்கே, தனது அத்தை மகள் தான் என்று தெரியாமலேயே ரோஜாவை விரும்புகிறான்.
இந்தக் காதலுக்கு ரோஜாவின் அண்ணன் பாண்டியன் மற்றும் அவனது நண்பன் பைரவன் இவர்களின் எதிர்ப்பு ஒரு புறம்!
ரோஜாவின் அம்மாவான தனது தங்கை லோகநாயகியுடன் ஏற்பட்ட குடும்பப் பகை காரணமாக, ரோஜாவுடனான ராஜாவின் காதலை எதிர்க்கும் அப்பா மணிவாசகம் ஒருபுறம்!
தனது மகள் பானுவுக்கு ராஜாவை சம்பந்தம் பேச விரும்பியபோது, ராஜா அதை மறுத்ததினால் அவனை பழிவாங்கத் துடிக்கும் தொழிலதிபர் ராஜசேகர் ஒருபுறம்!
இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் என்கிற ராஜாவின் கிராமத்து நண்பன், ராஜா, ரோஜா இருவரின் காதலுக்கு உதவுகிறான்!
ராஜசேகரின் சதித்திட்டத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள்?
பாண்டியனும் பைரவனும் மனம் மாறினார்களா?
ராஜாவின் அப்பா மணிவாசகம் அவனது திருமணத்திற்குச் சம்மதித்தாரா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை 96 பக்க தனது நவீனத்தில் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் திரு.மலர்மதி அவர்கள்!
கதையில் கொலை, ரத்தம் எதுவும் வரவில்லை என்று நினைத்தாலும் கூட, இறுதிக்கட்டத்தில் நேர வெடிகுண்டை (Time Bomb) கொண்டு வந்து விட்டார் கதாசிரியர்!
கதை முழுவதும் தொலைபேசி, அலைபேசி, வாட்ஸ் ஆப் எதுவுமே வரவில்லை; ஆனால் ஓரிடத்தில் இமெயில் பயன்பாடு வந்து விட்டது!
தேவியின் கண்மணி வார இதழுக்கு ஒரு கோரிக்கை! இப்பொழுது எல்லாப் பத்திரிகைகளிலும் சிறுகதை ஆசிரியரின் புகைப்படங்களைப் பிரசுரிக்கிறார்கள்! முழு நவீனம் எழுதும் கதாசிரியரின் பாஸ்போர்ட் புகைப்படங்களை தேவியின் கண்மணி இதழிலும் அட்டையிலோ அல்லது கதை ஆரம்பிக்கும் பக்கத்திலோ வெளியிடலாமே?
கதாசிரியர் அவர்கள் மேலும் பற்பல புதினங்களை, சிறுகதைகளைப் படைத்து நம்மை மகிழ்விக்க அன்புடன் வாழ்த்துகிறேன்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


