...பல்சுவை பக்கம்!

.

Sunday, August 11, 2024

'பரிவை படைப்புகள்' நூல் விமர்சனம் #181


'பரிவை படைப்புகள்' நூல் விமர்சனம் #181





பரிவை சே. குமார் அவர்கள் எழுதிய 22  சிறுகதைகளின் தொகுப்பு தான் 'பரிவை படைப்புகள்'.

கலக்கல் ட்ரீம்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலி(ன் அட்டையி)ல் பரிவை சே. குமார் அவர்களின் மந்தகாசச் சிரிப்புடன் முழு அட்டைப்படம்.

இந்தக் கதைகள் அனைத்துமே முழுக்க, முழுக்க கிராமத்து நிகழ்வுகள்தான்! 

'இதில் இருக்கும் கதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்தவைகளில் இருந்து எடுத்து தொடுத்தவை தான்! நான் எழுதும் பெரும்பாலான கதைகள் கிராமத்து மனிதர்களின் வாழ்வின் வலிகளை மட்டும்தான் பேசி இருக்கும்!' என்று  என்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சே.குமார்.

ஓர் ஊரில் குறி சொல்பவர்கள் இருவர் இருப்பார்கள். அதில் ஒருவருக்குத்தான் புகழ் வெளிச்சம், மக்கள் வருகை, பணப்புழக்கம் ஆகியன அதிகமாக இருக்கும். அவர் சொல்லும் குறிகளை, பலா பலன்களை  அனைவரும் நம்புவார்கள். அவர் சொல்லும் பரிகாரங்களை அதிக தட்சணையுடன் செய்து முடிப்பார்கள். ஆனால் மற்றவர் வெகு எளிமையாக இருப்பார். அவரை 'குடிகாரன்' என்று அனைவரும் திட்டுவார்கள். ஆனால் அவர் குறி சொல்வது உடனடியாக நடக்கும். ஜாதக தோஷம், வாழ்வியல் சுகவீனங்கள் இருப்பவர்கள் யாரிடம் போய் குறி கேட்பார்கள்?
இது போன்ற நிகழ்வுகளை 'சாமியாடி' 
(எனும்) கதையில் காணலாம்.

கிராமத்து மக்கள் தாங்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடு, மாடு போன்ற பிராணிகளை தங்களது மக்கள் செல்வமாகவே பார்ப்பார்கள். பாசம் காட்டி வளர்ப்பார்கள்! தான் வளர்க்கும் ஆடு நோயுற்றிருக்கும் போது, நோய்க்கான மருந்துகள் கொடுத்தும் நோய் தீராவிட்டால், தன் கண்முன்னே அந்த ஆட்டின் அவலத்தைப் பார்த்து கண் கலங்கி மனம் வருந்தும் ஒரு விவசாயி (சின்னசாமி) என்ன செய்வார்? இந்த கேள்விக்கான பதில் தான் 'சின்னசாமியின் செவப்பி' என்கிற கதை!

பிறக்கும் முன்பிலிருந்தும் பிறந்ததில் இருந்தும் தங்களது குழந்தைகளை வளர்த்துப் பேணிப் பாதுகாத்து, அவர்களைப் படிக்க வைத்து, வேலை அமைத்துக் கொடுத்து, மண வாழ்க்கை கொடுத்து, குடும்ப வாழ்க்கையில் அவர்களை ஈடுபடுத்தி ஒரு குடும்பஸ்தனாக மாற்ற கஷ்டப்பட்டு உழைப்பது அப்பாவும் அம்மாவும். ஆனால் அந்தப் பிள்ளைகள், தங்களது பெற்றோர்களின் இறுதிக் காலத்தில் அவர்களை மதிக்காமல், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதோடு அவர்களை பிரித்து வைத்து, சின்ன மகன் வீட்டுக்கும் பெரிய மகன் வீட்டுக்கும் அவர்களைப் பந்தாடுவது  கொடுமை!
இதை கண்முன்னே சித்திரமாக காட்டுவது 'இணை' என்கிற கதை!

மனிதனாய் இருப்பவன் அவனுள் மது என்னும் சரக்கு இறங்கியதும் மிருகமாக மாறிவிடுகிறான்!
மது எனும் விஷம் குடித்தவன் தன்னிலை மறந்தவனாய் தடுமாறி, உற்ற மனைவியை, பெற்ற பிள்ளைகளைப் போட்டு அடித்து, உதைத்து, சித்திரவதை செய்வதை பல காலமாய் கண்டும் கேட்டும் வருகிறோம். 
இதனால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு.
'கடவுளின் கணக்கு' கதையில் இதைப் படிக்கலாம்.

அழகாய் இருக்கும் பெண் அழகாய் இருக்கும் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்; அதுபோல ஓர் அழகில்லாத பெண் அழகில்லாத ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் நியதியும் இல்லை. காலத்திற்கு தகுந்தாற்போல், சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அழகு நிலையில்லாதது; அன்பே நிலைத்திருக்கக் கூடியது. இதை தனது 'பட்டாம்பூச்சி' என்கிற கதையின் மூலம் உணர வைத்திருக்கிறார் ஆசிரியர்.

இங்கே நான் மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்.  ஆனால் 22 கதைகள் மொத்தமும்  கிராமமும் அதைச் சார்ந்த வாழ்வியலும் மட்டும்தான்.

இந்தக் கதைத் தொகுப்பை வாசித்தால், ஒரு வெள்ளந்தியான எளிய மக்கள் வாழுகின்ற ஒரு கிராமத்துக்குச் சென்று வந்த திருப்தி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புக்கு:
கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
தொலைபேசி: 9840 96 7484,
இமெயில்: kalakkaldreams@gmail.com

விமர்சித்தவர்:
நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.


பக்கங்கள் 233.
விலை ரூபாய் 250.


நன்றி: 'தமிழ்நெஞ்சம்' மின்னிதழ், ஆகஸ்ட் 2024.






. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, June 5, 2024

'எடுக்கவோ? கோர்க்கவோ?' நூல் விமர்சனம். #190

  'எடுக்கவோ? கோர்க்கவோ?' நூல் விமர்சனம். Book review #190







குடந்தை பரிபூரணன் அவர்களின் 'எடுக்கவோ கோர்க்கவோ...' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் உள்ளன.

சமூகத்தில் நாம் தினசரி கடந்து செல்லும் சம்பவங்களை இவர் அழகாக கதையாக கோர்த்துள்ளார்.

இதில் முதல் கதையாக  பொதிகை சாரல் இதழில் பரிசு பெற்ற கதையான 'தாளுண்ட நீர்'.

அடிபட்ட கோழிக்கு வைத்தியம்  பார்த்து வளர்த்து வரும் தம்பதிக்கு நாட்டுக்கோழி முட்டைகளை வழங்குவதோடு தம்பதிகளின் மகனின் உயிரை காப்பதற்கு உதவியும் செய்கிறது அந்தக் கோழி.

உடல் நலம் தேறி பையன் திரும்பி வரும்போது அந்த கோழியை அங்கே காணவில்லை.

செய்த உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றதாக நாம் அறிய முடிகிறது; இறைவன் நடத்தும் திருவிளையாடல்.

"ஐயோ, ஐயோ! வேண்டாம் வேண்டாம்... கொல்ல வேண்டாம், விட்டுடுங்க ஐயா ...!"
இது 'காமதேனு' எனும் சிறுகதையின் ஆரம்ப வரி.

வரதராசு என்கிற விவசாயி, மாடு விற்று பணம் எடுத்து வருகையில் இரவு நேரமாகிவிட்டதால் ஒரு வீட்டின் திண்ணையில் படுக்கிறார்.
அவரது இடுப்பில் பணக்கட்டு இருப்பதை அந்த வீட்டின் உரிமையாளரான மந்திரவாதி பார்த்துவிட்டு வரதராசுவைக் கொல்லும் நோக்கத்துடன் அறிவாளால் வெட்ட வருகிறான். 
பிறகு நடந்தது என்ன என்பதை மர்மக் கதையின் சுவாரசியத்துடன் எழுதியுள்ளார் கதாசிரியர்.

மாதா கோயில் சப்பரம் செபத்தியார் தெருவிற்குச் செல்லக்கூடாது என்று நாட்டாண்மை மற்றும் அவரது சாதிக் குழுவினர் சொல்வதை ஏற்காமல் அத்தெருவுக்கு சப்பரம் செல்வதற்கு மரியதாசும் சாமியாரும் எப்படி வழி காண்கிறார்கள் என்கிற 'சாதி ஏற்றத்தாழ்வு' பற்றிய கதையாக வருவது 'அருகுபோல் வேரோடி' சிறுகதை.

' 'வயிறு நம் உயிரு' என்று தெரியாமலா கும்பகோணம் டாக்டர் நூல் எழுதியிருக்கிறார்' என்று ஒரு கதையில் ஒரு வரி வருகிறது. ஏன் அப்படி எழுதியுள்ளார் என்பதை அறிய உண்மையான கதை மாந்தர்களை வைத்து உண்மைக் கதையாக எழுதியுள்ள 'மருந்து' கதையை படியுங்கள்.

கோழிக்கறி, முட்டை இவற்றை விற்கும் கறிக்கடைக்காரன் ஒரு விளம்பரக் கவிதை எழுதி கேட்கிறான் கவிஞரின் மனைவியிடம். "பத்திரிகைகளுக்கு எழுதுவேனேத் தவிர கோழிக்கடை விளம்பரத்திற்கு பாட்டோ, கவிதையோ எழுத மாட்டேன்" என அடம் பிடிக்கிறார் கவிஞர். இறுதியில் கவிதை எழுதினாரா என்பதை நகைச்சுவை ததும்பு எழுதியுள்ளார் திரு.பரிபூரணன் அவர்கள்,  'கோழிக்கறி, முட்டை மற்றும் ஒரு கவிதை' சிறுகதையை. 'கணையாழி' இதழில் வெளிவந்த சிறுகதை இது.

முன் காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பிட்டு பார்த்து, ஏன் புதிது புதிதாக பிரச்சனைகள் தோன்றுகின்றன என ஆராய்ந்து நறுக்கென்று முடிவு எடுப்பதை சுருக்கென்று எழுதியுள்ள கதை 'முள்ளில் ரோஜா'!

தோட்டத்தில் கத்திரிக்காய் பயிரிடும் ஒரு விவசாயி... 
அந்தக் கொல்லையை சேதம் பண்ணவும் விவசாயியின் காலை வாரி விடவும் எதிர்த்தரப்பில் இருவர்...
வியாபாரிக்கோ இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருச்சியில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை.
முன்பும் இதே போல் இரவில் யாரையாவது கொல்லைக்கு  காவலாக வைத்து விட்டு சென்றாலும் கூட, பயிர்கள் சேதமடைந்து விடுகின்றன; தவிர்க்க முடியவில்லை.
இக்கட்டாலும் சூழ்நிலையில் அந்த விவசாயி என்ன செய்தார்? விடை 'காவல்' சிறுகதையில்.

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 கதைகளும்  ஒவ்வொன்றும் வேறு, வேறு பாணியில் எழுதப்பட்டுள்ளன. இங்கு நான் இடம் பற்றாக்குறையினால் அனைத்துக் கதைகளையும் விமர்சனம் செய்யவில்லை. 

இந்தக் கதைகளைப் படித்தால் ரசிக்கலாம்! அவசியம் படியுங்கள்; ரசியுங்கள்.

நூல் தேவைக்கு:
கதாசிரியரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
63845 38289.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

['தமிழ் நெஞ்சம்' ஜூன் 2024 மின் மாத இதழில் வெளியானது.]








. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, May 25, 2024

எழுத்தாளர் எஸ்.எஸ்.பூங்கதிர் - நினைவுகள் #189




திரு.எஸ்.எஸ். பூங்கதிர் உடன் நான்! நினைவுகள்!!

சுமார் 35 ஆண்டுகளாய் எழுத்துத் துறையில் படைப்புகள் தந்தவரும் திரு.மலர்சூர்யா அவர்களின் மூத்த சகோதரரும் பாக்யா இதழின் ஆசிரியர் குழு அங்கத்தினரும் 'கதிர்'ஸ்' மற்றும் 'கவிமாடம்' மின் இதழ்களின் ஆசிரியரும் எனது அன்பு நண்பருமான திரு. எஸ்.எஸ். பூங்கதிர் அவர்கள் இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்.
.
தமிழக எழுத்தாளர்கள் (வாட்ஸ்ஆப்) குழுவில் இணைந்த பின்தான் எஸ். எஸ். பூங்கதிர் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்ஸ் இதழை ஆரம்பித்தார். வெளியான இதழ்களில் காணப்பட்ட பிழைகளை அவருக்குத் தெரிவிக்க ஆரம்பித்தேன்.

பிறகு இதழ் வெளியாகும் முன்னே எனக்கு அனுப்பி, பிழைகளை திருத்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
நானும் திருத்தங்கள் செய்து அனுப்ப ஆரம்பித்தேன்.

ஒரு காலகட்டத்தில் "கதிர்'ஸ் இதழின் ஆசிரியர் பக்கத்தில் உங்கள் பெயரையும் (சேர்த்துப்) போடவா?" என்று கேட்டார். நான் "வேண்டாம் சார்" என்று மறுத்து விட்டேன். 
.
பிறகு நான் நமது குழுவில் ஒரு பக்கக் சிறுகதைப் போட்டி நடத்தும் போது,
பூங்கதிர் அவர்களை நடுவராக இருக்குமாறு கேட்டேன். சம்மதித்தார். 

தேர்வு பெறும் கதைகளில் 20 கதைகளை, கதிர்'ஸ் இதழில் வெளியிடவும் ஒப்புக்கொண்டார்.

அப்போது வாட்ஸப்பில் பேசும்பொழுது "சார், உங்கள் உருவத்திற்கு உங்கள் குரல் மிக இளமையாக உள்ளது" என்று பாராட்டினார். மாஷா அல்லாஹ்.
.
இடையே கதிர்'ஸ் உடன் 'கவிமாடம்' என்ற இதழையும் ஆரம்பித்து நடத்தி வந்தார்.

பிறகு, "ஈரிதழ்களிலும் 'கௌரவ ஒத்துழைப்பு' என்று உங்கள் பெயரைப் போடுகிறேன்! எனக்காக ஒத்துக்கொள்ளுங்கள்" என்று கேட்டபின் ஒத்துக்கொண்டேன்! 20/பிப்ரவரி/2024 இதழிலிலிருந்து ஆசிரியர் குழு பக்கத்தில் எனது பெயரையும் இணைத்து வெளியிட ஆரம்பித்தார்! அப்படி நான் சம்மதித்ததற்கு 'ஐ லவ் யூ சார்!' என்று பதிலளித்தார்.
.
இதழ்கள் வெளியானதும் அதன் இறுதி வடிவம் எனக்கு அனுப்பி, "வெளியிடலாமா சார்?" என்று கேட்டுக் கொள்வார். நானும் "ஓகே சார்" என்று சொன்னதும் வெளியிடுவார். சில நேரங்களில் ஒரே கவிதையை இரு வேறு டிசைன்களில் டைப் செய்து இரண்டையும் எனக்கு அனுப்பி "இதில் எதை தேர்வு செய்யலாம்?" என்றும் கேட்பார்.
.
28/04/2024 அன்று நான் பாண்டிச்சேரி சென்ற போது "சந்திக்க வருகிறேன் சார்" என்று தகவல் கொடுத்தேன்!
ஆனால் அவர்  மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டதால் அன்று சந்திக்க முடியவில்லை! தனது மகளை வந்து என்னைச் சந்திக்கச் சொல்வதாக கூறினார். "பரவாயில்லை சார். அடுத்த முறை வரும்போது சந்திக்கலாம் சார்" என்று சொல்லிவிட்டேன். சந்திக்க முடியாமலே விடைபெற்றுவிட்டார்! 

மனதிற்கு நெருக்கமான ஒரு நண்பரை இழந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறேன்!

ஆழ்ந்த வருத்ததுடன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன், 
25/05/2024.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, March 9, 2024

ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் - ஐந்து தொகுதிகள் (188)


ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் - 5 தொகுதிகள்! (188)




பிரபல எழுத்தாளரும் அன்பு நண்பருமாகிய சீர்காழி திரு. ஜூனியர் தேஜ் அவர்கள், தான் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் எழுதிய சிறுகதைகளை 5 தொகுதிகளாக புஸ்த்தகா நிறுவனம் மூலமாக வெளியிட்டுள்ளார்கள்!

முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எனது வாழ்த்துரையை இங்கே வழங்குகிறேன்!


.

.

.

வாழ்த்துரை!

 'ஜூனியர் தேஜ்' என்று பரவலாக அறியப்படுகின்ற அன்பர் திரு. வரதராஜன் அவர்கள், ஓவிய ஆசிரியர் மட்டுமல்ல; மனநல ஆலோசகரும் கதாசிரியரும் ஆவார்.

ஆகவே அவருடைய கதைகளில் சமூக  முக்கியமான பிரச்சனைகளும் இருக்கும். அதனுடைய தீர்வுகளும் இருக்கும்.

ஆசிரியர் அவர்களுடைய  சிறுகதைகள் பலவற்றை முன்பே நான் அவருடைய வலைப்பூவில் படித்து விட்டேன்.
(நானும் ஒரு வலைப்பூ  வைத்துள்ளேன்.)  
இப்போது அவர்  அனுப்பிய போது(ம்) மறுபடியும் அனைத்து கதைகளையும் படித்தேன்.

 தொழிலதிபர் சோப்ராவிடம் அந்த வயது முதிர்ந்த முதியவர் கேள்விகள் கேட்டு, எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, காட்டும் வழிகாட்டல் நல்லதொரு உத்தி! ('பூமி இழந்திடேல்' சிறுகதை)

 இரசாயன முறையில் விவசாயம் செய்வதால் மண்ணின் இயற்கை தன்மை அழிகிறது. இயற்கை விவசாயம் செய்யும் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களைப் பார்த்து, சாயாவனம் ஒருவனாவது ஒலி மாசுவை குறைப்பதற்காக ஒலிபெருக்கிகளை தவிர்ப்பது நல்லதொரு ஆரம்பம். பூமி பாதுகாக்கப்பட்டால் மக்களும் நலவாழ்வு வாழ்வார்கள்! ('கற்றது ஒழுகு' சிறுகதை.)

 சில சமயங்களில் ஜாதியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் கணவான்கள், சில சமயங்களில் அதை எதிர்ப்பது ஏன்? இதுதான் மகேஷுக்கு குழப்பம்!
ஆனால் தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் தாங்கள் விரும்பும் முடிவை எடுக்கின்றனர் மக்கள் என்பதை அவன் பெரியவனானதும் உணர்ந்து கொள்வான்.
('ஜாதின்னா என்ன?' சிறுகதை.)

 'குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்! குழந்தை தொழிலாளர்களை மீட்போம்!!' என்று வீர வசனம் பேசி  சிறப்புரைகள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  தங்கள் வீடுகளிலேயே அதை ஊக்குவிப்பதுதான் மகா கொடுமை! இவர்களெல்லாம் 'வாய்ச் சொல்லில் வீரனடி' இரகம்தான்! ('பயிற்சிப் பட்டறை' சிறுகதை.)

 இப்படியாக அனைத்து கதைகளையுமே பாராட்டிக் கொண்டே சென்றால் தனியாக புத்தகம் போட வேண்டி வரும்.

ஆசிரியர் அவர்களின் கதைகளில் 'வளவள' என்று அதிகபட்ச இழுவையான வார்த்தைகள் இருக்காது. ஆனால் கதைக்குத் தேவையான நுணுக்கமான விவரங்களையும் அங்கங்கே இடை இடையே அமைத்திருப்பார்; வியப்பாக இருக்கும்!

ஆசிரியர் அவர்களின் இந்த சிறுகதை தொகுதி வெளிவர வாழ்த்துகள் வழங்குவதோடு, அடுத்தடுத்து தொகுதிகள் வெளிவரவும் கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் வெளிக்கொண்டு வரவும் முன்கூட்டியே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

விகடன் இணையதளத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான புதினமான 'கலியன் மதவு' என்ற புதினத்தையும் ஆசிரியர் அவர்கள் விரைவில் வெளியிட ஆவன செய்ய எனது வாழ்த்துகளையும் தெரிவித்து, வாழ்த்துரை வழங்கிட வாய்ப்பு வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்!  

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்,
01/01/2024.



புஸ்தகா நிறுவனத்தை தொடர்புகொள்ள:


மற்ற தொகுதிகளின் அட்டைப்படங்கள்:


.


 .

.




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை! இரசித்தவை!!#25 (187)

நகைச்சுவை! இரசித்தவை!! #25





























. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை! இரசித்தவை!#24 (186)!


நகைச்சுவை! இரசித்தவை!! #24
























. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...