
பயணங்கள் முடிவதில்லை!
பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.
நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.
அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.
அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.
ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.
கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.
ஒருநாள்.
பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.
கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.
டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.
அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.
அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.
பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.
குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


